மத்தியப் பிரதேசத்தில் விடுதி மாடியில் இருந்து குதித்து எம்பிபிஎஸ் மாணவர் தற்கொலை
மத்தியப் பிரதேசத்தில் எம்பிபிஎஸ் முதலாமாண்டு மாணவர் விடுதியின் 4ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டிருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜபல்பூரில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மருத்துவக் கல்லூரியின் விடுதி எண் 4 இன் நான்காவது மாடியில் இருந்து எம்பிபிஎஸ் முதலாமாண்டு மாணவர் ஷிவான்ஷ் குப்தா வியாழக்கிழமை மதியம் 12.30 மணியளவில் குதித்தார். பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் (ஐசியு) அனுமதிக்கப்பட்டார்.
இருப்பினும் அவர் பிற்பகல் 2.30 மணியளவில் பலியானார். ஷிவான்ஷ் சுமார் பதினைந்து வாரங்களாக கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததாகவும், ஆனால் உண்மையான பிரச்னையை யாருடனும் பகிர்ந்து கொள்ளவில்லை என்றும் அவரது நண்பர்கள் போலீஸாரிடம் தெரிவித்தனர்.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் பாஜகவின் அரசியல் முடிந்துவிடும்: ராகுல் காந்தி
மாநிலத்தின் ரேவா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷிவான்ஷ். அவரது தந்தை குருகிராமில் பணிபுரிகிறார். முதற்கட்ட போலீஸ் விசாரணையில், ஷிவான்ஷின் மொபைல் போன் போலீஸாருக்குக் கிடைத்துள்ளது. தற்கொலை முடிவு எடுப்பதற்கு முன்பு, அவர் தனது நண்பர்களுக்கு அனுப்பிய செய்திகளை போலீஸார் ஆராய்ந்து வருகின்றனர்.
உடல் மீட்கப்பட்டு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் ஜபல்பூர் போலீஸார் அவர் ஏன் தற்கொலை செய்துகொண்டார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].