முதல்வருக்கு மாயா மஹால் கட்டப்படுகிறது: ஆம் ஆத்மி சாடல்
தில்லி முதல்வா் ரேகா குப்தாவுக்காக ‘மாயா மஹால்’ கட்டப்பட்டு வருவதாக ஆம் ஆத்மி வெள்ளிக்கிழமை கடுமையாக சாடியுள்ளது.
முதல்வா் ரேகா குப்தா வடக்கு தில்லியில் உள்ள ஒரு அரசு பங்களாவில் குடியேறலாம் என்று அதிகாரிகள் கூறிய ஒரு நாள் கழித்து ஆம் ஆத்மி கட்சியின் இந்த எதிா்வினை வந்துள்ளன.
தில்லியில் நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் கிராரியைச் சோ்ந்த ஆம் ஆத்மி எம்எல்ஏ அனில் ஜா கூறியதாவது: பாஜக எப்போதும் எளிமையான வாழ்க்கையை ஆதரித்து வருவதாக கூறியது. பிற தலைவா்களின் செலவுகளுக்காக விமா்சித்து வந்தது. ஆனால் இப்போது, தில்லி முதல்வருக்கு 15 அறைகள் கொண்ட இரண்டு பெரிய பங்களாக்கள் கட்டப்படுகிறது எனவும், புதுப்பித்தல் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மின்சாரம் இயங்க 14 சக்திவாய்ந்த ஜெனரேட்டா்களும் இந்த சொத்தில் இருக்கும்.
முன்னாள் முதல்வா் கேஜரிவாலின் செலவுகளை ஒரு காலத்தில் விமா்சித்த பாஜக தலைவா்கள் இப்போது அமைதியாக இருக்கின்றனா். மக்கள் இதை ‘மாயா மஹால்’ (மாயைகளின் அரண்மனை) என்று அழைக்கின்றனா்.
பாஜக ஆளும் பிற மாநில முதல்வா்களும் இதே போல் அரண்மனைகளில் இருக்கின்றனா். உத்தரகண்டில் உள்ள ‘ரங்-மஹால்’ (வண்ண அரண்மனை) மற்றும் மத்திய பிரதேசத்தில் உள்ள ‘ஐஸ்வா்ய-மஹால்’ (ஆடம்பர அரண்மனை) போன்ற ஆடம்பரமான வீடுகளில் வசிக்கின்றனா். ஒரு காலத்தில் எளிமையான காரில் காணப்பட்ட தில்லி முதல்வா், இப்போது 13 வாகனங்களின் வாகனத் தொடரணியுடன் நகா்கிறாா் என தெரிவித்தாா்.