தில்லி முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது
தில்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 25 வயது நபர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
குற்றம்சாட்டப்பட்டவர் ஷ்லோக் திரிபாதி என அடையாளம் காணப்பட்டதாகவும், மோசடி நபரான அவர் அடிக்கடி தனது அடையாளத்தை மாற்றிக்கொள்வதாகவும் போலீஸ் வட்டாரம் தெரிவித்துள்ளது.
வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை இரவு உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத்தில் அவசர உதவி எண் 112ஐ தொடர்புகொண்டு அவர் மிரட்டல் விடுத்தார்.
உடனே இதுகுறித்துதில்லி போலீஸுக்கு காசியாபாத் போலீஸார் தகவல் கொடுத்தனர். மேலும் பஞ்சவதி காலனிக்கு ஒரு குழுவைவும் அனுப்பினர். அங்கிருந்துதான் அழைப்பு வந்ததாகக் கூறப்படுகிறது.
பாஜக ஆட்சியின் முதலாமாண்டு விழா: ஜூன் 20ல் ஒடிசா செல்கிறார் பிரதமர்!
இருப்பினும் அந்த நபர் பிடிபடாமல் தப்பினார் என்று காசியாபாத் காவல் உதவி ஆணையர் ரித்தேஷ் திரிபாதி தெரிவித்தார்.
காசியாபாத் காவல்துறை மற்றும் தில்லி காவல்துறையின் கூட்டு நடவடிக்கையில் திரிபாதி சனிக்கிழமை கைது செய்யப்பட்டார். நகரின் வடமேற்குப் பகுதியில் உள்ள தில்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு அலுவலகத்தில் அவர் விசாரிக்கப்படுகிறார்.
விசாரணையின் போது, தான் போன் செய்தபோது குடிபோதையில் இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டவர் போலீஸாரிடம் தெரிவித்தார்.