தேர்தல் ஆணையமே தப்பிக்க பார்க்காதே! -ராகுல் காந்தியின் கடும் விமர்சனம்
ஆம்பூர்: கோயில் தூய்மைப் பணிக்கு வந்த பெண்ணிடம் அத்துமீறல் - அர்ச்சகர் மீது வழக்கு பதிவு
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் தியாகராஜன் (40). இவர் அங்குள்ள அறநிலையத்துறைக்குச் சொந்தமான நாகநாதசுவாமி திருக்கோயிலில் அர்ச்சகராக இருக்கிறார்.
இந்த நிலையில், அர்ச்சகர் தியாகராஜன் மீது திருமணமாகாத 28 வயது இளம்பெண், மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்திருக்கிறார். அதில், ``தியாகராஜன் அர்ச்சகராக உள்ள கோயிலில் நான் கடந்த ஓராண்டாக தூய்மைப் பணிகளை மேற்கொள்ளும் உழவாரப் பணி செய்துவந்தேன். அப்போது ஏற்பட்ட பழக்கத்தில் என்னை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி வலுகட்டாயமாக பாலியல் உறவில் ஈடுபட்டார். இப்போது திருமணம் செய்துகொள்ளாமல் மிரட்டல் விடுத்து ஏமாற்றிவருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனக் கூறியிருந்தார்.
இந்த மனு மீது நடவடிக்கை எடுக்க ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையப் போலீஸாருக்கு எஸ்.பி ஷ்ரேயா குப்தா உத்தரவிட்டார்.

அதன்படி, அர்ச்சகர் தியாகராஜன் மீது 3 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கைது நடவடிக்கைக்குப் பயந்து அர்ச்சகர் தியாகராஜன் தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. பாலியல் புகாருக்குள்ளான தியாகராஜனுக்கு ஏற்கெனவே திருமணங்களாகி, 2 மனைவிகள் மற்றும் குழந்தைகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, மேற்கண்ட விவகாரம் தொடர்பாக அர்ச்சகர் தியாகராஜன் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் கோயில் செயல் அலுவலர் விளக்கம் கேட்டு குறிப்பாணை அனுப்பியிருக்கிறார்.
நற்பெயருக்கு களங்கம்
அந்த குறிப்பாணையில், ``நடந்த சம்பவம் இந்து சமய அறநிலையத்துறைக்கு அவப்பெயரையும், அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயிலின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், பக்த கோடிகளுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் ஒரு அசிங்கத்தையும் அவமானத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும், தாங்கள் நிரந்தர பணியாளராக இருக்கும்போது திருக்கோயில் பணியாளர்களுக்கான ஒழுக்கநெறிகளை கடைபிடிக்கவில்லை என்பதையே இது சுட்டி காட்டுகிறது. எனவே, தாங்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை ஏன் எடுக்கக் கூடாது? என்பதற்கான விளக்கத்தினை இக்கடிதம் பெற்ற 3 நாள்களுக்குள் செயல் அலுவலகத்தில் எழுத்துப்பூர்வமாக விளக்கத்துடன் நேரில் ஆஜராகி அறிக்கை சமர்பிக்க வேண்டும்’’ எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.