சென்னை: 'தடாவில் தொடங்கிய 'வடை' தகராறு' - மயிலாப்பூரில் நடந்த கொலை முயற்சி; என்ன நடந்தது?
சென்னை, மயிலாப்பூர் பகுதியில் வசித்து வரும் நண்பர்களான 17 வயதுடைய இரண்டு சிறுவர்கள் கடந்த 04.05.2025 அன்று இரவு வீட்டினருகே பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த அப்பகுதியைச் சேர்ந்த மைத்ரேயன் என்பவர் உட்பட 3 நபர்கள் சிறுவர்களிடம் வம்பு இழுத்திருக்கிறார்கள்.
அப்போது நடந்த வாக்குவாதத்தில் சிறுவர்களை மைத்ரேயன் தரப்பு தகாத வார்த்தைகளால் பேசியதோடு கத்திகளால் சிறுவர்களைக் குத்திவிட்டுத் தப்பிச் சென்றது.
இந்தச் சம்பவத்தில் காயமடைந்த இரண்டு சிறுவர்களும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டனர்.
இதுதொடர்பாக மயிலாப்பூர் போலீஸார், விசாரணை நடத்தி கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

பின்னர் போலீஸார் நடத்திய விசாரணையில் மயிலாப்பூரைச் சேர்ந்த மைத்ரேயன் (19), அவரின் கூட்டாளி கவியரசு (26) ஆகிய இருவரைக் கைது செய்தனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் கவியரசுக்கும் கத்திக்குத்து காயங்கள் ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தச் சம்பவத்தில் 17 வயது சிறுவன் ஒருவரிடம் விசாரணை நடந்து வருகிறது. இவர்களிடமிருந்து 2 கத்திகளை போலீஸார் பறிமுதல் செய்திருக்கிறார்கள். விசாரணையில் மைத்ரேயன் மீது ஒரு குற்ற வழக்கு நிலுவையில் உள்ளது தெரியவந்தது.
இதுகுறித்து மயிலாப்பூர் போலீஸார் கூறுகையில், ``கைது செய்யப்பட்ட மைத்ரேயன், கவியரசு மற்றும் காயமடைந்த சிறுவர்கள் என அனைவரும் ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள்.
இவர்கள் அனைவரும் நண்பர்களாக இருந்திருக்கிறார்கள். கடந்த மாதம் இவர்கள் அனைவரும் ஆந்திரா தடாவுக்கு பைக்கில் சென்றிருக்கிறார்கள்.
அங்குள்ள அருவியில் உற்சாகமாகக் குளியல் போட்டவர்கள் மதுவும் அருந்திவிட்டு சென்னைக்குத் திரும்பியிருக்கிறார்கள். வரும் வழியில் ஹோட்டல் ஒன்றில் சாப்பிட்டிருக்கிறார்கள்.

அப்போது மைத்ரேயன், எச்சில் கையில் வடை ஒன்றை எடுத்திருக்கிறார். அதை ஹோட்டல் ஊழியர் கண்டித்திருக்கிறார். இதனால் ஹோட்டல் ஊழியர்களுடன் மைத்ரேயன் சண்டைபோட்டிருக்கிறார்.
அதைக் காயமடைந்த சிறுவர்கள் தடுத்ததோடு சமரசப்படுத்தியிருக்கிறார்கள். அதனால் மைத்ரேயனுக்கும் சிறுவர்களுக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாகத்தான் இந்த கொலை முயற்சி சம்பவம் நடந்திருக்கிறது" என்றனர்.