சென்னை: லவ் டார்ச்சர்; இளம்பெண் வீட்டில் ரகளை - இளைஞரை கைது செய்த போலீஸ்!
சென்னை, வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய பெண் ஒருவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அந்தப் பெண்ணின் மூத்த மகளை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த கோகுல்குமார் என்ற இளைஞர் காதலித்து வந்திருக்கிறார். அதற்கு பெண்ணின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். ஆனாலும் கோகுல்குமார் தொடர்ந்து லவ் டார்ச்சர் கொடுத்து வந்திருக்கிறார். இதையடுத்து அந்தப் பெண்ணின் வீட்டார், கோகுல்குமாரின் வீட்டுக்குச் சென்று உங்கள் மகன், எங்கள் மகளிடம் பேச வேண்டாம் எனக் கூறியிருக்கிறார்கள். அதன் பிறகு கோகுல்குமார் அமைதியாக இருந்து வந்திருக்கிறார்.

இந்நிலையில், கடந்தசில தினங்களுக்கு முன்பு அதிகாலையில் பெண்ணின் வீட்டுக்குச் சென்ற கோகுல்குமார், உங்களின் இரண்டாவது மகளை நான் காதலிக்கிறேன் எனக் கூறியிருக்கிறார். அதனால் அந்தப் பெண்ணுக்கும் கோகுல்குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து அந்தப் பெண் வீட்டின் கதவை உள்பக்கமாக பூட்டிக் கொண்டு வீட்டிற்குள் சென்றிருக்கிறார். ஆனால் கோகுல்குமார் வீட்டின் கதவை உடைத்து வீட்டில் அத்துமீறி உள்ளே நுழைந்திருக்கிறார். பின்னர் அந்தப் பெண்ணை கீழே தள்ளி தாக்கியதோடு, வீட்டிலிருந்த ஜன்னல் கண்ணாடி மற்றும் வாஷ் பேசின் ஆகியவற்றை உடைத்திருக்கிறார். அதிகாலை நேரத்தில் நடந்த இந்தச் சம்பவத்தால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சத்தம் கேட்டு கண்விழித்தனர். அதனால் கோகுல்குமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்து அந்தப் பெண், ஐ.சி.எப். காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் (BNS Act) மற்றும் தமிழ்நாடு பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் (TNPHW Act) ஆகிய பிரிவுகளில் கோகுல்குமார் (22) மீது வழக்கு பதிவு செய்த போலீஸார் அவரைக் கைது செய்தனர். விசாரணைக்குப் பிறகு கோகுல்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.