செய்திகள் :

ஆக்கபூர்வ சீர்திருத்தம்!

post image

சரக்கு-சேவை வரி (ஜி.எஸ்.டி) விகிதக் குறைப்பு விரைவில் அமலுக்கு வரும் என்கிற பிரதமர் நரேந்திர மோடியின் சுதந்திர தின உரையைத் தொடர்ந்து இன்றுமுதல் சுமார் 357 பொருள்கள் மீதான வரிக் குறைப்புடன் ஜி.எஸ்.டி. 2.0 சீரமைப்பு அமலுக்கு வந்திருக்கிறது. நாடு தழுவிய அளவில் நடைமுறையில் இருந்த 17 வரிகள் மற்றும் 13 கூடுதல் வரிகளை ஒருங்கிணைத்து 2017 ஜூலை முதல் ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்தது. இப்போது அதில் மாறுபட்ட சூழலுக்கேற்ப சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2017-இல் அறிமுகப்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி. யில் 5%, 12%, 18%, 28% ஆகிய நான்கு விகிதங்களில் வரி விதிக்கப்பட்டுவந்தது. எந்த ஒரு புதிய திட்டத்துக்கும் குறைபாடுகள், பக்க விளைவுகள் இருப்பதுபோல ஜி.எஸ்.டி. என்கிற "ஒரு நாடு ஒரு வரி' என்ற முனைப்பும் பல சவால்களைச் சந்திக்காமல் இல்லை.

ஜி.எஸ்.டி. அறிமுகத்துக்குப் பிறகு, இந்தியாவின் வணிக நடைமுறைகள் சர்வதேச நடைமுறைகளுக்கு ஏற்ப மாறியிருப்பதை நாம் மறந்துவிடலாகாது. வணிகர்களின் அன்றாட வர்த்தக நடைமுறைகள் கணினிமயப்படுத்தப்பட்டு, முறையாக கணக்குத் தாக்கல் செய்யும் ஒழுக்கத்துக்கு அவர்களை ஜி.எஸ்.டி. பழக்கப்படுத்தி இருக்கிறது.

கடந்த எட்டு ஆண்டுகளில் ஜி.எஸ்.டி. என்பது தவிர்க்க முடியாத நடைமுறையாக மாறி இருப்பது நிஜம். இப்போது, அடுத்த கட்டமாக புதிய சில சீரமைப்புகளுக்கும் மாற்றங்களுக்கும் வரி விதிப்பு முறை உள்ளாக்கப்படுவது காலத்தின் கட்டாயம் என்றுதான் சொல்ல வேண்டும்.

நான்கு அடுக்கு ஜி.எஸ்.டி.யை இரண்டு அடுக்குகளாகக் குறைப்பது என்கிற முடிவு திடீரென்று எடுக்கப்பட்ட முடிவு அல்ல; கடந்த இரண்டு ஆண்டுகளாக இதுகுறித்த கோரிக்கைகள் எழுந்தவண்ணம் இருந்தன. ஜி.எஸ்.டி. கவுன்சிலும் மாற்றம் குறித்தும், சீர்திருத்தம் குறித்தும் விவாதித்து வந்தது. கடந்த டிசம்பர் மாதம் ஜெய்சால்மரில் கூடிய ஜி.எஸ்.டி. கூட்டத்திலும், மத்திய அமைச்சரவையிலும் இது பரிசீலிக்கப்பட்டிருக்கிறது.

ஏறத்தாழ 400 பொருள்கள் மீதான ஜி.எஸ்.டி. மாற்றப்பட்டிருக்கிறது. 357 பொருள்களின் மீதான வரி குறைக்கப்பட்டிருக்கிறது. வரிக் கட்டமைப்பில் மாற்றம், வரி விகிதங்களில் மாற்றம், வர்த்தக நடைமுறையில் வரி வசூலிலும், வரி தாக்கல் செய்வதிலும் எளிமைப்படுத்துதல் என தற்போது மூன்று சீர்திருத்தங்கள் ஜி.எஸ்.டி.யில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. கட்டமைப்பின் மாற்றத்தில் முக்கியமான மூலப்பொருள்கள் மீது அதிக வரி விதிக்கப்படும் நீண்டகால பிரச்னைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது.

391 பொருள்கள் மீதான ஜி.எஸ்.டி.யில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. முன்பு 5%, 12%, 18%, 28% என்று இருந்த வரிகள் இப்போது 5%, 18% என எளிதாக்கப்பட்டுள்ளன.

இன்னொருபுறம் உடல் நலத்துக்கும் சமுதாயத்துக்கும் தீங்கான புகையிலை உள்ளிட்ட பொருள்கள் மீதான 28% ஜி.எஸ்.டி. இப்போது 40% என்று அதிகரிக்கப்பட்டிருப்பது வரவேற்புக்குரியது.

33 உயிர் காக்கும் மருந்துகள் மீதான ஜிஎஸ்டி, வரி விதிப்பில்லாத 0% வரம்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. பல மருந்துகள் 12%, 5% வரம்புகளில் இருந்து 0% என மாறி இருக்கிறது. நோய் கண்டறியும் சோதனைக் கருவிகள் மீதான வரி 5% வரம்பில் சேர்க்கப்பட்டிருப்பது, தனிநபர் மற்றும் ஆயுள் காப்பீடு ஜி.எஸ்.டி.யிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருப்பது உள்ளிட்டவை வரவேற்புக்குரிய மாற்றங்கள்.

பட்ஜெட்டில் வழங்கப்பட்ட வருமான வரிச் சலுகைகளும், இப்போது அதிகரிக்கப்பட்டிருக்கும் ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்களும் பிரதமர் கூறுவதைப்போல நடுத்தர மக்களின் வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும். இதனால், அரசுக்கு ஏறத்தாழ ரூ.57,000 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது. மக்களிடம் கூடுதலாக செலவழிக்க ரூ.57,000 கோடி இருக்கும் என இதைப் பார்க்க வேண்டும்.

இதன் பலனை இந்தியாவின் தொழில்-வர்த்தகத் துறை அடையப் போகிறது. தங்களுக்குக் கிடைக்கும் லாபத்தை அந்த நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு முறையாக வழங்கினால் மட்டும்தான் பிரதமரும், நிதியமைச்சரும் எதிர்பார்க்கும் பொருளாதார இயக்கம் உருவாகும்.

வரிச் சலுகைகளை அவர்கள் அனுபவிக்காமல் பொதுமக்களுக்கு மடைமாற்றம் செய்கிறார்களா என்பதையும், அப்படி வழங்காதவர்களை தயங்காமல் தண்டிப்பதையும் அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

குறிப்பாக, மோட்டார் வாகனங்கள், ஏ.சி.க்கள் உள்ளிட்ட பொருள்களின் மீது தாராளம் காட்டும் நிறுவனங்கள், குறைந்த மதிப்புள்ள மக்களின் அன்றாட உபயோகப் பொருள்களிலும் முழுமையாக சலுகைகளை வழங்குகிறார்களா என்பதைக் கண்காணிக்க வேண்டும். அதுதான் அரசின் நோக்கத்தை நிறைவேற்றும்.

இப்போது வழங்கப்பட்டிருக்கும் இந்த சலுகைகள் பிகார் தேர்தலை கருத்தில் கொண்டு வழங்கப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சிப்பது அவர்களது அச்சத்தின் வெளிப்பாடு. டிரம்ப்பின் வரிவிதிப்புக்கான எதிர்வினை என்று பார்ப்பதுதான் ஆக்கபூர்வ சிந்தனை.

பிரதமர் தனது நேற்றைய உரையில் குறிப்பிட்டதுபோல "சுதேசிப் பொருள்களை விற்பதில் நாம் பெருமிதம் கொள்ள வேண்டும். இந்தியப் பொருள்கள் தனது தரத்துக்கான உலகளாவிய அங்கீகாரத்தைப் பெறவேண்டும்'. ஜி.எஸ்.டி. சீரமைப்பு கடைக்கோடி சாமானியனைச் சென்றடைய வேண்டும். அடுத்தகட்டமாக ஜி.எஸ்.டி.3.0 தாமதமின்றி நடைமுறைக்கு வரவேண்டும்.