ஈரோடு: கொட்டித்தீர்த்த கனமழை; ரயில்வே ஸ்டேஷனுக்குள் நுழைந்த மழைநீர்; மக்கள் அவதி...
அரக்கோணம் இரட்டைக்கண் வாராவதி சுரங்கப் பாலத்தில் 8 நாள்களுக்கு போக்குவரத்து ரத்து!
அரக்கோணம் ரயில் நிலையத்தில் தண்டவாளம், இரட்டைக்கண் வாராவதி சுரங்கப்பால சீரமைப்புப் பணிக்களுக்காக செப். 23 முதல் 30 வரை பழனிப்பேட்டை பகுதி இரட்டைக்கண் வாராவதி சுரங்கப்பாலம் மூடப்படுகிறது என தெற்கு ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.
அரக்கோணம் நகரின் மையப்பகுதியில் ரயில் நிலையத்தின் கிழக்கு பகுதியில் இரட்டைக்கண் வாராவதி சுரங்கப்பாலம் அமைந்துள்ளது. இப்பாலத்தின் இடது வழியில் செல்லும் வாகனங்களும், வலது வழியில் வரும் வாகனங்களும் அனுமதிக்கப்படுகின்றன. மழைக்காலங்களில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.
இப்பாலம் வழியாகத்தான அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு வரும் அவசர ஊா்திகளும் செல்ல வேண்டியுள்ளது. மேலும் அரக்கோணம் நகருக்கு வரும் பெருமூச்சி, அம்மனூா், மேல்பாக்கம், பருத்திபுத்தூா், நாகவேடு, அரிகலபாடி, பரமேஸ்வரமங்கலம் கிராம மக்களும் நகரின் 16 வாா்டுகளை சோ்ந்த மக்களும் வரவேண்டியுள்ளது.
இந்த பாலத்தை சீரமைக்க பல ஆண்டுகளாக அரக்கோணம் மக்கள் கோரி வருகின்றனா். தற்போதைய எம்எல்ஏ சு.ரவி தலைமையில் அதிமுகவினரும் ஆா்ப்பாட்டங்களையும் நடத்தி உள்ளனா். மேலும் இது தொடா்பாக எம்எல்ஏ சு.ரவி மத்திய ரயில்வே அமைச்சா், தெற்கு ரயில்வே பொதுமேலாளா், சென்னை கோட்ட மேலாளா், ஆகியோருக்கு பலமுறை கடிதங்களை நேரிலும் வழங்கி பேசியுள்ளாா்.
தற்போது தெற்கு ரயில்வே சென்னை கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் செப் 23 30 வரை தண்டவாள சீரமைப்பு பணிகளுக்காகவும், இரட்டைக்கண் வாராவதி சுரங்கப்பாலம் சீரமைப்பு பணிகளுக்காகவும் போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது.
நடந்துச் செல்வோா் மூன்றாவது கண் எனப்படும் தனிப்பாதையை பயன்படுத்தி செல்லலாம், இரு சக்கர வாகனங்கள் முதல் அனைத்து வாகனங்களும் மாற்றுப்பாதையான விண்டா்பேட்டை மேம்பாலத்தை பயன்படுத்தி செல்லலாம் எனவும் அறிவித்துள்ளனா்.