ஆம்பூர் அருகே அழுகிய ஆண் சடலம் கண்டெடுப்பு!
ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள ஏரியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சடலத்தை மீட்ட ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் உயிரிழந்தது யார்?, கொலையா? அல்லது தற்கொலையா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மின்னூர் பகுதியில் பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள ஏரியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக அங்கிருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் அழுகிய நிலையில் மண்டை ஓட்டுடன் இருந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு அழுகிய நிலையில் சடலமாக இருப்பவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் ?எனவும் கொலையா? அல்லது தற்கொலையா? எனவும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல், கடந்த மாதம் ஆம்பூர் அடுத்த சோலூர் பகுதியில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில் அப்பகுதியில் சுற்றித்திரிந்த மனநோயாளி என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
இருப்பினும், தொடர் மர்ம மரணங்களால் ஆம்பூர் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
வெளியூரில் கொலை செய்து இங்கு வீசிச் செல்கிறார்களா? என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொள்ள மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.