இந்தியாவிலிருந்து அமெரிக்கா திரும்பினார் துணை அதிபர் வான்ஸ்!
இந்தியாவில் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் மற்றும் அவருடைய குடும்பத்தினர் தாயகம் திரும்பியுள்ளனர்.
அமெரிக்காவிலிருந்து நான்கு நாள்கள் சுற்றுப் பயணமாக அந்நாட்டு துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் அவருடைய மனைவி உஷா வான்ஸ் மற்றும் அவர்களது 3 குழந்தைகள் கடந்த ஏப்.21 ஆம் தேதி இந்தியா வந்தடைந்தனர்.
மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஜே.டி. வான்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினரை வரவேற்றார். அவர்களுக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை மற்றும் பரதநாட்டிய கலை நிகழ்ச்சிகளின் மூலம் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கடந்த ஏப்.21 ஆம் தேதி தில்லியிலுள்ள அவரது இல்லத்தில், துணை அதிபர் வான்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினரை வரவேற்ற பிரதமர் மோடி அங்கு அவர்களுக்கு விருந்து அளித்தார். இந்தப் பயணத்தில் இருநாடுகளுக்கும் இடையிலான முக்கிய வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்த பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டது.
இத்துடன், ஜே.டி.வான்ஸின் மனைவி இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர் என்பதினால் அவர்களது குழந்தைகள் பெரும்பாலும் இந்தியாவின் பாரம்பரிய உடைகளையே அணிந்திருந்தனர்.
மேலும், இந்தியாவின் முக்கிய வரலாற்று சிறப்புமிக்க தளங்களை வான்ஸ் குடும்பத்தினர் சுற்றிப்பார்த்தனர். ஆக்ராவிலுள்ள உலகப் புகழ்பெற்ற தாஜ் மஹால், ஜெய்ப்பூரிலுள்ள அம்பெர் கோட்டை, மத்திய குடியைத் தொழில் எம்போரியம் ஆகிய இடங்களுக்கு நேரில் சென்று அவர்கள் கண்டுகளித்தனர்.

இதனைத் தொடர்ந்து, ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் நட்சத்திர விடுதியில் தங்கியிருந்த அவர்கள் தங்களது பயணத்தை முடித்துக்கொண்டு இன்று (ஏப்.24) காலை அமெரிக்காவுக்கு தனி விமானம் மூலம் திரும்பிச் சென்றுள்ளனர்.
முன்னதாக, பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்கு அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் தங்களது இரங்கல்களைத் தெரிவித்திருந்தனர்.
மேலும், நேற்று (ஏப்.23) ஜெய்ப்பூர் மாளிகைக்கு அவர்கள் செல்லத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில் பாதுகாப்பு காரணங்களினால் அது ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க:அட்டாரி-வாகா எல்லை மூடல்.. நாடு திரும்பும் பாகிஸ்தானியர்கள்