செய்திகள் :

கராச்சியில் நேரு, அயூப் கையெழுத்திட்ட சிந்து நதி உடன்பாடு! நேருவை வரவேற்ற லட்சம் பேர்!

post image

பாகிஸ்தானுக்குத் தற்போது இக்கட்டானதொரு சூழ்நிலையை ஏற்படுத்தும் விதத்தில் இந்திய அரசு நிறுத்திவைத்துள்ள வரலாற்றுப் புகழ்பெற்ற சிந்து நதி நீர் உடன்பாட்டில் கையெழுத்திட்டவர்கள் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேருவும் பாகிஸ்தான் அதிபர் அயூப் கானும்.

இந்த உடன்பாடு ஏறத்தாழ 65 ஆண்டுகளுக்கு முன், 1960 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி பாகிஸ்தானிலுள்ள கராச்சி நகரில் நடந்த விழாவில்  கையெழுத்திடப்பட்டது.

அதிபர் மாளிகைத் திடலில் அலங்கரிக்கப்பட்டிருந்த பந்தலில் நடந்த இந்த விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிறப்பு விருந்தினர்களாக  அழைக்கப்பட்டிருந்தனர். உடன்பாட்டில் இரு தலைவர்களும் கையெழுத்திட்டபோது, ஒட்டுமொத்த திடலும் விண்ணதிர பெரும் கரகோஷம் எழுப்பி வரவேற்றது. உடன்பாடு கையெழுத்திடும் முன்னரும் பின்னரும் ராணுவத்தினர் இரு நாடுகளின் தேசிய கீதங்களை இசைத்தனர்.

உடன்பாடு கையெழுத்திடுவதற்கு சில நிமிஷங்களுக்கு முன்னர் விழாப் பந்தலுக்கு ஜவாஹர் லால் நேருவும் அயூப் கானும் சேர்ந்தாற்போல வந்தனர். அவர்களுடன் உலக வங்கியின் துணைத் தலைவராக இருந்த இலிப் என்பவரும் வந்தார்.

இரு நாடுகளும் இந்த உடன்பாட்டை எட்டுவதில் பெரும் உதவி செய்த உலக வங்கி சார்பில் இலிப்பும் இந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டார்.

இந்தியாவின் சார்பில் பாசனத் துறை அமைச்சர் ஹபீஸ் முகமது இப்ராஹிம், இணை அமைச்சர் ஜெய் சுக்லால் ஹாத்தி, பாகிஸ்தான் சார்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் மன்சூர் காதிர், நிதித் துறை அமைச்சர் ஷாயிப், வெளியுறவுச் செயலர் இக்ரமுல்லா போன்றோர் கலந்துகொண்டனர்.

மேலும், பிரிட்டன் நாடாளுமன்ற துணைச் செயலர் தாம்சன், அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா, ஜெர்மனி, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் தூதர்களும் வந்திருந்தனர்.

சிந்து நதி தீரத்திலுள்ள அனைத்து நதிகளின் நீரைத் திருப்திகரமாகப் பகிர்ந்து கொள்வது பற்றி உடன்படுவதுடன், இவ்விஷயத்தில் இரு நாடுகளின் பொறுப்புகளையும் உரிமைகளையும்கூட உடன்பாடு வரையறுத்தது. சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து, சுமார் 12 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்துவந்த நதி நீர்த் தகராறு முடிவுக்கு வந்ததாக அப்போது இரு தரப்பும் கொண்டாடியது; உலகின் பல்வேறு நாடுகளும்கூட வாழ்த்தின; வரவேற்றன.

அமெரிக்க தலைவர்கள் பாராட்டு

இந்த உடன்பாடு எட்டப்பட்ட காலத்தில் அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் நடந்துகொண்டிருந்தது.

சிந்து நதி நீர்ப் பகிர்வு உடன்பாட்டை எட்டியதற்காக இந்தியா, பாகிஸ்தான் நாடுகளின் தலைவர்களை – நேருவையும் அயூப் கானையும் - பாராட்டி அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பணம் செலுத்தி நியூயார்க் டைம்ஸில் விளம்பரங்களை வெளியிட்டிருக்கின்றனர்.

இந்த விளம்பரத்தில் கென்னடி, லிண்டன் ஜான்சன் மற்றும் இரு கட்சிகளின் முக்கிய செனட்டர்களும் கையெழுத்திட்டிருந்தனர்.

விளம்பரத்தில், ‘தங்கள் மக்களின் பொது நலனுக்காக சிந்து நதி தீர தண்ணீரைப் பகிர்ந்து கொள்வதற்கான உடன்பாட்டில் கையெழுத்திட்டு தீர்க்க தரிசனத்துடன் நடந்துகொண்டும், எவ்வளவு சிக்கலான சர்வதேச பிரச்சினையாக இருப்பினும் பொறுமையுடன் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் தீர்வு காண்பது சாத்தியமே என்பதை உலகுக்கு எடுத்துக் காட்டியதற்காகவும் இந்தியப் பிரதமர் நேருவையும் பாகிஸ்தான் அதிபர் அயூப் கானையும் பாராட்டி வணங்குகிறோம்’ என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

புதிய உறவின் அடையாளம்!

இந்தியா – பாகிஸ்தான் இடையில் உருவாகிவரும் புதிய உறவின்  அடையாளம்தான் தன்னுடைய வருகையும் சிந்து நதி நீர்ப் பகிர்வு உடன்பாடும் என்று கராச்சி நகர்மன்றம் அளித்த வரவேற்பில் பேசிய பிரதமர் நேரு குறிப்பிட்டார்.

மிகுந்த தொலைநோக்குடனும் நல்லெண்ணத்துடனுமான நேருவுடைய அப்போதைய பேச்சின் ஒரு பகுதி:

“கடந்த காலத்தை மறந்துவிட வேண்டும் என்று விரும்புவதுடன் மட்டுமின்றி, எல்லைக்கு இருபுறமும் உள்ளவர்களிடையே புதிய உறவு முறையை ஏற்படுத்த வேண்டும் என்றும் விரும்புகிறோம். எனவே, நான் இங்கே வந்திருப்பது இந்த அடிப்படை உண்மையின் அடையாளம்தான்.

“பல்வேறு வாழ்க்கை முறையில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயுள்ள நெருக்கமான தொடர்பை வேறெந்த இரு நாடுகளுக்குமிடையே காண முடியாது. இரு நாடுகளுக்குமிடையில் இருந்துவந்த புராதன உறவு முறை மீண்டும் நெருக்கமடைந்து நட்புறவு நிலவுமென நம்புகிறேன்.

“இந்தியாவும் பாகிஸ்தானும் அண்டை நாடுகள் என்பது ஒருபுறமிருக்கட்டும். புவியியல் அடிப்படையில் இவ்விரு நாடுகளும் நெருங்கிய தொடர்பு கொள்ள வேண்டியது அவசியம் என்பதும் ஒருபுறமிருக்கட்டும். இரு சாராருக்கும் இடையில் என்னதான் தகராறு இருந்தபோதிலும் அவற்றுக்கிடையிலுள்ள உறவு முறையை அகற்றிவிட முடியாது என்பதைக் கவனிக்க வேண்டும்.

இரு சகோதரர்கள் சண்டை போட்டுக்கொள்ளக் கூடும். பழிச் சண்டைகூட போட்டுக்கொள்ளலாம். ஆனால், அவர்களின் சகோதர பாசத்தை அகற்றிவிட முடியாது.

“இந்த உடன்பாடு மிகவும் முக்கியமானது. ஏனெனில், இதுவொரு நீண்ட காலத் தகராறுக்கு முற்றுப் புள்ளி வைக்கிறது. இரு தரப்பிலுமுள்ள மக்களுக்கு – இவர்களின் பெரும்பாலோர் விவசாயிகள் – இந்த உடன்பாடு நன்மையைக் கொண்டுவருவதால் இதுவொரு முக்கியமான ஆவணமாகும். நமக்கு இடையே நம்பிக்கையை ஏற்படுத்துவதாலும் இந்த உடன்பாடு முக்கியத்துவம் பெறுகிறது.”

லட்சம் பேர் திரண்ட வரவேற்பு!

கராச்சியில் பிரதமர் நேருவுக்கு மக்கள் பெரும் வரவேற்பு அளித்தனர். நேரு ஜிந்தாபாத் என்று முழங்கியபடி, லட்சத்துக்கும் அதிகமான மக்கள் திரண்டு வரவேற்றனர்.

கராச்சி விமான நிலையத்திலிருந்து அதிபர் மாளிகைக்குச் செல்லும் 10 மைல் தொலைவு பாதை நெடுகிலும் சாலையின் இரு பக்கங்களிலும் மக்கள் திரண்டு நின்று வரவேற்றனர். கராச்சி விமான நிலையத்துக்கே வந்து வரவேற்று நேருவை ஒரே காரில் அதிபர் அயூப் கான் அழைத்துச் சென்றார். இருவரும் அதிபர் மாளிகைக்கு வந்தடைய ஒரு மணி நேரத்துக்கும் முன்னரே பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் அங்கே திரண்டிருந்து வரவேற்றனர்.

மிகுந்த தொலைநோக்குடன் இரு நாட்டுத் தலைவர்களுமாகப் பேசிப் பேசி மிகுந்த அக்கறையுடன் மிகவும் கோலாகலமாகச் செய்துகொள்ளப்பட்டது இந்த உடன்பாடு.

இந்த உடன்பாட்டுக்குப் பிறகு பாகிஸ்தானுடன் எத்தனையோ போர்கள், மோதல்கள் நேர்ந்தபோதிலும் உடன்பாடு நிறுத்திவைக்கப்பட்டதில்லை. 65 ஆண்டுகளாகப் பாதிப்பின்றித் தொடர்ந்தது.

ஆனால், தற்போது பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்திய அரசு கொள்கை முடிவெடுத்து நிறுத்திவைத்துள்ளது. இதனால், பாகிஸ்தானில் பெரும் பாதிப்புகள் ஏற்படக் கூடும். இதன் தொடர் விளைவுகள் எவ்வாறிருக்கும் என்று இப்போது உறுதியாக எதுவும் கூறவியலாது.

இதையும் படிக்க: சிந்து நதிநீர்ப் பகிர்வு ஒப்பந்தம் நிறுத்தம்... பாகிஸ்தானை எதிர்க்கும் ஆயுதமாவது எப்படி?

என்ன, இனி ஆதார் அட்டையே தேவையில்லையா?

இனி ஆதார் அட்டையை கையில் வைத்துக்கொண்டு அலைய வேண்டியதில்லை என்றும், முகத்தை வைத்து ஆதார் எண்ணை அடையாளம் காட்டும் புதிய ஆதார் செயலி அறிமுகப்படுத்தப்படுவதாகவும் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்து... மேலும் பார்க்க

ஆளுநருக்கு எதிரான வழக்கில் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்திய உச்ச நீதிமன்றம்! தீர்ப்பு முழு விவரம்!!

புது தில்லி: தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய 10 மசோதாக்களை மாதங்கள் மற்றும் ஆண்டுகள் கடந்தும் கிடப்பில் வைத்திருந்த ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று வரலாற்று முக... மேலும் பார்க்க

வக்ஃப் சட்ட திருத்தத்தால் அம்பானியின் ரூ.15,000 கோடி வீட்டுக்கு ஆபத்தா?

மும்பையின் பெருமைமிகுக் கட்டடமாகவும், மிக விலை மதிப்புமிக்க வீடாகவும் இருந்து வந்த முகேஷ் அம்பானியின் ஆன்டிலியா வீடு,தற்போது சட்டச் சிக்கலுக்கு உள்ளாகியிருக்கிறது.தெற்கு மும்பையின் பரேட் சாலையில் ரூ.1... மேலும் பார்க்க

பர்சனல் லோன் வாங்குவதற்கும் சிக்கல்.. ஆர்பிஐ கொண்டுவந்த விதிமுறை

ஏற்கனவே, ஏழைகள் மட்டுமே அதிகம் பெறும் நகைக் கடனுக்கு புதிய விதி என்ற பெயரில் ஆர்பிஐ ஆப்பு வைத்துவிட்ட நிலையில், அடுத்து தனிநபர் கடன் எனப்படும் பர்சனல் லோன் வாங்குவதற்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இதனை சி... மேலும் பார்க்க

அடுத்த திட்டம் என்ன? கார்த்திகேயன் பாண்டியன் மனைவி சுஜாதா விருப்ப ஓய்வு!

ஒடிசாவின் முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கின் வலது கை போல செயல்பட்டு வந்த தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி வி.கே. பாண்டியன் மனைவியும் தனது ஐஏஎஸ் பதவியை ராஜிநாமா செய்திருப்பது பேசுபொருளாகியி... மேலும் பார்க்க

அமெரிக்காவின் பரஸ்பர வரி: நாட்டின் பொருளாதாரம் என்னவாகும்?

உலக நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்குள் இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது விதிக்கப்படும் பரஸ்பர வரி தொடர்பான அறிவிப்பை அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏப்ரல் 2ஆம் தேதி வெளியிட்டார்.அமெரிக்க பொருள்... மேலும் பார்க்க