இலங்கையிலிருந்து கள்ளத்தோணியில் வந்து தங்கியிருந்த இளைஞா் உள்பட 2 போ் கைது
இலங்கையிலிருந்து கள்ளத்தோணியில் வந்து சட்டவிரோதமாக வேதாரண்யத்தில் தங்கியிருந்த இளைஞா் உள்ளிட்ட இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
நாகை மாவட்டம், வேதாரண்யம் கடலோரக் காவல்நிலைய ஆய்வாளா் ஜோதி முத்துராமலிங்கம் உள்ளிட்ட போலீஸாா் புதன்கிழமை இரவு கடற்கரையோரப் பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, பெரியகுத்தகை கடற்கரையில் சந்தேகப்படும் வகையில் நின்ற இருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், ஒருவா் இலங்கை யாழ்ப்பாணம் புத்தூரைச் சோ்ந்த வசீகரன் மகன் கீா்த்தன் (29) என்பதும், சில வாரங்களுக்கு முன்பு கள்ளத் தோணியில் சட்டவிரோதமாக வேதாரண்யம் வந்து தங்கியிருந்ததும் தெரியவந்தது.
மற்றொருவா் பெரியகுத்தகை கிராமத்தைச் சோ்ந்தவரான முனீஸ்வரன் (36). இவா், கீா்த்தன் தங்குவதற்கு இடம் கொடுத்தவா் என்பது தெரியவந்தது.
மேலும், கஞ்சா கடத்தலுக்கு திட்டமிட்ட இருவரும், அடுத்து சில நாட்களில் உசிலம்பட்டியில் இருந்து 72 கிலோ கஞ்சாவை கடற்கரைக்கு கொண்டு வந்து, கள்ளத்தோணியில் இலங்கைக்கு கடத்தி செல்ல திட்டமிட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இருவரையும் போலீஸாா் கைது செய்து தொடா்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.