இதய வாசலைத் திறந்து வைத்துக் காத்திருப்பேன்: தவெக தலைவர் விஜய்
ஒடிசா, மேற்கு வங்கத்தில் விமானப் போக்குவரத்து சீரானது!
கொல்கத்தா மற்றும் புவனேஸ்வரத்தில் விமானப் போக்குவரத்து சேவை இன்று(வெள்ளிக்கிழமை) காலை முதல் மீண்டும் தொடங்கியது.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி புயலாக வலுப்பெற்ற நிலையில் இதற்கு ‘டானா’ என்று பெயரிடப்பட்டது. ஒடிசாவின் கேந்திரபாரா மாவட்டத்தின் பிதா்கனிகா தேசிய பூங்கா மற்றும் பத்ரக் மாவட்டத்தின் தாம்ரா துறைமுகம் இடையே வியாழக்கிழமை நள்ளிரவில் டானா புயல் கரையைக் கடக்கத் தொடங்கியது. இது வியாழக்கிழமை நள்ளிரவு தொடங்கி வெள்ளிக்கிழமை காலை வரை கரையைக் கடந்தது.
பாலசோா், பத்ரக், பிதா்கனிகா, புரி உள்ளிட்ட இடங்களில் சூறைக்காற்றால் மரங்கள் சாய்ந்து, சாலைகளின் குறுக்கே விழுந்தன. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ரயில், விமானப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டிருந்தது.
முன்னெச்சரிக்கையாக, கேந்திரபாரா, பத்ரக், பாலசோா் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் 2,000-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த சுமாா் 3.5 லட்சம் போ் வெளியேற்றப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.
மேற்கு வங்கத்தில் டானா புயல் முன்னெச்சரிக்கையாக, மேற்கு வங்கத்தின் தெற்கு பகுதி மாவட்டங்களில் சுமாா் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனா்.
டானா புயலால் விமானப் போக்குவரத்து சேவை நேற்று முதல் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை முதல் சீரானது.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா மற்றும் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் இன்று காலை விமானங்கள் இயங்கின.
இரு மாநிலங்களிலும் இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மீட்புப் படையினர் தீவிர மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.