செய்திகள் :

இஸ்ரேலின் `அந்த’ இரு நோக்கமும் நிறைவேறியதா? - போர் நிறுத்தமும் விளைவுகளும்! | களம் 4: Iran vs Israel

post image

ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலை எடுத்து இரு நாடுகளிடையே நடந்த 12 நாள் போரின் கேந்திர அரசியல் விளைவுகள் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகின்றன.

இஸ்ரேலுக்கு ஆதரவாகப் போரில் தலையிட்டு, ஈரானின் முக்கிய அணு சக்தி தளங்கள் மீது ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கப் போர் விமானங்களும் கடற்படையிலிருந்து ஏவுகணைகளும் தாக்குதல் நடத்திய மறு நாளே, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இரு நாடுகளும் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டதாக தன்னுடைய Truth Social சமூக ஊடக தளத்தில் அறிவித்தார்.

அமெரிக்க தாக்குதலில் ஈரானின் ஃபோர்தோ, நதான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் ஆகிய இடங்களில் அமைந்திருந்த அணு சக்தி தளங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டதாக ட்ரம்ப் கூறினாலும், அந்தக் கூற்று முற்றிலும் உண்மை போல தெரியவில்லை.

அதிபர் ட்ரம்ப்
அதிபர் ட்ரம்ப்

ஈரானிய அணு சக்தி தளங்கள் சேதமடைந்திருக்கின்றன, ஆனால் முற்றிலும் அழிக்கப்படவில்லை, மேலும் தாக்குதலுக்கு முன்பேயே ஈரான் அரசு அத்தளங்களில் சேமித்து வைக்கப்பட்டிருந்த செறிவூட்டப்பட்ட யுரேனிய கையிருப்பையும், யுரேனிய ஐசோடொப் சுழல் கலன்களில் ( Centrifuges) பலவற்றையும் வேறு ஒரு ரகசிய இடத்துக்கு நகர்த்தியிருக்கக்கூடும் என்று அமெரிக்க உளவுத்துறையே அறிக்கை ஒன்றில் சொல்லியிருப்பதாக அமெரிக்காவின் முக்கிய ஊடகங்களான சி.என்.என் மற்றும் நியுயார்க் டைம்ஸ் செய்திகள் கூறுகின்றன.

இந்த ஊடகச் செய்திகள் பொய்யானவை என்று ட்ரம்ப் மறுத்திருக்கிறார்.

இதனிடையே ஈரான் நாடாளுமன்றம் அணு சக்தி நடவடிக்கைகளில் சர்வதேச அணு சக்திக்கழகத்துடன் ( IAEA) கொடுத்து வந்த ஒத்துழைப்பை இடை நிறுத்தி வைக்கும் மசோதா ஒன்றை நிறைவேற்றியிருக்கிறது.

அடிபணியுமா, அணுசக்தி முயற்சிகளைத் தொடருமா?

போரின் உடனடி விளைவாகப் பார்க்கப்படும் இந்த நடவடிக்கை மூலம் ஈரானின் அணு சக்தி முயற்சிகள் இனி மேலும் விரைவுபடுத்தப்படும் என்றே கருதப்படுகிறது.

அமெரிக்கா மற்றும் பிற வல்லரசுகளுடனும் ஐரோப்பிய ஒன்றியத்துடனும் 2015ல் ஈரான் கையெழுத்திட்ட அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து ட்ரம்ப் நிர்வாகம் ஒரு தலைப்பட்சமாக 2018ல் வெளியேறி, இப்போது இஸ்ரேலின் தாக்குதலுக்கும் துணை போயிருக்கும் நிலையில், ஈரான் இனி தான் அணு ஆயுத வல்லமை பெறுவதே தனது பாதுகாப்புக்கு உத்தரவாதம் தரும் என்று கருதும்.

அமெரிக்காவுடன் நேரடி மோதல் அல்லது பிராந்திய அளவிலான விரிந்த போர் என்ற மோசமான நிலைக்கு ஈரான் தள்ளப்படாமல் தப்ப இந்தப் போர் நிறுத்தம் அதற்கு ஒரு வாய்ப்பைத் தந்தது.

அமெரிக்கா - ஈரான்
அமெரிக்கா - ஈரான்

ஆயினும், இந்த 12 நாள் போரிலேயே, ஈரானுக்கு இழப்புகள் அதிகம். உயர் ராணுவ தளபதிகளை ஈரான் இழந்திருக்கிறது. போரில் ஈடுபடாத அணு விஞ்ஞனிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

சுமார் 900 பேர் வரை பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.

இஸ்ரேலிய குண்டுத் தாக்குதலில் பொருட்சேதம், கட்டிடம் மற்றும் சாலைகள் சேதம் போன்றவையும் ஏற்பட்டிருக்கின்றன.

ஒட்டு மொத்த இழப்புகளைப் பற்றி இன்னும் சரியான கணக்கு வெளியாகவில்லை என்றாலும், ஈரான் இந்தப் போரில் சுமார் 24 முதல் 35 பிலியன் டாலர் வரை இழந்திருக்கலாம் என்று சில மதிப்பீடுகள் கூறுகின்றன.

அணு ஆலைகளுக்கு ஏற்பட்ட சேதம், அடிப்படைக் கட்டமைப்புகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் போன்றவை இதில் அடங்கும்.

என்ன விலை கொடுத்தது இஸ்ரேல்?

இஸ்ரேலும் அது தொடங்கிய இந்தப் போரில் பொருளாதார ரீதியாக சேதத்தை அனுபவித்திருக்கிறது.

ஈரானிய ஏவுகணைத் தாக்குதல்களில் பெரும்பாலானவை இஸ்ரேலிய இடைமறிக்கும் ஏவுகணைகளால் ( Interceptors) முறியடிக்கப்பட்டிருந்தாலும் சுமார் 31 ஏவுகணைகள் இஸ்ரேலைத் தாக்கியிருக்கின்றன.

குறிப்பாக ஹைஃபா எண்ணை சுத்திகரிப்பு ஆலை, மற்றும் ரெஹொவாத் நகரில் உள்ள அறிவியல் மையமான, வெய்ஸ்மான் இன்ஸ்டிடியூட் ஆகியவை தாக்கப்பட்டது இஸ்ரேலுக்கு பலத்த அடியாகக் கருதப்படுகிறது.

இவை தவிர இஸ்ரேலின் பியர்ஷீபா நகரில் நடந்த ஈரானிய ஏவுகணைத் தாக்குதலிலும் பொதுமக்கள் சிலர் கொல்லப்பட்டனர்.

ஈரானின் ஏவுகணைத்தாக்குதல்களில் மொத்தம் 28 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

பீயர்ஷிபா, டெல் அவிவ் போன்ற நகரங்கள் இத்தாக்குல்களுக்கு இலக்காயின, ஆனால் இன்னும் சரியாக விவாதிக்கப்படாத ஒரு விஷயம் இந்தப் போரைத் தொடங்கி நடத்திய இஸ்ரேலுக்கு இதனால் ஏற்பட்ட பொருளாதாரப் பாதிப்பு என்ன ? ஈரானின் அணு வல்லமையைத் தகர்க்க இஸ்ரேல் என்ன விலை கொடுத்திருக்கிறது?

தனது தேசியப் பாதுகாப்புக்கு அணுவல்லமை அவசியம் என்று விடாப்பிடியாக இருக்கும் ஈரானுக்கு எந்த அளவு சேதம் விளைந்திருக்கிறது ?

இஸ்ரேலைப் பொருத்தவரை, இந்தப் போருக்கு முன்னமேயே கடந்த ஒன்றரை ஆண்டுகளாக காசாவில் ஹமாஸ் இயக்கத்தின் மீது நடத்திவரும் இன்னும் முடிவுக்கு வராத தாக்குதலுக்கு இஸ்ரேல் சுமார் 67 பிலியன் டாலர்கள் செலவழித்திருக்கும் என்று சில கணிப்புகள் சொல்கின்றன.

இந்த நிலையில், ஈரான் மீது இஸ்ரேல் தொடுத்த போரின் விளைவாக ஈரான் நடத்திய பதில் தாக்குதல்களில் மட்டும் பொருட்சேதத்தின் அளவு சுமார் 1.47 பில்லியன் டாலர்கள் என்று இஸ்ரேலிய அரசு வட்டாரங்கள் சொல்வதாக இஸ்ரேலிய ஊடகங்கள் கூறுகின்றன.

இதைத்தவிர போரை நடத்த ஆகியிருக்கக்கூடிய செலவு தனிக்கணக்கு. இந்த 12 நாள் போரை நடத்த இஸ்ரேல் தினமும் சுமார் 725 மிலியன் டாலர்கள் செலவழித்திருக்கக்கூடும் என்று சில கணிப்புகள் கூறுகின்றன.

யுத்தத்திற்கான செலவு மற்றும் பொருட்சேதம், உயிர்ச்சேதத்துக்கு இழப்பீடு, நீண்ட காலப் பொருளாதார இழப்பு என இஸ்ரேலிய இழப்பு சுமார் 20 பிலியன் டாலர்கள் வரை போகலாம் என்றும் கூறப்படுகிறது

இந்த அளவுக்கு செலவு செய்து போரின் இலக்குகளை நெதன்யாகு எட்டினாரா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

ஈரான், டிரம்ப், இஸ்ரேல்

முதல் நோக்கம்!

ஈரான் அணு வல்லமை பெறக்கூடாது என்ற நோக்கத்துடன் தொடங்கப்பட்ட இப்போர், பின்னர் ஆட்சி மாற்றம் என்பதாக விரிவடைந்தது.

அமெரிக்காவின் தலையீடு முதல் நோக்கத்தை ஓரளவு எட்டச் செய்திருக்கலாம். ஆனால் அதுவே சந்தேகத்துக்கு இடமில்லாத வகையில் இதுவரை வெளிப்படவில்லை .

சர்வதேச அணுசக்திக் கழகத்தின் இயக்குநர் ரஃபேல் குரோஸி , ஒரு பேட்டியில், இத்தாக்குதலில் ஃபோர்தோ அணு தளம் கடுமையான சேதம் அடைந்திருக்கலாம் ஆனால் நிலத்துக்கடியில் அமைக்கப்பட்டிருக்கும் அந்த அணு மையத்தில் எந்த அளவு உண்மையில் சேதம் என்பதை இப்போது யாராலும் கணிக்க முடியாது , என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது .

மேலும் ஈரான் தயாரித்து வைத்திருந்த சுமார் 400 கிலோகிராம் அதி செறிவூட்டப்பட்ட யுரேனியக் கையிருப்பு இப்போது எங்கிருக்கிறது என்பதும் தெரியவில்லை.

ஈரானிய அணு சக்தி நிறுவனத் தலைவர் மொகமது எஸ்லாமி, ஈரானிய அணு சக்தி திட்டம் பாதிக்கப்படவில்லை, மீண்டும் வளரும் என்று கூறியிருக்கிறார்.

இரண்டாவது நோக்கம்

இஸ்ரேலின் இரண்டாவது நோக்கம் , ஈரானில் ஆட்சி மாற்றத்தை நிகழ்த்துவது. இது முதல் நோக்கத்தோடு சம்பந்தப்பட்டதுதான் - ஏனென்றால் கமெனய் அரசு அதிகாரத்தில் இருக்கும்வரை, அணு ஆயுதத் திட்டம் முழுமை பெறும் ஆபத்து இருக்கிறது என்று இஸ்ரேல் நம்புகிறது.

எனவேதான் போரின் முக்கிய நோக்கமாக அவர் ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவருவதைக் குறிப்பிட்டிருந்தார்.

அதை போரின் ஒரு கட்டத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்பும் வழிமொழிந்திருந்தார் .

ஆனால் ஞாயிற்றுக்கிழமை நடந்த அமெரிக்கத் தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுப்பதாகக் கூறிக்கொண்டு கத்தாரில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது ( கத்தார் மற்றும் அமெரிக்கா இரு நாடுகளுக்கும் முன் கூட்டியே தகவல் சொல்லிவிட்டு) ஏவுகணைத் தாக்குதல் நடத்திய பின்னர் ட்ரம்பின் தொனி மாறிவிட்டது.

ட்ரம்ப் அறிவித்த போர் நிறுத்தம் பற்றிய பிரகடனம் வந்த பின்னர் , ஈரானிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணைத் தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதலில் ஈடுபட்டது அவர் சினத்தைக் கிளப்பியது.

நெதன்யாகு
நெதன்யாகு

வெள்ளை மாளிகை வாசலிலிருந்து , அச்சிடமுடியாத வார்த்தை ஒன்றைப் பயன்படுத்தி இரு நாடுகளையும் ட்ரம்ப் திட்டியது இஸ்ரேலியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

போர் நிச்சயமாக ஈரானின் அணுசக்தித் திட்டத்துக்கு ஒரு தற்காலிகப் பின்னடைவுதான். ஆனால் ஆப்கானிஸ்தான், ஈராக் , லிபியா போன்ற நாடுகளில் அமெரிக்கத் தாக்குதல் ஆட்சி மாற்றத்தில் முடிந்தது போல, ஈரானில் உடனடியாக நடக்கவில்லை என்பது ஈரானிய அரசுக்கு கொஞ்சம் ஆறுதலைத் தரலாம்.

ஆனால் ட்ரம்ப் ஆட்சியில் இருக்கும் வரை ஈரானிய அணு சக்தித் திட்டம் ஆயுதத் திட்டமாக மாறுவதற்கு அமெரிக்கா அனுமதிக்காது. ரகசியமாக ஈரான் அணு ஆயுதத் திட்டத்தைத் தொடருமானால், அது குறித்து தகவல்கள் கசிய வெகு காலம் பிடிக்காது.

அப்போது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மட்டுமல்லாமல், வளைகுடாப் பகுதியில் உள்ள ஈரானின் பிற போட்டி நாடுகள் (குறிப்பாக சௌதி அரேபியா) அதை அனுமதிக்க விரும்பாது.

ஈரானிய “முல்லாக்கள் அரசும்” , இஸ்ரேலின் நெதன்யாகு அரசும் நிச்சயம் இப்போரின் விளைவாக மேலும் உள்நாட்டுப் பிரச்சனைகளை எதிர்கொள்ளும்.

ஈரானைப் பொறுத்தவரை ஏற்கனவே பல ஆண்டுகள் மேற்குலகின் பொருளாதாரத் தடைகளால் நலிவடைந்த பொருளாதாரம் ஈரானியர்களின் அன்றாட வாழ்க்கையில் கடும் சிரமங்களை உருவாக்கியிருக்கிறது.

இந்த நிலையில், போருக்குப் பின்னும் தடைகள் தொடருமானால் , தடைகள் ஏற்கனவே ஏற்படுத்திய பிரச்சனைகளும், போரினால் மேலும் சிக்கலான பொருளாதாரமும் மக்களை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கி அரசுக்கு எதிரான கிளர்ச்சிகள் உருவாகலாம். அதை கடும்போக்கு ஈரானிய அரசு கடந்த காலங்களில் எதிர்கொண்டதைப் போல இரும்புக் கரம் கொண்டு அடக்க முயலும். அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்று பார்க்க வேண்டும்.

இஸ்ரேல் - அமெரிக்கா - ஈரான்
இஸ்ரேல் - அமெரிக்கா - ஈரான்

இஸ்ரேலின் நெதன்யாகு அரசும் ஏற்கனவே உள்நாட்டு அரசியல் நெருக்கடிகளை எதிர்கொண்டது. இப்போது போரின் போது ஈரானின் அணுசக்தி திட்டத்தை அவர் துணிச்சலாக எதிர்கொண்டு , அமெரிக்காவையும் முதன் முறையாக தனக்கு ஆதரவாக ஒரு மத்தியக்கிழக்கு போரில் ஈடுபடுத்தியது அவருக்கு உள்நாட்டில் தற்காலிக ஆதரவை பெருக்கியிருந்தாலும், இது எவ்வளவு காலம் நீடிக்கும் என்று சொல்ல் முடியாது.

காசாவில் இன்னும் ஹமாஸ் பிடியில் இருக்கும் சுமார் 50 இஸ்ரேலியர்களின் விடுதலை , நெத்னயாகு மீது இருக்கும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை, அவர் உள் நாட்டில் நீதித்துறையின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்த முயன்றது போன்ற பிரச்சனைகள் இன்னும் கனன்று கொண்டே இருக்கும் நிலையில் மத்தியக் கிழக்கு அரசியலில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

'சியோனிச ஆட்சியை வீழ்த்தி... நசுக்கி'- இஸ்ரேல் - ஈரான் தாக்குதலுக்கு பிறகு காமேனியின் முதல் கமென்ட்!

இஸ்ரேல் - ஈரான் தாக்குதல் நிறுத்தத்தை அடுத்து, ஈரான் நாட்டிற்குள் எழுந்த மிகப்பெரிய கேள்வி, 'ஈரானின் உச்சத் தலைவர் காமேனி எங்கே?' இந்தத் தாக்குதல் தொடங்கியதில் இருந்து அவரை வெளியிடங்களில் காணவே முடியவ... மேலும் பார்க்க

`இந்திரா காந்தி சுயநலத்துகாகவே அவசர நிலையை அறிவித்தார்!’ – புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

இந்தியாவில் அவசர நிலையை பிரகடனப்படுத்திய 50-வது ஆண்டை நினைவுகூறும் விதமாக, அரசியலைப்பு படுகொலை தினமாக அனுசரிக்க மத்திய அரசு பரிந்துரைத்திருக்கிறது. அதனடிப்படையில் புதுச்சேரி கலைப் பண்பாட்டுத் துறை சார... மேலும் பார்க்க

PMK ராமதாஸ் மீதான கொலை வழக்கு முதல், தீர்ப்பு வரை! - சி.வி.சண்முகம் வழக்கு கடந்து வந்த பாதை

2006, மே 8-ம் தேதி தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவுகள் முடிந்து, வாக்குச் சாவடிகளில் வாக்குப் பெட்டிகள் சீல் வைக்கப்பட்டுக் கொண்டிருந்தன. தேர்தல் பரபரப்புகள் அடங்கியது என பெருமூச்சு விட நி... மேலும் பார்க்க

அமெரிக்கா செல்ல உங்களுக்கு ஐடியா இருக்கிறதா? - விசாவிற்கு 'இந்த' தகவல் கட்டாயம்! - புது ரூல்

அமெரிக்கா தன் நாட்டுக்குள் வெளிநாட்டினர் அதிகம் குடியேறாமல் இருக்க, பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. மேலும், அந்த நாட்டுக்குள் குடியேறுபவர்கள் அரசுக்கு எதிரான எந்தப் பிரச்னை மற்றும் போராட... மேலும் பார்க்க

Voter ID: ஆன்லைனில் ஈசியாக விண்ணப்பிப்பது எப்படி? 15 நாள்களில் வீடு தேடி வந்துவிடும்! | How to?

2026-ல் தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வர உள்ளது. 18 வயதை எட்டியவர்கள் புதியதாக இந்தத் தேர்தலில் ஓட்டுப்போட உள்ளார்கள். அதற்கு கட்டாயம் வாக்காளர் அட்டை அவசியம் தானே. அதை எப்படி ஈசியாக ஆன்லைனில் விண்ணப... மேலும் பார்க்க