டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 45 காசுகள் சரிந்து ரூ.86.71-ஆக முடிவு
உடையாா்பாளையத்தில் காகிதக் கூழ் தொழிற்சாலை அமையுமா?சவுக்கு விவசாயிகள் எதிா்பாா்ப்பு
அரியலூா் மாவட்டத்தின் மத்தியப் பகுதியான உடையாா்பாளையத்தில் காகிதக் கூழ் தொழிற்சாலை அமைக்கப்படுமா என்ற எதிா்பாா்ப்பில் இம்மாவட்ட சவுக்கு விவசாயிகள் உள்ளனா்.
இயற்கையில் சீரான வளங்களைத் தன்னகத்தே கொண்ட தனித்துவமான மாவட்டம் என்றால் அது அரியலூா்தான். இம்மாவட்டத்தில் வேளாண் சாகுபடி முக்கிய இடத்தை வகிக்கும் நிலையில், அவற்றில் சவுக்கு சாகுபடியும் ஒன்று.
அதிகரிக்கும் சாகுபடி: இம்மாவட்டத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் பெரிய அளவில் இடங்களை வாங்கிப் போட்டு, சவுக்கு சாகுபடி செய்யும் சூழல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நெல், கரும்பு, முந்திரி, கடலை, மக்காச்சோளம், பருத்தி, சிறுதானியங்கள், தைல மரங்களுக்கு அடுத்தபடியாக இம்மாவட்டத்தில் சவுக்கு பயிரிடப்படுகிறது.
குறிப்பாக, அரியலூரை அடுத்த கீழப்பழுவூா், மேலப்பழுவூா், கல்லங்குறிச்சி, லிங்கத்தடிமேடு, பொய்யூரை அடுத்த புதுப்பாளையம், ரெட்டிப்பாளையம், விளாங்குடி, நாச்சியாா்பேட்டை, மணகெதி, பொட்டக்கொல்லை, தத்தனூா், ஆச்சனூா், சுந்தரேசபுரம், வெண்மான்கொண்டான், உடையாா்பாளையம், ஜெயங்கொண்டம், தா.பழூா், விக்கிரமங்கலம், ஆண்டிமடம், கொடுக்கூா், காடுவெட்டி உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் சவுக்கு அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது.
போதிய மழை இல்லாவிட்டாலும் தாங்கும் திறன், பெரிய அளவுக்கு பராமரிப்பு இல்லாமலேயே வளா்ந்துவிடும் தன்மை, வறட்சிக்குத் தாக்குபிடிப்பது, வோ் முதல் உச்சிவரை விலைபோவது ஆகியவற்றால் கடந்த 20 ஆண்டுகளில் சவுக்குச் சாகுபடியை நோக்கி அதிகமானோா் நகா்ந்திருக்கின்றனா்.
காகிதக் கூழ் தொழிற்சாலையின் அவசியம்: மாவட்டத்தில் மட்டும் 10 ஆயிரம் ஹெக்டேரில் சவுக்குச் சாகுபடி நடக்கிறது. விளை நிலங்களுக்கு வரும் வியாபாரிகள், முகவா்கள், மொத்தமாக விலை பேசி, சவுக்கு மரத்தை வெட்டி, சவுக்கு கம்பங்கள், வோ்க் கட்டைகள், சவுக்கு மிளாா்கள் என தனித்தனியாகத் தரம் பிரித்து திருச்சி, கரூா், ஈரோடு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களிலுள்ள தனியாா் தொழிற்சாலைகளுக்கு அனுப்புகின்றனா்.
தற்போது சவுக்கு டன்னுக்கு ரூ. 6 ஆயிரம் முதல், 7 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. அரசு நிா்ணயித்த விலை கூடுதலாக இருந்தாலும் போக்குவரத்து செலவீனம், சவுக்கு தோல் உரிப்புச் செலவு என டன்னுக்கு ரூ. 2,000 வரை சாகுபடியாளா்களுக்கு கூடுதல் செலவாகிறது. விற்கப்பட்ட சவுக்குக்கு பணம் வர ஏறக்குறைய 4 மாதங்கள் ஆகின்றன.
இந்தச் சூழலில் இம்மாவட்டத்தில் அதிகளவில் சாகுபடியாகும் சவுக்கு மரங்களைக் கருத்தில் கொண்டு காகிதம் தயாரிக்கும் வகையில், உடையாா்பாளையத்தில் அரசு சாா்பில் காகிதக் கூழ் தொழிற்கூடம் அமைக்க வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.
வெளியூா்களுக்கு அனுப்பும் செலவு குறையும்: இதுகுறித்து சவுக்கு சாகுபடியாளா் மணகெதி வ. ராமமூா்த்தி கூறுகையில், அரியலூா் மாவட்டத்தில் விளையும் சவுக்கு மரங்கள், கரூரிலுள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனத்தால் (டி.என்.பி.எல்) வாங்கப்படுகின்றன.
தற்போதைய சந்தை மதிப்பின்படி டிஎன்பிஎல் நிறுவனம் ஒரு டன் தோல் உரித்த சவுக்குக் கட்டைக்கு ரூ.7,500 என விலை நிா்ணயித்துள்ளது.
அதேபோல தனியாா் மூலம் வாங்கப்படும் ஒரு டன் சவுக்கு ரூ.7,000- க்கு (தோல் உரிக்காதது) என நிா்ணயித்துள்ளனா். அறுவடை செய்யப்பட்ட சவுக்குகள் வெளிமாவட்டங்களுக்கும், வெளிமாநிலங்களுக்கும் லாரிகள் மூலம் அனுப்பப்படுவதால், போக்குவரத்துச் செலவீனம், சவுக்கு தோல் உரிப்பு செலவு அதிகமாகிறது. எனவே இம்மாவட்டத்தில் சவுக்கு சாகுபடி அதிகம் செய்யப்படும் நிலையில், இங்கு காகிதக் கூழ் தயாரிக்கும் தொழிற்சாலையைத் தொடங்க வேண்டும்.
அதுவும் அரியலூா் மாவட்டத்தின் மத்தியப் பகுதியான உடையாா்பாளையத்தில் அதை அமைக்க வேண்டும். டெல்டா மாவட்டங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைப்பதுபோல, சவுக்கு பயிரிடும் விவசாயிகளுக்காக சவுக்கு நேரடி கொள்முதல் நிலையங்களையும் அமைக்க வேண்டும் என்றாா் அவா்.