உத்தரகண்ட்: வெளிமாநிலத்தவர் நிலம் வாங்குவதற்கு தடை!
புது தில்லி: பாஜக ஆளும் உத்தரகண்ட் மாநிலத்தில் 11 மாவட்டங்களில் வெளிமாநிலத்தவர் நிலம் வாங்க தடை விதிக்கும் புதிய சட்டத்தை சட்டப்பேரவையில் நிறைவேற்ற அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
உத்தரகண்ட் மக்கள் மாநிலத்தில் நிலம் வாங்கும் தனிநபர்களுக்கு வரம்புகள் விதிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்த நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பரில் மாநிலத்தில் புதிய நிலச் சட்டத்தைக் கொண்டுவருவதற்கான தனது திட்டத்தை முதல்வர் தாமி அறிவித்தார்.
இந்த நிலையில், உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள 13 மாவட்டங்களில் 11 மாவட்டங்களில் விவசாய மற்றும் தோட்ட நிலங்களை வெளிமாநிலத்தவர் வாங்க தடை விதிக்கும் புதிய சட்ட மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனை நடப்பு நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடரிலே சட்டமாக்க பாஜக அரசு முடிவு செய்துள்ளது.
மாநில மக்களின் நீண்டகால கோரிக்கை மற்றும் அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளித்து, மாநிலத்தின் வளங்களைப் பாதுகாக்கவும், மாநிலத்தின் அடையாளத்தை பராமரிக்கும் நடவடிக்கையாக புதிய நிலச் சட்ட மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்துள்ள முதல்வர் புஷ்கர் சிங் தாமி, மக்களின் நலன்களைப் பாதுகாப்பதில் அரசு உறுதியாக உள்ளதாகவும், இது வரலாற்று சிறப்புமிக்க முடிவு, மாநிலத்தின் வளங்கள், கலாச்சார பாரம்பரியம் மற்றும் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதோடு, மாநிலத்தின் அடையாளத்தைப் பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என்று கூறியுள்ளார்.
கல்வி நிதி ரூ.2,152 கோடியை விடுவிக்கவும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்
ஆனால் இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எனினும் தங்கள் முடிவில் உறுதியாக இருப்பதாக உத்தரகண்ட் மாநில பாஜக தலைவர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 370 அரசியல் சாசன சிறப்பு பிரிவை நீக்கிய போது நாடு முழுவதும் உள்ளவர்கள் இனிமேல் ஜம்மு காஷ்மீரில் நிலம் வாங்கலாம் என்று பாஜக அறிவித்த நிலையில், தற்போது பாஜக ஆளும் உத்தரகண்ட் மாநிலத்தில் வெளிமாநிலத்தவர் விவசாய, தோட்ட நிலங்களை வாங்க தடை விதிக்கும் சட்டத்தை கொண்டு வர உள்ளதை குறிப்பிட்டு விமர்சனம் எழுந்துள்ளது.
ஒரே நாடு ஒரே சட்டம் குறித்து பேசி வரும் பாஜகவினர், அவர்கள் ஆளும் மாநிலங்களில் இதுபோன்ற தனி சட்டங்களை கொண்டுவருவது குறிப்பிடத்தக்கது.