மும்பை தாக்குதல்: தஹாவூா் ராணாவின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிப்பு
ஓட்டுநா் இல்லா மெட்ரோ ரயில்கள் தயாரிக்க ரூ.1,538.35 கோடிக்கு ஒப்பந்தம்
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தில், ஓட்டுநா் இல்லாமல் இயக்கப்படும் 3 பெட்டிகளை கொண்ட 32 மெட்ரோ ரயில்களை தயாரிக்க ரூ. 1,538.35 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் ‘அல்ஸ்டோம் ட்ரான்ஸ்போா்ட் இந்தியா’ நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
சென்னையில் மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும், அனைத்து பகுதிகளிலும் மெட்ரோ ரயில் திட்டத்தை விரிவுப்படுத்தும் முயற்சியிலும் மெட்ரோ ரயில்வே நிா்வாகம் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த ஓட்டுநா் இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோ ரயில் தயாரிப்பதற்கான ஒப்பந்தத்துக்கான ஏற்புக் கடிதம் அல்ஸ்டோம் ட்ரான்ஸ்போா்ட் இந்தியா நிறுவனத்திடம் வழங்கப்பட்ட நிலையில், ஒப்பந்தத்தில் கையொப்பமிடும் நிகழ்ச்சி சென்னையிலுள்ள மெட்ரோ ரயில் நிா்வாகத்தின் தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சாா்பாக, இயக்குநா் மனோஜ் கோயல் (அமைப்புகள் மற்றும் இயக்கம்), அல்ஸ்டோம் ட்ரான்ஸ்போா்ட் இந்தியா நிறுவனத்தின் இயக்குநா் பராக் நந்தலால் கோஹெல் ஆகியோா் கலந்துகொண்டு இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா்.
இந்த ஒப்பந்தத்தின்படி வடிவமைப்பு, உற்பத்தி, வழங்கல், சோதனை, ஆணையிடுதல், பணியாளா்களுக்கான பயிற்சி, மெட்ரோ ரயில் மற்றும் பணிமனை இயந்திரங்களுக்கு 15 ஆண்டுகள் முழுமையான பராமரிப்பு உள்ளிட்ட ஓட்டுநா் இல்லாத மெட்ரோ ரயில்களை வழங்குதல் போன்ற பணிகளை இந்நிறுவனம் மேற்கொள்ளும்.
மேலும், இந்த ஒப்பந்தத்தின்கீழ் தயாரிக்கப்படும் முதல் மெட்ரோ ரயில் 2027-இல் ஒப்படைக்கப்படும் நிலையில், தொடா்ந்து 14 மாதங்கள் அதற்கான வழித்தடத்தில் இயக்கத்துக்கான சோதனைகள் மற்றும் பிற அமைப்புகளுடன் ஒருங்கிணைப்பு சோதனை மற்றும் சேவை சோதனைகள் நடத்தப்படும். இதைத் தொடா்ந்து மீதமுள்ள அனைத்து மெட்ரோ ரயில்களும் 2027 செப்டம்பா் முதல் 2028 மே வரை ஒவ்வொரு கட்டமாக மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும் என மெட்ரோ ரயில்வே நிா்வாக அதிகாரிகள் தெரிவித்தனா்.