``கலைஞரிடமிருந்து வந்த அழைப்பு; மனைவி தந்த தைரியம்"- காதலைப் பகிரும் தங்கம் தென்னரசு
தலைவர்களின் புகைப்படங்கள், கட்சிக்கொடி, பல்வேறு துறை சார்ந்த புத்தகங்கள், நினைவுப்பரிசுகள் என அரசியல்வாதி வீடுகளின் அக்மார்க் சின்னங்களுக்கு நடுவே வீடு முழுவதும் சிரிப்புச்சத்தத்தை எதிரொலிக்கிறது நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்ற அமைச்சர் தங்கம் தென்னரசின் வீடு.
தேவைகள் சூழ் உலகு
கட்சி கூட்டத்திற்காக சென்னை வந்திருந்த அவரை சென்னை பெசண்ட் நகரில் உள்ள அவரின் வீட்டில் வைத்துச் சந்தித்தோம். "எங்க வீடு எப்போதும் கலகலன்னு தான் இருக்கும். என் அக்கா பொண்னுங்க, மச்சான் பொண்ணுங்க, என் பொண்ணுங்களும் சேர்ந்துட்டா போதும் வீடு முழுக்க சந்தோஷம் நிரம்பி வழியும். 'தேவைகள் சூழ் உலகு'னு சொல்லலாம், நான் சென்னை வரும் நேரம் அவங்களுக்குக் கூடுதல் ஜாலி.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-13/9nn4c5st/Everything-we-are-everything-we-will-be-is-because-of-her.-பிறந்தநாள்-வாழ்த்துகள்-அவ்வா.jpg)
வெள்ளை வேஷ்டி சட்டை இல்லாமல், பரபரப்பு இல்லாமல் கிடைக்கும் ஒரு மணி நேரத்தையும் கொண்டாடித் தீர்க்கும் குடும்பஸ்தன் தென்னரசை இங்க நீங்க பார்க்கலாம். சாப்பாடு, புத்தகங்கள், சந்தோஷம், முக்கியமான தருணங்களின் பகிர்வுகள்னு அன்புக்கு பஞ்சமே இல்லாத இடம் இது.
காதலின் அடையாளம்
அரசியல் பணிக்காக சொந்த ஊரான மல்லாங்கிணறில் தங்குவது, வெளியூர்களுக்குச் செல்வது, எனப் பெரும்பாலும் பயணத்திலேயே இருக்கேன். குழந்தைங்க படிப்புக்காக குடும்பம் சென்னையில் தங்கியிருக்காங்க. குழந்தைகள் படிப்பு, ஆரோக்கியம், நல்லது கெட்டது என எல்லா பொறுப்பையும் ஏத்துக்கிட்டு, இந்த உறவையும், குடும்பத்தையும் கண்ணாடி மாதிரி ரொம்ப பத்திரமா பார்த்துக்கிறது என் மனைவி மணிமேகலை தான் " என தன் மனைவியை அறிமுகம் செய்கிறார் தங்கம் தென்னரசு. திருமணம் ஆகி 31 வருஷம் ஆகுது. ஆனா எங்களுடைய உறவு தொடங்கி 34 வருஷம் ஆகுது. ஆமா எங்களுடையது காதல் திருமணம். காதலின் அடையாளமாக பெரிய பொண்ணு இமயா, சின்னப் பொண்ணு இதயா" முகம் முழுவதும் பரவும் சிரிப்புடன் பழைய நினைவுகளுக்கு உயிர் கொடுக்கிறார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-13/mewi42kv/Everything-we-are-everything-we-will-be-is-because-of-her.-பிறந்தநாள்-வாழ்த்துகள்-அவ்வா-1.jpg)
"எங்க அக்காவின் கணவரும், என் மனைவியின் சகோதரரும் நெருங்கிய நண்பர்கள். அக்காவுக்குத் திருமணம் ஆகி சென்னையில் இருந்தாங்க. நானும் இன்ஜினீயரா வேலை பார்த்துட்டு சென்னையில் ரூம் எடுத்து ஃப்ரண்ட்ஸ்களோடு தங்கியிருந்தேன். அக்காவுக்குத் திருமணம் ஆகியிருந்த புதிதில் ரெண்டு குடும்பமும் அடிக்கடி சந்திக்கும் சூழல் இருந்துச்சு. அப்போ தான் மணிமேகலையைப் பார்த்தேன். ரொம்ப அமைதியா இருப்பாங்க. எந்த வேலையையும் ரொம்ப பொறுமையா செய்வாங்க. மணிமேகலை முதுநிலை ஆந்த்ரோபாலஜி படிக்கிறாங்ன்னு அக்காகிட்ட விசாரிச்சு தெரிஞ்சுக்கிட்டேன். சில முறை பார்த்ததிலேயே மனசுக்குப் பிடிச்சுருந்துச்சு. ஒரு நாள் தனியாகக் கூப்பிட்டு காதலையும் சொல்லிட்டேன். ஆனா மேடம் கிட்ட இருந்து எந்த ரியாக்ஷனும் வரல. கடந்து போயிட்டாங்க" என தன்னைப்பார்த்து சிரிக்கும் தன் கணவனிடம், " எதிர்பார்க்காத நேரத்தில் ஒருத்தர் வந்து காதலிக்கிறேன்னு சொன்னா, எல்லா பொண்ணுங்களும் கடந்து தான் போவாங்க. அதைத்தான் நானும் செய்தேன்" என வெட்கம் படர பேச ஆரம்பிக்கிறார் மணிமேகலை.
காதலைச் சொன்ன தருணம்
"இவர் வந்து காதலைச் சொன்னதும் எப்படி ரியாக்ட் பண்றதுன்னு சத்தியமா தெரியல. அமைதியா போயிட்டேன். என்னுடைய பதிலுக்காக அவர் காத்திருப்பது, அவருடைய முகத்தில் அப்பட்டமா தெரியும். வற்புறுத்தினது கிடையாது. எப்போ பதில் சொல்லுவீங்கன்னு கேட்டது கிடையாது. வாங்க, போங்கன்னு மரியாதை கொடுத்து பேசுவாரு. இந்த குணமெல்லாம் பிடிச்சுருந்துச்சு. இது எல்லாத்தையும்விட, இவருடைய குடும்பம் ரொம்ப பிடிக்கும். நானும் காதலை சொல்லிட்டேன்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2023-09/570cef0b-2ba7-4e3a-938a-5282ce5fc84f/thangam_thennarasu.jpg)
அந்தக்காலத்தில் மொபைல் போன் கிடையாது. நான் பி. ஜி படிச்சுட்டு இருந்தேன். தினமும் காலேஜ் முடிஞ்சதும் என்னை பைக்கில் பிக் -அப் பண்ணிப்பாரு. கிண்டி பூங்காவில் உட்கார்ந்து பேசிட்டு இருப்போம். அதன் பின் ஆராய்ச்சி படிப்புக்காக டெல்லி போயிட்டேன். படிப்பு முடிஞ்சு வந்ததும் வீட்டில் திருமணத்தை பத்தி வீட்டில் பேச ஆரம்பத்தில் பயமாகத் தான் இருந்துச்சு. இரண்டு குடும்பமும் முற்போக்காக சிந்திக்கிறவங்களாக இருந்தாலும், சாதி மாற்றி திருமணம் செய்ய சம்மதிப்பாங்களான்னு தயக்கமாக இருந்துச்சு" என்ற மணிமேகலையை தொடர்ந்து பேச ஆரம்பிக்கிறார் தங்கம் தென்னரசு.
இணைப்புப் புள்ளியாக தி.மு.க
"முதலில் எங்க அக்காகிட்ட தான் சொன்னேன். கொஞ்சம் ஷாக் ஆனாலும், ஈஸியா எடுத்துக்கிட்டாங்க. அப்புறம் அப்பாகிட்ட சொன்னேன். அப்பா சாதி மறுப்புத்திருமணம் பண்ணிக்கிட்டவங்க என்பதால் பெரிசா எதிர்ப்பு இல்ல. வீட்டில் சம்மதம் வாங்கிட்டு, மணிமேகலை வீட்டில் பேசினோம். சின்ன சின்ன தயக்கங்கள் இருந்தாலும், ரெண்டு குடும்பத்தையும் இணைக்கும் இணைப்பு புள்ளியாக தி.மு.க இருந்துச்சு. தலைவர் கலைஞர் முன்னிலையில் திருமணம் நடந்துச்சு. எனக்கு என் குடும்பத்துடன் நேரம் செலவழிக்கிறது ரொம்ப பிடித்தமான விஷயம். வேலைக்குப் போயிட்டு வந்ததும் மனைவிக்கு உதவி பண்ண, குழந்தையை பார்த்துக்கன்னு வாழ்க்கையைக் கொண்டாடிட்டு இருந்த நேரம், அப்பாவுடைய எதிர்பாராத மரணம் வாழ்க்கையைப் புரட்டிப்போட்டுச்சு.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-13/7ozt3iis/Screenshot_2025_02_13_at_3_25_11_PM.png)
தலைவர் கலைஞர்கிட்ட இருந்து அரசியலுக்கு வரச்சொல்லி அழைப்பு வந்துச்சு. ஆரம்பத்தில் அரசியலுக்கு வர ஒரு தயக்கம் இருந்துச்சு. ஆனா எனக்கு முழு சப்போர்ட் கொடுத்து என்னை பொது வாழ்க்கைக்கு வழியனுப்பி வெச்சது மணிமேகலைதான்" என்ற தன் கணவரைத் தொடர்ந்தார் மணிமேகலை .
"அவருக்கு அவங்க அம்மா தான் உலகம். அம்மா என்னையும் ,சுமதி அண்ணியையும் ஒரே மாதிரி தான் நடத்துவாங்க. எங்களுக்குள்ள ஒரு சின்ன மனஸ்தாபம் கூட வந்தது இல்ல. இவரு வெள்ளை வேஸ்டி சட்டை உடுத்தி சைரன் வெச்ச காரில் போறதைப் பார்க்குறதில் அம்மாக்கு அப்படி ஒரு பெருமிதம். அரசியலுக்கு போனதால் எங்களோட பெர்சனல் நேரம் குறைஞ்சுது.
மணிமேகலையின் கணவர்தான் தங்கம் தென்னரசு
ஆனா காதல் குறையல, சின்ன சின்ன விஷயங்களையும் உடனே பகிர்ந்துப்போம். குழந்தைகள் மீது அவ்வளவு பிரியம் உண்டு. அவரு அரசியலுக்கு வர்றதுக்குமுன்னாடியும் சரி, இப்பவும் சரியும் என்னோட உணர்வுகளுக்கும், ஆசைகளுக்கும், மரியாதை கொடுக்கணும்னு நினைப்பாரு. அது ஒரு பெண்ணாக அவர் மீதான மரியாதையையும் காதலையும் இன்னும் இன்னும் அதிகரிச்சுட்டே இருக்கு. இப்போ கூட, சின்ன சின்னதா சர்ப்ரைஸ் கொடுப்பாரு. எங்க பொண்ணுங்க கூட கலாய்ப்பாங்க. 'எனக்கு தான் வயசாகுது. எங்க காதலுக்கு இல்லை'னு சொல்லுவாரு.உண்மையைச் சொல்லணும்னா கூடவே இருக்கிறது காதல் இல்ல... என்ன நடந்தாலும் கூட இருக்கிறது தான் காதல்.அதைத்தான் வாழ்க்கை எங்களுக்குக் கத்துக்கொடுத்திருக்கு" என்று பேசும் மணிமேகலையை ஆச்சரியத்துடன் பார்த்தபடியே பேச ஆரம்பிக்கிறார் தங்கம் தென்னரசு.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-13/5275ja5e/WhatsApp_Image_2025_02_13_at_3_20_10_PM.jpeg)
"மணிமேகலையின் விட்டுகொடுத்தலும், புரிதலும் தான் என்னை அடுத்தடுத்தகட்டத்திற்குப் பயணிக்க வைக்குது. குடும்பத்துக்காக இயங்க ஆரம்பிச்சவங்களை அப்படியே குடும்பத்துக்குனு நேந்து விட்டுற கூடாதுங்கிறதுல நான் எப்போதுமே உறுதியா இருப்பேன். ' நீ உன் கனவுகளுக்காக இயங்கு'னு சொல்லிட்டே இருப்பேன்.நியூயார்க் ஃபிலிம் அகாடமியில் திரைப்படம் இயக்குறதுக்கான கோர்ஸ்கள் படிச்சுருக்காங்க. சில டாக்குமென்ட்ரி படங்களும் பண்ணிட்டு இருக்காங்க. தங்கம் தென்னரசின் மனைவியாக இல்லாமல், மணிமேகலையாக சாதிப்பாங்க. மணிமேகலையின் கணவர் தங்கம் தென்னரசுன்னு மக்கள் பேசும் நாள் நிச்சயம் வரும்" கைகோத்து விடைபெறுகிறார்கள்.