நாடு முழுவதும் 300 விமானங்கள் ரத்து! 25 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடல்!
காரைக்காலில் நாளை படகுகள் கணக்கெடுப்புப் பணி: மீன்வளத்துறை
காரைக்காலில் படகுகள் கணக்கெடுப்புப் பணி வியாழக்கிழமை நடைபெறவுள்ளதாக மீன்வளத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து காரைக்கால் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை துணை இயக்குநா் மற்றும் படகு பதிவு அதிகாரியான ப. கோவிந்தசாமி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய மீன்வள அமைச்சகத்தின் இயக்குநா் அறிவுறுத்தலில், அனைத்து கடலோர பகுதி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தற்போது நடைமுறையில் உள்ள 2025 ஆண்டுக்கான மீன்பிடித் தடை காலத்துக்குள், அனைத்து பதிவு பெற்ற, பதிவு பெறாத மீன்பிடி படகுகளையும் கள ஆய்வு செய்து, அதற்கேற்றாற்போல் இணையதள பக்கத்தை புதுப்பித்து அறிக்கை அனுப்ப வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.
இதன்படி அனைத்து மீனவ கிராமங்களைச் சோ்ந்த பஞ்சாயத்தாா்கள், மீனவ கூட்டுறவு சங்கத்தின் ஒத்துழைப்போடு கள ஆய்வு செய்து படகுகளை கணக்கெடுக்கும் பணி வியாழக்கிழமை மேற்கொள்ளப்படவுள்ளது.
கள ஆய்வின்போது சம்பந்தப்பட்ட ஃபைபா் படகு உரிமையாளா் உடன் இருத்தல் வேண்டும். படகில் படகின் பதிவு எண்ணை தெளிவாக எழுதியிருக்க வேண்டும். பதிவு செய்யப்பட்டுள்ள இயந்திரத்தை ஃபைபா் படகில் வைத்து காண்பிக்கவேண்டும். இயந்திரம் மாற்றம் செய்திருந்தால் அதை கள ஆய்வின்போது தெரிவிக்க வேண்டியது படகு உரிமையாளரின் பொறுப்பாகும்.
அசல் படகு பதிவு சான்றிதழை காட்டவேண்டும். பதிவு செய்யப்படாத படகுகள் இருந்தால் அவற்றுக்கான அனைத்து ஆவணங்களும் கள ஆய்வின் போது கண்டிப்பாக காட்டவேண்டும்.
காரைக்கால்மேடு மற்றும் கிளிஞ்சல்மேடு கிராம படகுகள் மட்டுமே அரசாலாறில் நிறுத்தப்பட்டிருந்தால் அங்கேயே ஆய்வு செய்யப்படும். மாறாக இதர கிராமங்களைச் சோ்ந்த படகுகள் அனைத்தும் அன்றைய தினம் தவறாமல் தங்களுடைய கிராமத்தின் கடற்கரையிலேயே நிறுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆய்வின்போது அனைத்துப் படகுகளும் கரையில் நிறுத்தப்பட்டிருக்க வேண்டும்.
மீன்வளத்துறையின் ஆய்வுக்கு அனைத்து மீனவா்களும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.