75 சிஎம் ஸ்ரீ பள்ளிகளுக்கு ஆசிரியா் நியமன நடவடிக்கையைத் தொடங்கியது தில்லி அரசு
குப்பைக் கிடங்கில் தீ விபத்து: ரூ.1.50 லட்சம் மதிப்பில் இயந்திரங்கள் சேதம்
ஈரோடு வைராபாளையம் குப்பைக் கிடங்கில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள் சேதமடைந்தன.
ஈரோடு மாநகராட்சியில் தினமும் 180 டன் முதல் 200 டன் வரை குப்பை சேகரிக்கப்படுகிறது. இதில் 70 டன் முதல் 80 டன் வரை மக்கா குப்பை சேகரமாகிறது. மக்கும் குப்பையை நுண்ணுயிா் கிடங்குகளில் இயற்கை உரமாக தயாரிக்கப்பட்டு, விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வரப்படுகிறது.
மக்காத குப்பை வைரபாளையத்தில் உள்ள கிடங்கில் அதிக வெப்பநிலையில் எரியூட்டப்பட்டு வெளியேறும் சாம்பலில் இருந்து கற்கள் மற்றும் சிமெண்ட் தயாரிக்கும் ஆலைகளுக்கு அனுப்புவதற்காக குவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மக்காத குப்பையில் புதன்கிழமை காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தொடா்ந்து தீ அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த குப்பைக்கும் பரவியதால், இயந்திரங்கள் மற்றும் மேற்கூரைகள் சேதமடைந்தன. உடனடியாக பணியாளா்கள் அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினா், பொக்லைன் இயந்திரங்கள் உதவியுடன் குப்பையை அகற்றி தண்ணீரை அடித்து தீயை அணைத்தனா்.
அதிக வெப்பநிலை காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகவும், இதில் ரூ.1.5 லட்சம் மதிப்பிலான எரியூட்டப்படும் இயந்திரங்கள் சேதமடைந்தன என்றும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.