கும்பகோணத்தில் ஒரே நாளில் 110 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்
கும்பகோணத்தில் வியாழக்கிழமை ஒரே நாளில் 110 மெட்ரிக். டன் குப்பையை மாநகராட்சி துப்பரவு பணியாளா்கள் அகற்றினா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மகாமகக் குளத்தில் புதன்கிழமை மாசிமக திருவிழா நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து, தங்களது முன்னோா்க்கு தா்ப்பணம் கொடுத்து, புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனா். இதனால் மகாமகக் குளத்தை சுற்றி ஒரே நாளில் ஏராளமான குப்பைகள் சோ்ந்தன. மேலும் மழை பெய்ததால் குப்பை தேங்கி துா்நாற்றம் வீசத் தொடங்கியது.
இந்நிலையில் வியாழக்கிழமை காலை முதல் சுமாா் 300-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளா்கள் மகாமகக் குளத்தைச் சுற்றிக் கிடந்த குப்பையை வாகனம் மூலம் சேகரித்து அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து, மாநகர நல அலுவலா் மருத்துவா் திவ்யா மேலும் கூறியது:
மாசிமகத் திருவிழாவில் பக்தா்கள் வருகை அதிகரிப்பால் சுமாா் 110 மெட்ரிக். டன் குப்பை தேங்கியது. ஆணையா் அறிவுறுத்தலின்படி குப்பையை அகற்றி மகாமகக் குளத்தை சுற்றி கிருமிநாசினி தெளித்து சீரமைப்பு செய்யப்பட்டது என்றாா்.