பெங்களூரு கூட்ட நெரிசல் விவகாரம்: கர்நாடக கிரிக்கெட் சங்கத்தில் அடுத்தடுத்து ராஜ...
குருமூர்த்தி, சைதை துரைசாமியுடனான சந்திப்பு நட்பு ரீதியிலானது: ராமதாஸ்
பத்திரிகையாளர் எஸ்.குருமூர்த்தி, சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி ஆகியோருடனான சந்திப்பு நட்பு ரீதியிலானது என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் தோட்டத்திலுள்ள தனது இல்லத்திலிருந்து கார் மூலம் சென்னைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் சனிக்கிழமை காலை (ஜூன் 7) புறப்பட்டுச் சென்றார்.
அதற்கு முன்னதாக செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசுகையில், மருத்துவப் பரிசோதனைக்காக சென்னைக்கு செல்லவில்லை. நான் நலமாக உள்ளேன். குடும்பத்தினரைச் சந்திப்பதற்காக சென்னை செல்கிறேன்.
ஆடிட்டர் குருமூர்த்தி, சைதை துரைசாமி ஆகியோர் என்னை சந்தித்து பேசிவிட்டுச் சென்றனர். அது நட்பு ரீதியிலான சந்திப்பாகும். அவர்கள் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
குருமூர்த்தியுடனான எனது நட்பு நீண்டநாள் நட்பாகும். அவரை நான் மிகவும் மதிக்கிறேன். அதேபோன்று, சைதை துரைசாமியுடனும் எனக்கு நீண்டநாள் நட்பு உண்டு.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வந்து சந்தித்து பேசினார். சென்னையிலிருந்து திங்கள்கிழமை தைலாபுரம் வருகிறேன். செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களை சந்தித்து பேசுகிறேன் என்றார் ராமதாஸ்.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், கட்சித் தலைவர் பொறுப்பை தானே ஏற்றுக் கொள்வதாகவும், தலைவராக இருந்த அன்புமணி ராமதாஸ் செயல் தலைவராக இருப்பார் என்றும் கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டார். இதைத் தொடர்ந்து ராமதாஸுக்கும், அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன.
கட்சிக்கு புதிய மாவட்டச் செயலர்களை ராமதாஸ் நியமித்து வரும்நிலையில், ஏற்கெனவே அந்த பொறுப்பில் இருப்பவர்கள் பதவியில் தொடர்வார்கள் என அன்புமணி ராமதாஸ் கூறி வருகிறார். இந்த நிலையில், கடந்த 5-ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் தோட்டத்துக்கு வந்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தனது தந்தை ராமதாஸ், தாய் சரஸ்வதி உள்ளிட்டோரை சந்தித்துப் பேசினார்.
இதைத் தொடர்ந்து பத்திரிகையாளர் எஸ்.குருமூர்த்தி, சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி ஆகியோரும் வியாழக்கிழமை தைலாபுரம் தோட்டத்துக்கு வந்து, 3 மணி நேரத்துக்கு மேலாக பாமக நிறுவனர் ராமதாஸுடன் ஆலோசனை நடத்திச் சென்றனர். தனது நீண்டகால நண்பர் ராமதாஸ் என்ற அடிப்படையில், அவரைச் சந்திக்க வந்ததாக குருமூர்த்தி தெரிவித்தார்.
இதையும் படிக்க:டெய்லர் முதல் யூடியூபர் வரை.. உளவாளிகளுக்கான உத்திகளை மாற்றியிருக்கும் பாகிஸ்தான் ஐஎஸ்ஐ!