ஜிஎஸ்டி குறைப்பு எதிரொலி: பல்வேறு பொருட்களின் விலையை குறைத்த பதஞ்சலி ஃபுட்ஸ்!
கூடும் கூட்டம் ஓட்டாக மாறாது; விஜய்க்கு மட்டுமல்ல எனக்கும் பொருந்தும்: கமல்ஹாசன்
சென்னை: விஜய்க்கு கூடிய கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறாது. இது விஜய்க்கு மட்டுமல்ல எனக்கும் பொருந்தும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் மக்கள் நீதி மய்யத்தின் மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள முத்தமிழ் பேரவை அரங்கில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்றது.
இன்று ஞாயிற்றுக்கிழமை விழுப்புரம் மண்டல நிர்வாகிகள் உடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களுடன் பேசியதாவது:
நாட்டின் உயரிய திரைப்பட விருதான ‘தாதா சாகேப் பால்கே’ விருது, மலையாள நடிகர் மோகன்லாலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, அவருக்கு எனது வாழ்த்துகள். தனக்கு அந்த விருது கிடைக்கவில்லை என யாரும் ஆதங்கம் படக்கூடாது. நிறைய திறமையானவர்கள் அந்த வரிசையில் நிற்க வேண்டும் என தெரிவித்தார்.
மக்களுக்கு சேவை செய்ய அரசியலுக்கு வரும் நடிகர்களை அரசியல்வாதியாக பார்க்காமல் சினிமா நடிகரை பார்ப்பதற்கான கூட்டமாகதான் உள்ளதா?, விஜய்க்கு முன்னோடியாக அரசியலுக்கு வந்த நீங்கள் இதை எப்படி பார்கிறார்கள்.... என்னை ரசிகர்கள் ஏன் தேடி வந்தார்கள் என்பதை ரசிகர்களிடம் தான் கேட்க வேண்டும்.
சினிமாவுக்கு வந்தால் நன்றாக நடி என்பார்கள் எனவும், இவனெல்லாம் எப்படி நடிகராக வரப் போகிறான் என நடிக்கும் போதே கூறுவார்கள் என தெரிவித்தார்.
விஜயை பார்க்க வரும் கூட்டம் ஓட்டாக மாறுமா...? கண்டிப்பாக இந்த கூட்டம் ஓட்டாக மாறாது. அது எல்லா தலைவருக்கும் பொருந்தும், எனக்கும் பொருந்தும். இந்தியாவிலுள்ள அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும் பொருந்தும். கூட்டம் சேர்ந்துவிட்டால் அவையெல்லாம் ஓட்டாக மாறாது எனவும் தெரிவித்தார்.
இன்று மாலை நாட்டு மக்கள் இடையே பிரதமர் மோடி பேச உள்ளார் என்ற கேள்விக்கு, பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே என்ன பேச போகிறார் என்பதை நாட்டு மக்களில் ஒருவனான நானும் கேட்க உள்ளேன் என தெரிவித்தார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு என்ன ஆலோசனை கூற விரும்புகிறீர்கள்...
நல்ல பாதையில் செல்ல வேண்டும், தைரியமாக முன்னேறுங்கள், மக்களுக்காக செய்யுங்கள், எல்லா அரசியல்வாதிகளுக்கும் வைக்கக்கூடிய வேண்டுகோள் தான் இது. மக்களில் ஒருவனாக இதை தான் சொல்லி இருப்பேன். நாட்டு மக்களான எங்களையும் கொஞ்சம் பாருங்கள் எங்களின் முன்னேற்றத்துக்காக வேலை செய்யுங்கள். எந்த இடத்தில் கொண்டு போய் வைக்க வேண்டுமோ அந்த இடத்தில் உங்களை வைப்போம் என மக்கள் சொல்கிறார்கள். அதை தான் நானும் சொல்கிறேன் என கூறினார்.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பணிகளை மக்கள் நீதி மய்யம் தொடங்கி விட்டதா?
அதன் வேளையாக தான் இந்த கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
திமுக கூட்டணியில் உள்ள அரசியல் கட்சிகள் இரட்டை இலக்கு தொகுதிகள் கேட்கிறார்கள் உங்கள் எதிர்பார்ப்பு... எங்களுடைய எதிர்பார்ப்பை உங்களிடம் கூறுவேனா என தெரிவித்தார்.
திமுகவின் தலைமைக்கு நாங்கள் நெருக்கமாக உள்ளோம். அன்பாக, கண்ணியமாக இருக்கிறார்கள். 75 ஆண்டுகால கட்சி எல்லா உரிமையும் தட்டி கேட்டு விட முடியாது. அவர்களது செயல்பாடுகளை தட்டிக் கேட்கக்கூடிய உரிமை எல்லா மக்களுக்கும் கொடுத்து இருக்கிறார்கள் என நினைக்கிறேன்.
அதில் ஒருவனாக நான் கேட்கலாம். ஆனால் இது கொடுங்கள். அது கொடுங்கள் என 75 ஆண்டுகால கட்சியை எப்படி கேட்க முடியும். எங்கள் தகுதியை நிரூபித்துக் கொண்டு இதற்கு ஏற்றார் போல் தொகுதி கொடுங்கள் என கேட்பதுதான் நியாயமாக இருக்கும்.
திமுக கூட்டணி வலுமையாக உள்ளதா?
அப்படி இல்லை என்றால் நான் போய் பேசி இருப்பேனா. நான் முதலில் நினைக்க வேண்டும் நீங்கள் நினைப்பது இருக்கட்டும். உங்களுக்கு உங்கள் வேலை, நான் என் வேலையை செய்கிறேன். எத்தனை கட்சிகள் வந்தாலும் மக்கள் வரவேண்டும். எந்த தலைவர்கள் வேண்டுமானாலும் வரட்டும். முக்கியமாக மக்கள் வெளியே இறங்கி வர வேண்டும். அந்த ஒரு நாளை பண்டிகை போல் வந்து ஐந்தாண்டு பண்டிகைபோல் மாற்றக்கூடிய வாய்ப்பு மக்களிடம் இருக்கிறது. உங்கள் வாழ்க்கையான அதை குத்தகைக்கு விட்டுவிட வேண்டாம் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள் என கமல்ஹாசன் கூறினார்.