மும்பை தாக்குதல்: தஹாவூா் ராணாவின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிப்பு
கோயில் கூட்டம் தவிர்க்க வேண்டும்! மனோ தங்கராஜ் பேச்சுக்கு கொந்தளித்த அண்ணாமலை
கோயில் திருவிழாக்கள், விளையாட்டு நிகழ்வுகளில் அதிகளவில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று தமிழக பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியதற்கு தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவிக்கும்வகையில் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில்,
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில், காங்கிரஸ் அரசின் நிர்வாகத் தோல்வியால், கூட்ட நெரிசலில் சிக்கி, பலர் உயிரிழந்தது குறித்த கேள்விக்கு, பொதுமக்கள் கோயில் திருவிழாக்களுக்கு செல்லக் கூடாது என்று பதிலளித்திருக்கிறார் அமைச்சர் மனோ தங்கராஜ். கோயில் சொத்துக்களையும், பக்தர்கள் காணிக்கையாகக் கொடுக்கும் உண்டியல் பணத்தையும், சுரண்டிக் கொண்டிருக்கும் கூட்டம், இன்று பொதுமக்கள் கோயில் திருவிழாவுக்கு செல்வது நாகரிகம் இல்லை என்று கூறுகின்றனர்.
எது நாகரிகம்? தமிழகத்தின் ஒட்டுமொத்த கனிம வளங்களையும் கடத்தி விற்பதா அல்லது ஆவின் பால் கொழுப்பைக்கூட விட்டு வைக்காமல் திருடுவதா? இந்தியா கூட்டணிக் கட்சியின் நிர்வாகத் தோல்வியை மறைக்க, பொதுமக்கள் கூட்டமாகக் கோயில் திருவிழாக்களுக்கு செல்லக் கூடாது என்று கூறும் அமைச்சர் மனோ தங்கராஜ், தனது கட்சித் தலைவரிடம் இப்படிச் சொல்வாரா?
தமிழகத்தில் கள்ளச்சாராயமும், கஞ்சாவும், போதைப் பொருள்களும் ஆறாக ஓடிக் கொண்டிருக்கின்றன. கொலை நடைபெறாத நாளே இல்லை என்ற அளவில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது. இந்த நிலையில், இவர் பகுத்தறிவு பற்றி பேசுகிறார் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், கோயில் திருவிழாக்களைத் தேடித் தேடிச் செல்லும் துர்கா ஸ்டாலின் உள்பட திமுக குடும்பத்தினரும் நாகரிகமற்றவர்களா என்று தமிழக பாஜக செயலாளர் டாக்டர் எஸ்.ஜி. சூர்யா விமர்சித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில், காங்கிரஸ் அரசின் நிர்வாகத் தோல்வியால், கூட்ட நெரிசலில் சிக்கி, பலர் உயிரிழந்தது குறித்த கேள்விக்கு, பொதுமக்கள் கோவில் திருவிழாக்களுக்கு செல்லக் கூடாது என்று பதிலளித்திருக்கிறார் அமைச்சர் திரு. மனோ தங்கராஜ்.
— K.Annamalai (@annamalai_k) June 5, 2025
கோவில்…
என்ன பேசினார் அமைச்சர் மனோ தங்கராஜ்?
பெங்களூருவில், புதன்கிழமை நடைபெற்ற ஆர்சிபி வெற்றிப் பேரணியில் 11 பேர் சிக்கி பலியாகினர்.
இதுகுறித்து, செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழக பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பேசுகையில், கர்நாடக அரசைப் பற்றி நான் எதுவும் கூறவில்லை. என்னுடைய தனிப்பட்ட கருத்து இது. பல்வேறு பகுத்தறிவு பிரசாரங்களையும் மேற்கொள்வதுடன், பகுத்தறிவு அடிப்படையில் ஒரு சமூகத்தைக் கட்டமைக்கவும் முயற்சி செய்து வருகிறோம்.
கோயில் திருவிழாக்களில் அதிகளவிலான கூட்டம் கூடுவது, விளையாட்டு நிகழ்வுகளையும் அதிகளவில் பார்க்கச் செல்வது போன்றதெல்லாம் நாகரிகமான சமூகத்துக்கு நல்ல அடையாளமாகத் தெரிவதில்லை.
நீ பார்வையாளனாக இருக்காதே, பங்கேற்பவனாக இரு என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. நேற்று கூடிய கூட்டத்தில் எத்தனை பேர் கிரிக்கெட் மட்டையைப் பிடித்திருப்பார்கள். பொது இடங்களில் அதிகளவிலான கூட்டம் கூடி, நெருக்கடியை ஏற்படுத்துவதை பொதுமக்களே தவிர்க்க வேண்டும்.
இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. கர்நாடக அரசைப் பற்றி நான் எதுவும் கூறவில்லை. இது பெரும்பாலான இடங்களில் நடக்கிறது. பொதுமக்கள், தங்கள் அறிவைப் பயன்படுத்த வேண்டும். கூட்டங்களில் முண்டியடித்துக் கொண்டு செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.