எரிவாயு சிலிண்டருக்கு ரூ. 500, இளைஞர்களுக்கு ரூ. 5000: பாமக நிழல் பட்ஜெட்!
சாம்பியன்ஸ் டிராபி: பரிசளிப்பு விழாவுக்கு அழைக்கப்படாத பாகிஸ்தான் பிரதிநிதி!
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பரிசளிப்பு விழாவின்போது, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் பிரதிநிதியை மேடைக்கு அழைக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி - 2025 தொடரின் இறுதிப் போட்டி துபையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிலையில், நியூசிலாந்தை வீழ்த்திய இந்திய அணி 3-வது முறையாக கோப்பையை வென்றது.
இந்த தொடரின் பரிசளிப்பு நிகழ்வு துபை மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. அதில், ஐசிசி தலைவர் ஜெய் ஷா, பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி மற்றும் செயலாளர் தேவஜித் சைகியா ஆகியோர் மேடைக்கு வந்து வீரர்களுக்கு பரிசளித்தனர்.
இந்த தொடரை நடத்திய நாடான பாகிஸ்தான் தரப்பில் ஒருவரும் மேடையில் இல்லாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க : சாம்பியன்ஸ் டிராபி: 3-வது முறையாக இந்தியா சாம்பியன்!
இதனிடையே, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இயக்குநர்களின் ஒருவருமான சுமைர் அகமது மைதானத்தில் இருந்தும் அவரை ஐசிசி அழைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் நடைபெறும் கூட்டு நாடாளுமன்றக் கூட்டத்தில் பங்கேற்றிருப்பதால், அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் மொஹ்சின் நக்வி துபைக்கு பயணம் மேற்கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் பாகிஸ்தானின் பிரதிநிதியாக சுமைர் அகமது அனுப்பப்பட்டிருந்தார். ஆனால், இறுதி நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்த ஐசிசி அவரை மேடைக்கு அழைக்காதது சர்ச்சையாகியுள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் நடத்திய நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி, அந்நாட்டுக்குச் செல்ல மறுத்துவிட்டது.
இதனால், இந்திய அணி விளையாடும் போட்டிகள் மட்டும் துபை மைதானத்தில் நடத்தப்பட்டது. இறுதிப் போட்டியில் இந்தியா விளையாடியதால் துபை மைதானத்துக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.