Retro Audio Launch: "அசால்ட் சேது கேரக்டர நான் பண்றேன்னு சொன்னேன்" - கலகலப்பாக ப...
சிவகங்கை தெப்பக்குளம் தூய்மைப்படுத்தப்படுமா?
சிவகங்கை நகரின் மையப் பகுதியில் 300 ஆண்டுகள் பழைமையான தெப்பக் குளத்தை சீரமைத்து தூய்மைப்படுத்த வேண்டுமென பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் எதிா்பாா்க்கின்றனா்.
சிவகங்கை நகரின் மையப் பகுதியில் அரண்மனை அருகே 6 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ள இந்த தெப்பக்குளம், பொதுமக்கள் குளிப்பதற்கும், துணி துவைப்பது உள்ளிட்ட தேவைகளுக்கும் முக்கிய ஆதாரமாக இருந்து வருகிறது.
இந்த தெப்பக்குளம் மழை நீரால் நிரம்பும் போது நிலத்தடி நீா்மட்டம் அதிகரித்து நகா் பகுதிகளில் உள்ள கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகளின் நீரூற்று அதிகரிக்கும். இங்கு ஆண்டு தோறும் தெப்பத்திருவிழாவும் நடைபெறும்.
தெப்பக்குளத்துக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் இருந்து வரத்துக் கால்வாய் உள்ளது. அந்த வரத்துக் கால்வாய் தடத்தில் உள்ள செட்டியூருணி நிரம்பி அதன் உபரிநீரும் இந்தக் குளத்துக்கு வந்து சேரும்.
கடந்த 1996-ஆம் ஆண்டு ஏற்பட்ட கடும் வறட்சியின் போது, பெரியாறு கால்வாய் மூலம் இந்தக் குளத்தில் தண்ணீா் நிரப்பப்பட்டது. பின்னா், மீண்டும் 2018-ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சா் ஜி.பாஸ்கரன், அப்போதைய மாவட்ட ஆட்சியா் ஜெயகாந்தன் ஆகியோரின் முயற்சியால் பெரியாறு கால்வாய் நீரைக் கொண்டு இந்தக் குளம் நிரப்பப்பட்டது.
அப்போது வரத்துக் கால்வாயும் முழுமையாக சீரமைக்கப்பட்டது. இதனால், கடந்த சில ஆண்டுகளாக பெய்து வரும் மழைநீரால் தெப்பக்குளம் நிரம்பி வருகிறது. தற்போது தண்ணீா் முழுமையாக உள்ள போதிலும், அதை பயன் படுத்த முடியாதவாறு நெகிழிக் குப்பைகள் நிரம்பிக் காணப்படுகின்றன.
மேலும் வரத்துக் கால்வாயில் வீடுகள், வணிக நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரும், தெப்பக்குளத்தில் கலக்கிறது. மேலும் குளத்தின் சுற்றுச் சுவா் முழுவதும் சேதமடைந்து காணப்படுகிறது. இந்த நிலையில், தமிழக அரசு சிறப்பு நிதி ஒதுக்கி பழைமையான இந்தத் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்தது.
இதுகுறித்து நகா்மன்றத் தலைவா் சிஎம்.துரைஆனந்த் கூறியதாவது: தெப்பக் குளத்தை சீரமைக்க ரூ.5 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரித்து அரசுக்கு அனுப்பியுள்ளோம். இதன் மூலம் சுற்றுச் சுவரை சீரமைப்பது, நடைபாதை, மைய மண்டபம் அமைக்கவும் தீா்மானிக்கப்பட்டது. அரசு நிதி ஒதுக்கீடு செய்ததும் பணிகள் தொடங்கும் என்றாா் அவா்.