சேலம் மாநகர கூட்டத்தில் அடிதடி: ஒருபக்கம் தேசிய கீதம், மறுபக்கம் ஸ்நாக்ஸ் தாக்குதல் - நடந்தது என்ன?
சேலம் மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் எதிர்க்கட்சியை சேர்ந்த யாதவமூர்த்தி என்பவர் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து பேசினார். அப்போது மாநகராட்சி டெண்டர்களை குறைந்த விலைக்கு கேட்கும் கான்ட்ராக்டர்களுக்கு ஒப்பந்தம் வழங்காமல் அமைச்சருக்கு வேண்டப்பட்டவர்கள் என்பதற்காக கூடுதல் தொகைக்கு டெண்டர் வழங்கப்படுவதாக குற்றம் சாட்டினார். இதனால் ஆத்திரமடைந்த திமுக கவுன்சிலர்கள் சிலர், அவரை சுற்றி வளைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து, திமுக உறுப்பினர்கள் அவரைச் சூழ்ந்து தாக்கியதாகக் கூறப்படுகிறது. பின்னர், இரு தரப்பினரும் ஜிலேபி மற்றும் மிச்சரைக் கொண்டு தாக்கிக்கொண்டனர். இதைப் பார்த்த அதிமுக கவுன்சிலர்களும் மிச்சரைக் கொண்டு பதிலடி கொடுத்தனர்.
இதற்கிடையே மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் இளங்கோவன் ஆகியோர் கூட்டத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டு கூட்டரங்கை விட்டு வெளியேறினர்.
இது குறித்து எதிர்க்கட்சியை சேர்ந்த ஏழு மாமன்ற உறுப்பினர்கள் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், "சேலம் மாவட்டத்தில் ஆளுங்கட்சியாக இருக்கும் திமுக-வின் அவல நிலையை எதிர்க்கும் ஒரே கட்சியாக நாங்கள் உள்ளோம். தவறான ஒப்புதல்கள் மூலம் லட்சக்கணக்கில் பணத்தை வீணடிக்கிறார்கள். இதை ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டுகிறோம். ஆனால், இதைத் தாங்கிக்கொள்ள முடியாத தி.மு.க மாமன்ற உறுப்பினர்கள் எங்களைத் திட்டமிட்டுத் தாக்குகிறார்கள்.

அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் வரை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம். ஒரு எதிர்க்கட்சித் தலைவர் என்று கூட பார்க்காமல், அவர்கள் என் இடத்திற்கு வந்து என்னைக் கன்னத்தில் அடிக்கும் அளவிற்கு சூழ்நிலையை உருவாக்கியுள்ளனர்.

திமுக ஆட்சி மாநகராட்சியைப் புறக்கணித்து வருகிறது. இந்த மாநகராட்சியை மேயர் நடத்துகிறாரா அல்லது தனிநபர் நடத்துகிறாரா என்ற கேள்வி எழுகிறது. குறைவான டெண்டர் தொகை கேட்பவர்களுக்கு வழங்காமல், ஏன் அதிக டெண்டர் தொகை கேட்பவர்களுக்கு வழங்குகிறார்கள் என்று கேட்டதற்கு, திமுக உறுப்பினர்கள் இவ்வளவு மோசமாக நடந்துகொள்கிறார்கள்," என்று கூறி, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, திமுக கவுன்சிலர் சுகாசினி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் வரை கூட்ட அரங்கை விட்டு வெளியேற மாட்டோம் எனக் கூறி மேயர் இருக்கை முன்பு அதிமுக கவுன்சிலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் அதிமுக கவுன்சிலர் யாதவமூர்த்தி தன்னை தாக்கிவிட்டதாக கோரி திமுக கவுன்சிலர் சுகாசினி சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார்.
ஒருபுறம் இந்த களேபரம் நடந்து கொண்டிருக்க, மேயரும் ஆணையரும் பாதியில் வெளியேறினர். அப்போது கூட்டத்தை நிறைவு செய்யும் போது பாடப்படும், தேசிய கீதம் பாடப்பட்டது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.