மேற்கு வங்கத்தில் அடுத்தடுத்து 3 இ-ரிக்ஷாக்கள் மீது மோதிய கார்: 7 பேர் பலி
தமிழக நிதிநிலை அறிக்கை 2025-26: 10 மாவட்டங்களில் புதிய அரசு கல்லூரிகள்!
தமிழக அரசின் அடுத்த நிதியாண்டுக்கான (2025-26) நிதிநிலை அறிக்கை, சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 14) தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. நிதியமைச்சா் தங்கம் தென்னரசு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வருகிறார்.
அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலை தமிழ்நாடு எதிா்கொள்ளவுள்ள நிலையில், அதற்கு முன்பாக திமுக தலைமையிலான அரசு தாக்கல் செய்யும் 5 ஆவது மற்றும் கடைசி முழுமையான நிதிநிலை அறிக்கை இதுவாகும்.
எனவே, பொதுமக்கள், அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் என பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகள், எதிா்பாா்ப்புகளை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டிருக்கும் நிலையில், நிதியமைச்சா் தங்கம் தென்னரசு இரண்டாவது ஆண்டாக நிதிநிலை 2025-26 ஆம் நிதியாண்டுக்கான அறிக்கையைத் தாக்கல் செய்து வருகிறார்.
இதற்கு முன்னதாக பேரறிஞர் அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு மரியாதை செலுத்தினார்.
மொழிக் கொள்கையில் சமரசம் இல்லை!
எவ்வித சமரசத்திற்கு இடம்தராமல் இருமொழிக் கொள்கையை தமிழ்நாடு தொடர்ந்து பின்பற்றி வருகிறது. இதன்மூலம் தமிழ் பண்பாட்டை பாதுகாப்பதோடு, ஆங்கிலத்தின் உதவியோடு, உலகை வெல்லும் ஆற்றல்களை தமிழர்கள் பெற்றிருக்கிறார்கள்.
இன்றைக்கு இந்தியாவின் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.
அதில் இடம் பெற்ற சில முக்கிய அறிவிப்புகள் வருமாறு:
10 மாவட்டங்களில் புதிய அரசு கல்லூரிகள்!
தமிழ்நாட்டில் மாணவர்களின் உயர்கல்விச் சேர்க்கை தேவையை நிறைவேற்றும் விதமாக, நீலகிரி மாவட்டம் குன்னூர், திண்டுக்கல் மாவட்டம் நத்தம், சென்னை மாவட்டம் ஆலந்தூர், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர், சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை, தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர், பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் மற்றும் தூத்துக்குடி வட்டம் ஒட்டப்பிடாரம் ஆகிய இடங்களில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும்.
ரூ.100 கோடியில் பிரம்மாண்ட அறிவியல் வளர்ச்சி மையம்
மாணவர்களிடையே அறிவியல் சிந்தனையை வளர்த்திடவும், இளைஞர்களுக்கு புதிய தொழில்நுட்ப வசதிகளை அறிமுகம் செய்திடவும் சிங்கப்பூர் அறிவியல் மையத்துடன் இணைந்து நவீன முறையில் சென்னையில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் அறிவியல் மையம் உருவாக்கப்படும்.
இந்த மையத்தில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதப்புலங்கள், விண்வெளி, வானவியல் துறைகளின் மெய்நிகர் மாதிரிகளும் உடம் பெற்றிருக்கும்.
மேலும் குழந்தைகளுக்கான அறிவியல் பூங்கா, நவீன வானவியல் தொலைநோக்கு வசதிகள், ஆழ்கடல் உயிரினங்கள் மற்றும் வானவியல் நகர்வுகளை ஆழ்ந்து உணரக்கூடிய டிஜிட்டல் திரை அனுபவ அரங்குகள், அறிவியல் மாநாட்டு கூடங்கள், பார்வையாளர்களுக்கான பசுமை புல்வெளிகள் என அனைத்து வசதிகளும் இடம் பெறும்.