சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் அரையிறுதி: இலங்கைக்கு 180 ரன்கள் இலக்கு!
டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இலங்கை அணி!
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இலங்கை மகளிரணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி வென்ற நிலையில், டி20 தொடர் இன்று (மார்ச் 14) தொடங்கியது.
இதையும் படிக்க: ராகுல் டிராவிட்டுடன் மீண்டும் இணைவது குறித்து மனம் திறந்த சஞ்சு சாம்சன்!
இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் இன்று (மார்ச் 14) நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 101 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் எம்மா மெக்லியாடு அதிகபட்சமாக 44 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, கேப்டன் சூஸி பேட்ஸ் 21 ரன்களும், ஜெஸ் கெர் 10 ரன்களும் எடுத்தனர். மற்ற வீராங்கனைகள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
இலங்கை தரப்பில் மல்கி மதாரா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அவரைத் தொடர்ந்து, இனோஷி பிரியதர்ஷினி மற்றும் கவிஷா தில்ஹாரி தலா 2 விக்கெட்டுகளையும், சுகந்திகா குமாரி மற்றும் சமாரி அத்தப்பத்து தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இதையும் படிக்க: ரிஷப் பந்த் தனித்துவமான வீரர்; முன்னாள் விக்கெட் கீப்பர் புகழாரம்!
வெற்றியுடன் தொடங்கிய இலங்கை
102 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி 14.1 ஓவர்களில் இலக்கை எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது. இலங்கை அணியில் அதிரடியாக விளையாடிய கேப்டன் சமாரி அத்தப்பத்து 48 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 9 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, கவிஷா தில்ஹாரி மற்றும் நிலாக்ஷி டி சில்வா தலா 12 ரன்கள் எடுத்தனர்.
நியூசிலாந்து தரப்பில் ஜெஸ் கெர் இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். சிறப்பாக செயல்பட்ட மல்கி மதாராவுக்கு ஆட்ட நாயகி விருது வழங்கப்பட்டது.
இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.