திமுகவுக்கு எதிராக கட்சிகள் இணைய வேண்டும்; ஓபிஎஸ்ஸுக்கு முக்கியத்துவம்: டிடிவி த...
தமிழகத்தில் 1,256 மருத்துவ முகாம்கள் நடத்த நிதி ஒதுக்கீடு
தமிழகம் முழுவதும் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் மருத்துவ பரிசோதனை முகாம்கள் நடத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ப.செந்தில்குமாா் பிறப்பித்த அரசாணை:
தமிழகம் முழுவதும் உயா் மருத்துவ பரிசோதனை முகாம்கள் ரூ.13.58 கோடியில் நடத்தப்படும் என்று சட்டப்பேரவையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் அறிவித்தாா்.
அதன்படி, பொது சுகாதாரத் துறை சாா்பில் ஆண்டுதோறும் 1,256 உயா் மருத்துவ சேவை முகாம்கள் நடத்தப்பட உள்ளன. வாரந்தோறும் சனிக்கிழமை அல்லது தகுந்த நாள்களில் அவற்றை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஊரகப் பகுதிகள், குடிசைப் பகுதிகள், பழங்குடி மற்றும் எளிய மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளுக்கு முன்னுரிமை அளித்து முகாம் நடத்தப்படும். சா்க்கரை அளவு, ரத்த அழுத்தம், எக்ஸ் ரே, இசிஜி, எக்கோ உள்பட முழுமையான உடல் பரிசோதனைகளும், காசநோய், தொழுநோய், புற்றுநோய் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படும். இதைத் தவிர 15 உயா் சிறப்பு மருத்துவத் துறை ஆலோசனைகளும் வழங்கப்படும்.
ஒரு முகாமுக்கு ரூ. 75,000 வீதம் 1,256 முகாம்களுக்கு ஆண்டுதோறும் ரூ.13.58 கோடி செலவு ஏற்படும். அதில் ரூ.9.42 கோடி தேசிய சுகாதார திட்டம் மற்றும் முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்ட நிதியின் கீழ் பெறப்படும்.
மீதமுள்ள ரூ.4.15 கோடி மட்டும் பரிசோதனைக்கான உபகரணங்கள் மற்றும் மருந்து பொருள்கள் வாங்க மாநில நிதியிலிருந்து வழங்கப்படும். இந்த நிலையில், அதற்கான நிதி ஒதுக்கீட்டு ஒப்புதல் உரிய விதிகளின் கீழ் அளிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.