தமிழ்நாட்டில் புதிய சுங்கச்சாவடி! ஜூன் 12-ல் திறப்பு!
தஞ்சை அருகே மானம்பாடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய சுங்கச்சாவடி ஜூன் 12 ஆம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வரும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.
தஞ்சை - விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் சேத்தியாதோப்பு-சோழபுரம் இடையே மானம்பாடி பகுதியில் புதிய சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த சுங்கச்சாவடியில் வருகிற ஜூன் 12 ஆம் தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கூறியுள்ளது.
புதிய சுங்கச்சாவடியின் கட்டண விவரங்களையும் ஆணையம் அறிவித்துள்ளது.

அதன்படி, கார், வேன் உள்ளிட்ட இலகுரக வாகனங்கள் ஒருமுறை பயணிக்க ரூ. 105 கட்டணமும் அதேநாளில் திரும்பி வர ரூ. 160 கட்டணமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
வணிகப் பொருள்களை ஏற்றிச் செல்லும் இலகுரக வாகனங்கள், மினி பேருந்து ஆகியவற்றுக்கு ரூ. 170, திரும்பிவர ரூ. 255 எனவும் பேருந்துகளுக்கு ரூ. 360, ரூ. 540 எனவும்
அதிகபட்சமாக 7 அல்லது அதற்கு மேற்பட்ட சக்கரங்கள் கொண்ட கனரக வாகனங்களுக்கு ரூ. 685, திரும்பிவர ரூ. 1,025 எனவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.