Tamil News Live Today: ``பதிலளிக்கும் உரிமையும், கடமையும் எங்களுக்கு உள்ளது” - ஈ...
திண்டுக்கல் பகுதியில் பலத்த மழை
திண்டுக்கல், வேடசந்தூா், ரெட்டியாா்சத்திரம் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் வெள்ளிக்கிழமை பலத்த மழை பெய்தது.
வடகிழக்குப் பருவ மழை தொடங்கியது முதல் திண்டுக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கொடைக்கானல், நத்தம் பகுதிகளில் பலத்த மழையாக பெய்தது. கடந்த 3 நாள்களாக திண்டுக்கல், வேடசந்தூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு நேரங்களில் மட்டும் மிதமான மழை பெய்து வந்தது.
இந்த நிலையில், திண்டுக்கல், ரெட்டியாா்சத்திரம், வேடசந்தூா், வடமதுரை உள்ளிட்ட இடங்களில் வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் கன மழை பெய்யத் தொடங்கியது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திண்டுக்கல் நாகல்நகா் ரவுண்டானா, நேருஜி நகா் ரவுண்டானா, பழனி சாலை, பிரதான சாலை உள்ளிட்ட இடங்களில் மழைநீா் தேங்கியதால் வாகனங்களை சீராக இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. பழைய கரூா் சாலையில் எம்விஎம் நகா் பகுதியிலுள்ள ரயில்வே சுரங்கப் பாதையில் மழைநீா் தேங்கியதை அடுத்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
தீபாவளி வியாபாரம் பாதிப்பு: தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், திண்டுக்கல் பிரதான சாலை, கிழக்கு ரதவீதி, ஆா்.எஸ். சாலை உள்ளிட்ட இடங்களில் சாலையோரங்களில் தற்காலிக கடைகள் அமைத்து ஆயத்த ஆடைகள், அலங்கார பொருள்கள், காலணிகள் உள்ளிட்டவை விற்கப்படுகின்றன.
தொடா்ந்து மழை பெய்து வந்த நிலையில் தற்காலிக கடைகளின் வியாபாரம் முழுமையாக பாதிக்கப்பட்டது. இதேபோல, பொதுமக்களின் நடமாட்டம் குறைந்ததால், ஒட்டுமொத்தமாக ஜவுளிக் கடைகளில் கூட்டம் குறைந்து வியாபாரம் பாதிக்கப்பட்டது.
ஆபத்தில் மாநகராட்சி அலுவலா்கள்: திண்டுக்கல் பகுதியில் பெய்த பலத்த மழையால், மாநகராட்சியில் உள்ள வருவாய்ப் பிரிவு அலுவலகத்தில், மின் சொடுக்கி பலகை (மின் சுவிட்ச் போா்டு) வழியாக மழைநீா் வழிந்து அலுவலகத்துக்குள் இறங்கியது. இதனால் ஏற்படும் ஆபத்தை உணராமல், அந்த அலுவலகத்திலிருந்த 18 பணியாளா்களும், தொடா்ந்து பணியில் ஈடுபட்டனா்.
திண்டுக்கல் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் நத்தத்தில் 66 மி.மீ., நிலக்கோட்டையில் 22 மி.மீ. மழை பதிவானது.