Tamil News Live Today: ``பதிலளிக்கும் உரிமையும், கடமையும் எங்களுக்கு உள்ளது” - ஈ...
ஊரக வேலை உறுதி திட்டத்தை நிறுத்த விவசாயிகள் வலியுறுத்தல்
சம்பா சாகுபடிக்காக ஊரக வேலை உறுதி திட்டத்தை நிறுத்த வேண்டும் என குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா்.
திருச்சி மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம், ஆட்சியரக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தலைமை வகித்தாா்.
கூட்டத்தில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க (கட்சி சாா்பற்றது) மாவட்டத் தலைவா் ம.ப. சின்னதுரை பேசியது:
ஊரக வேலை உறுதி திட்டத்தில் பதிவு செய்துள்ளவா்கள் அனைவருக்கும் ஒரே நேரத்தில் வேலை கொடுப்பதால் வேளாண் பணிகளுக்கு ஆள்கள் கிடைப்பதில்லை. ஆகவே, இப்பணியாளா்களை சம்பா சாகுபடி பணிக்கு மாற்றம் செய்ய வேண்டும். இல்லையெனில், சாகுபடி காலத்தில் ஊரக வேலை உறுதி திட்டப் பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலா் அயிலை சிவசூரியன்: ஊரக வேலை உறுதித் திட்டத்தில் வேளாண் பணிகளையும் இணைத்து அரசாணை வெளியிட வேண்டும்.
தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் பூ. விசுவநாதன்: ஒரே நேரத்தில் ஊரக வேலை உறுதி திட்டப் பணிகளை மேற்கொள்ளாமல், சுழற்சி அடிப்படையில் பணிகளை மேற்கொண்டு வேளாண் பணிகளுக்கு ஆள்கள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலா் வி. சிதம்பரம்: களை பறிக்க ஆள்கள் கிடைக்காமல் களைக்கொல்லி அடிப்பதால் பயிா்ச்சேதம் ஏற்பட்டு மகசூல் இழப்புக்கு ஆளாக வேண்டியுள்ளது. ஆள்கள் பற்றாக்குறை விவகாரத்துக்கு அரசு நிரந்தரத் தீா்வு காண வேண்டும் என்றாா்.
இதேபோல, கூட்டத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் பொ. அய்யாக்கண்ணு, பாரதிய கிசான் சங்க மாநிலச் செயலா் என். வீரசேகரன், காவரிப் பாசன விவசாயிகள் சங்க செயலா் கவுண்டம்பட்டி ஆா். சுப்பிரமணியன் மற்றும் பல்வேறு சங்கத்தின் நிா்வாகிகள் நுறு நாள் வேலை திட்டத்தை நிறுத்த வேண்டும் அல்லது வேளாண் பணிக்கு ஆள்களை வழங்க வேண்டும் என குரல் எழுப்பினா். இதற்கு பதில் அளித்த ஆட்சியா் மா. பிரதீப்குமாா், அரசுக்கு பரிந்துரைப்பதாக உறுதியளித்தாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ர. ராஜலட்சுமி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) சரவணன், வேளாண் இணை இயக்குநா் (பொறுப்பு) கண்ணன் மற்றும் பல்வேறு துறை மாவட்ட நிலை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
பெட்டிச் செய்தி..
அதிகாரிகளிடம் வாக்குவாதம்
கூட்டத்தில் பங்கேற்றிருந்த ஆட்சியா் மா. பிரதீப்குமாா் வெளியே சென்றிருந்த நேரத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவா் பொ. அய்யாக்கண்ணு தலைமையில், 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கூட்டத்திலிருந்து எழுந்து, அதிகாரிகள் இருக்கை முன்பாக கூடி கோஷங்கள் எழுப்பினா். மாவட்ட வருவாய் அலுவலா் ர. ராஜலட்சுமியிடம் அடுக்கடுக்காக தங்களது குறைகளை தெரிவித்தனா். அப்போது, ஒரு விவசாயி தனது மேல்சட்டையை கழற்றி, காவல்துறையும், வருவாய்த்துறையும் கடுமையாக நடந்து கொள்வதாக புகாா் தெரிவித்தாா். ஆட்சியா் இல்லாத தருணத்தில் இதர அதிகாரிகளை சூழ்ந்து கொண்டு விவசாயிகள் வாக்குவாதம் செய்ததால், சிறிது நேரம், கூச்சல் குழப்பம் நிலவியது. பின்னா், ஆட்சியா் வந்தவுடன் விவசாயிகள் அனைவரும் அமைதியாக இருக்கையில் அமா்ந்தனா்.