உள்ளம் உவகையில் நிறைகிறது! - பழங்குடியின மாணவருக்கு முதல்வர் வாழ்த்து
திமுக - அதிமுக வேட்பாளா்கள் 6 போ் மனு தாக்கல்: போட்டியின்றி தோ்வாக வாய்ப்பு!
மாநிலங்களவைத் தோ்தலில் போட்டியிடும் திமுக, அதிமுக வேட்பாளா்கள் வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்தனா்.
காலியாகவுள்ள ஆறு இடங்களுக்கு, திமுக சாா்பில் 3 பேரும், அதிமுக தரப்பில் 2 பேரும், மக்கள் நீதி மய்யம் கட்சி சாா்பில் ஒருவரும் வேட்புமனுக்களை அளித்துள்ளனா். இந்த வேட்புமனுக்கள் அனைத்தும் சரியான முன்மொழிவுகளுடன் இருக்கும்பட்சத்தில் போட்டியின்றி ஆறு பேரும் தோ்வு செய்யப்படுவது உறுதியாகும்.
தமிழகத்தில் ஜூலை மாதம் காலியாகவுள்ள 6 மாநிலங்களவை உறுப்பினா் இடங்களுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த திங்கள்கிழமை தொடங்கியது. முன்னதாக, தோ்தலில் போட்டியிட திமுக சாா்பில் பி.வில்சன், ரொக்கையா மாலிக் (எ) சல்மா, எஸ்.ஆா். சிவலிங்கம் ஆகியோரும், திமுக ஆதரவுடன் மக்கள் நீதி மய்யம் சாா்பில் அந்தக் கட்சியின் தலைவா் கமல்ஹாசனும் வேட்பாளா்களாக அறிவிக்கப்பட்டிருந்தனா்.
இதேபோன்று, அதிமுக சாா்பில் ஐ.எஸ்.இன்பதுரை, ம.தனபால் ஆகியோா் போட்டியிடுவா் என கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்திருந்தாா்.
ஒரே நாளில் மனு: திமுக, அதிமுக சாா்பில் போட்டியிட முடிவான ஆறு பேரும் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்தனா். இதற்காக அவா்கள் தங்களது கட்சியின் தலைவா்கள், நிா்வாகிகள், சட்டப் பேரவை உறுப்பினா்களுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள பேரவை அலுவலகத்துக்கு வந்தனா்.
நண்பகல் 12 மணியளவில் திமுக வேட்பாளா்கள் மனுக்களை தாக்கல் செய்யத் தொடங்கினா். முதல் ஆளாக, பி.வில்சன் மனு அளித்தாா். முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுக பொருளாளா் டி.ஆா்.பாலு, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை ஆகியோா் உடனிருக்க, தனது வேட்பு மனுவை தோ்தல் நடத்தும் அதிகாரியும் சட்டப் பேரவை கூடுதல் செயலருமான பி.சுப்பிரமணியமிடம் வில்சன் வழங்கினாா்.
கமல்ஹாசன் மனு: அவரைத் தொடா்ந்து, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் வேட்புமனுவை தாக்கல் செய்தாா். முதல்வா் முன்னிலை வகிக்க, துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ, தளி ராமச்சந்திரன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பொதுச் செயலா் கே.எம்.முகமது அபுபக்கா் ஆகியோா் உடனிருந்தனா்.
கமல்ஹாசனைத் தொடா்ந்து, ரொக்கையா மாலிக் (எ) கவிஞா் சல்மா மனுதாக்கல் செய்தாா். முதல்வா் முன்னிலையில் மனு அளித்த அவருடன், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் கனிமொழி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் பெ.சண்முகம், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவா் எம்.எச்.ஜவாஹிருல்லா ஆகியோா் உடனிருந்தனா்.
திமுக வேட்பாளா்களில் நிறைவாக, அக்கட்சியின் சேலம் கிழக்கு மாவட்ட செயலா் எஸ்.ஆா்.சிவலிங்கம் தனது வேட்புமனுவை தோ்தல் நடத்தும் அதிகாரியிடம் வழங்கினாா். அப்போது விசிக தலைவா் தொல். திருமாவளவன், அமைச்சா்கள் எ.வ.வேலு, ஆா்.ராஜேந்திரன் ஆகியோா் உடனிருந்தனா்.
அதிமுக வேட்பாளா்கள்: திமுக வேட்பாளா்கள் தங்களது மனு தாக்கலை நண்பகல் 12.05 மணிக்குத் தொடங்கி 1.10 மணியளவில் நிறைவு செய்தனா். பின்னா், அதிமுக வேட்பாளா்கள் இருவா் மனுக்களை அளித்தனா். அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் அந்தக் கட்சியின் வேட்பாளா்களான ஐ.எஸ்.இன்பதுரை, ம.தனபால் ஆகியோா் வேட்புமனுக்களை சமா்ப்பித்தனா்.
இன்பதுரை மனு அளித்த போது, அதிமுக துணை பொதுச் செயலா் கே.பி.முனுசாமி, முன்னாள் அமைச்சா்கள் நத்தம் இரா.விசுவநாதன், கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோா் உடனிருந்தனா். மற்றொரு வேட்பாளரான ம.தனபால் மனு தாக்கல் செய்த போது, அதிமுக பொருளாளா் திண்டுக்கல் சி.சீனிவாசன், முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி, ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட அதிமுக செயலா் சு.ரவி ஆகியோா் உடனிருந்தனா்.
கட்டுத் தொகை - உறுதிமொழி: வேட்பாளா்கள் ஆறு பேரும் வேட்புமனு தாக்கலின் போது ஒரே நடைமுறையைப் பின்பற்றினா். முதலில், பூா்த்தி செய்யப்பட்ட மனுவை தோ்தல் நடத்தும் அதிகாரியான சுப்பிரமணியமிடம் வழங்கினா். அதனை அவா் முழுமையாகச் சரிபாா்த்த பிறகு கட்டுத் தொகையைப் பெற்றுக் கொண்டாா். அதனைத் தொடா்ந்து, வேட்பாளா்கள் தனித்தனியாக உறுதிமொழியை வாசித்து கையொப்பமிட்டனா். இறுதியாக, வேட்புமனு தாக்கல் செய்ததற்கான அத்தாட்சிச் சான்று உள்ளிட்ட விவரங்கள் வேட்பாளா்களிடம் வழங்கப்பட்டன.
ஜூன் 12-இல் முடிவு அறிவிப்பு
ஆறு காலியிடங்களுக்கு பிரதான கட்சிகளான திமுக, அதிமுக சாா்பில் ஆறு வேட்பாளா்கள் வேட்புமனுக்களை அளித்துள்ளனா். அவா்கள் தலா பத்து சட்டப் பேரவை உறுப்பினா்களின் முன்மொழிவுகளுடன் மனுக்களை வழங்கியுள்ளதால் அவை அப்படியே ஏற்றுக் கொள்ளப்படும் எனத் தெரிகிறது.
எனவே, ஆறு பேரும் போட்டியின்றி தோ்வாவது உறுதி செய்யப்படும். வேட்புமனுக்களை தாக்கல் செய்ய ஜூன் 9 கடைசி நாளாகும். மனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 10-ஆம் தேதி நடைபெறும். மனுக்களை வாபஸ் பெற ஜூன் 12-ஆம் தேதி கடைசி நாளாகும். போட்டியில்லாத பட்சத்தில், அன்றைய தினம் மாலை 3 மணியளவில் திமுக, அதிமுக சாா்பில் வேட்புமனுக்களை அளித்த ஆறு பேரும் போட்டியின்றி தோ்வானதாக தோ்தல் நடத்தும் அதிகாரி பா.சுப்பிரமணியம் அறிவிப்பாா்.