திமுக மாநிலங்களவை வேட்பாளர்கள் : `வைகோ மாதிரி ஒருவர் நாடாளுமன்றத்தில்..!’
ஜூன் மாதம் நடைபெற உள்ள நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் தமிழ்நாட்டிலிருந்து போட்டியிடும் மூன்று திமுக வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. வழக்கறிஞர் வில்சனுக்கு மீண்டும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. இவரைத் தவிர கவிஞர் சல்மாவுக்கும், எஸ்.ஆர்.சிவலிங்கத்துக்கும் திமுக-வில் வாய்ப்பு தரப்பட்டுள்ளது.
சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் நடக்கும் இந்தத் தேர்தலில், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் நான்கு பேரை மாநிலங்களவைக்கு அனுப்ப முடியும். எனவே அந்த நான்காவது நபர் யார் என்பதுதான் எல்லாருடைய எதிர்பார்ப்புமாக இருந்தது.

2024 நாடாளுமன்ற தேர்தலின் போது கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்துக்கு நாடாளுமன்ற தொகுதிகள் எதுவும் ஒதுக்கப்படாமல், அதற்குப் பதில் அடுத்த நாடாளுமன்ற மேலவைத் தேர்தலின் போது ஒரு சீட் வழங்கப்படும் என்றே ஒப்பந்தம் கையெழுத்தானதாக சொல்லப்பட்டது.
எனவே ஆரம்பத்திலிருந்தே அந்த நான்காவது இடம், கமல்ஹாசனுக்குதான் என உறுதியாக நம்பினர் மக்கள் நீதி மய்யத் தொண்டர்கள். தற்போது அவர்களின் அந்த ஆசை நிறைவேறியுள்ளது. திமுக ஒரு இடத்தை மக்கள் நீதி மய்யத்துக்கு ஒதுக்கி இருக்கிறது.
அதேநேரம், `தற்போது பதவிக்காலம் முடிவடையும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு மீண்டும் நாடாளுமன்றம் செல்வதற்கான வாய்ப்பை திமுக வழங்கும்’ என்ற ஒரு பேச்சும் கடந்த சில நாள்களாக அடிபட்டது.
`வலு இழந்த புயல்’
மதிமுகவுடன் ராஜ்யசபா சீட் தொடர்பாக எந்தவொரு ஒப்பந்தத்தையும் திமுக போடவில்லை என்றாலும், நாடாளுமன்றத்தில் பா.ஜ.க-வுக்குச் சரியான பதிலடி தர வைகோ மாதிரியான ஒருவர் நம் கூட்டணியில் இருந்தால் நல்லது என முதல்வரிடம் திமுக கூட்டணியில் இருக்கும் சிலரே சொன்னதாகவும் கூட தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் தற்போது வைகோ நாடாளுமன்றம் செல்லவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

இந்தச் சூழல் குறித்து மதிமுகவினர் சிலரிடம் பேசினோம்.
''தலைவர் பேசறார்னா நாடாளுமன்றத்துல எதிர்க்கட்சித் தலைவர்களே அன்னைக்கு அவையில இருந்து அதைக் கவனிப்பாங்க. அந்தளவு அவரின் பேச்சு ஆழமா இருக்கும். அதேநேரம் உரிமை சார்ந்த பிரச்னைகள்ல நம்முடைய பிரச்னைகளை வலுவா எடுத்துச் சொல்லி எல்லாருக்கும் புரிய வைப்பார். தமிழ்நாட்டின் முக்கியமான பல பிரச்னைகள்ல மத்திய அரசின் கவனத்தை ஈர்த்து எத்தனையோ நல்ல தீர்வுகளையும் கண்டிருக்கார்.
இவர் மாதிரியான தலைவர்கள் தொடர்ந்து நாடாளுமன்றத்துல இருக்கிறது நம் மாநிலத்துக்கு தான் நல்லது. ஆனா இப்ப திமுக கூட்டணியில் கமல்ஹாசனுக்கு சீட் தர்றதா ஏற்கனவே ஒப்பந்தம் போட்டுட்டதால் அதன்படி அறிவிச்சிருக்கறதா தெரியவருது.
தேவையில்லாத சர்ச்சைக்கு வழி வகுக்கும்
இது தொடர்பாக துரை வைகோவே விளக்கம் தந்துட்டார். 'நாடாளுமன்றத்துக்கு உள்ளே மட்டுமல்ல, எப்போதுமே மக்களின் குரலாக வைகோ ஒலிப்பார்'னு சொல்லியிருக்கிற அவர், 2026 தேர்தலிலும திமுக கூட்டணியில் மதிமுக அங்கம் வகிக்கும்னும் சொல்லிட்டாரே' என்கிறார்கள் அவர்கள்.
இருந்தாலும் மதிமுகவின் அடிமட்டத் தொண்டர்கள் மத்தியில் ஒருவித ஏமாற்றம் தெரிவதைக் காண முடிகிறது.

அரசியல் விமர்சகர்கள் சிலரிடம் இந்த விவகாரம் தொடர்பாகப் பேசிய போது, 'வைகோவா, கமலானு வந்தா வைகோவை அனுப்பலாம்னு திமுக ரெண்டாம் கட்டத் தலைவர்கள் சிலரே தங்கள் கருத்தைச் சொல்லியிருக்காங்க. ஆனா கமல்ஹாசனுக்குக் கொடுத்த வாக்குறுதியை மீறினா, அடுத்த வருஷம் நடக்கவிருக்கிற சட்டசபைத் தேர்தல் நேரத்துல அது தேவையில்லாத சர்ச்சைக்கு வழி வகுக்கும்னு அதை நிராகரிச்சிருக்கார் முதல்வர்.
தவிர, கமலுக்கு சீட் கொடுக்கிறது மூலமா அதிமுகவுக்கும் ஒரு நெருக்கடி உண்டாகும். 'நாங்க வாக்கு தந்த படி கமலுக்கு சீட் தந்துட்டோம். ஆனா நீங்க' என தேமுதிக அதிமுக இடையிலான ராஜ்யசபா சீட் பிரச்னையைப் பெரிதாக்கும் அரசியலும் இதில் அடங்கியிருக்கிறதில்லையா' என்கின்றனர் அவர்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY