இந்தியாவுடன் வலுவான நட்புறவு! பயங்கரவாதத்துக்கு டென்மார்க் கண்டனம்
ஆர்சிபியின் அபார பந்துவீச்சில் பணிந்த பஞ்சாப் கிங்ஸ்; 102 ரன்கள் இலக்கு!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான குவாலிஃபையர் 1 போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் 101 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
ஐபிஎல் தொடரில் சண்டீகரில் இன்று (மே 29) நடைபெற்று வரும் குவாலிஃபையர் 1 போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, பஞ்சாப் கிங்ஸ் முதலில் விளையாடி வருகிறது.
பந்துவீச்சில் அசத்தல்; 101 ரன்களுக்கு ஆட்டமிழப்பு
முதலில் விளையாடி வரும் பஞ்சாப் கிங்ஸ் அணி, ஆர்சிபியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 14.1 ஓவர்களில் 101 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான பிரியன்ஷ் ஆர்யா 7 ரன்களிலும், பிரப்சிம்ரன் சிங் 18 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன் பின், ஜோஷ் இங்லிஷ் (4 ரன்கள்), கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் (2 ரன்கள்), நேஹல் வதேரா (8 ரன்கள்), ஷஷாங் சிங் (3 ரன்கள்), முஷீர் கான் (0 ரன்), ஹர்பிரித் பிரார் (4 ரன்கள்) எடுத்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
நிதானமாக விளையாடிய மார்கஸ் ஸ்டாய்னிஸ் அதிகபட்சமாக 17 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அஸ்மதுல்லா ஓமர்ஸாய் 12 பந்துகளில் 18 ரன்கள் எடுத்தார். அதில் ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜோஸ் ஹேசில்வுட் மற்றும் சுயாஷ் சர்மா தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர். யஷ் தயாள் 2 விக்கெட்டுகளையும், புவனேஸ்வர் குமார் மற்றும் ரோமாரியோ ஷெப்பர்டு தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
102 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி ஆர்பிசி விளையாடி வருகிறது.