Biopic Movies : திரையில் உயிர்ப்பிக்கப்பட்ட வாழ்க்கைகள்... இந்திய பயோபிக்குகளின் கதை!
'பயோபிக்' என்ற வார்த்தையைச் சொன்னதும் நம் நினைவுகளுக்குச் சட்டென வருவது பாலிவுட்தான். அந்தளவிற்கு எண்ணில் அடங்காத அளவிற்கு பயோபிக் திரைப்படங்களை எடுத்து பாலிவுட் சோபிக்கவும் செய்திருக்கிறது, சோதிக்கவும் செய்திருக்கிறது.
இந்திய சினிமாவிலேயே தொடர்ந்து அதிகமாக பயோபிக் திரைப்படங்கள் வருவது பாலிவுட்டில்தான்.

எப்போதும் ஒவ்வொரு திரைப்பட ஜானர்களுக்கும் ஒரு சீசன் அமையும். ஒரு பேய் படம் ஹிட் அடித்தால், அதைத் தொடர்ந்து பேய் படங்களாக வரும். அதுபோலவே ஒரு காதல் படங்கள் வெற்றி பெற்றால், காதல் பற்றிய திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகும்.
ஆனால், பயோபிக் திரைப்படங்களைப் பொறுத்தமட்டில் அதற்கென தனி சீசன் எதுவும் கிடையாது. எவர்க்ரீனாகத் தொடர்ந்து எப்போதும் பயோபிக் திரைப்படங்கள் வந்துகொண்டே இருக்கும்.
பயோபிக் திரைப்படங்கள் சில நோக்கங்களைக் கொண்டவை. சில சமயங்களில் அரசியல் கட்சிகள் தங்களுடைய பிரசார நோக்கத்திற்காகச் சித்தாந்தங்களைப் பரப்பும் வகையில் பயோபிக்குகளை எடுத்து வெளியிடும்.
ஒரு விஷயத்தை எப்போதும் சினிமாவின் வாயிலாகச் சொல்லும்போது அதற்கு வீரியம் அதிகமாக இருக்கும். சொல்லவரும் விஷயங்களும் மக்களிடையே பெரிதளவில் சென்று சேரும்.
அதற்காகவே பிரசாரம் செய்வதற்கு சினிமாவை ஒரு ஆயுதமாகக் கையில் எடுத்து பலர் பயன்படுத்துகிறார்கள்.

இதைத் தாண்டி, வரலாற்றையும், கலாசாரத்தையும் எடுத்துரைக்கும் கருவியாகவும் சில பயோபிக் திரைப்படங்களைப் பயன்படுத்துகிறார்கள்.
இதைத் தாண்டி, வரலாற்றில் மறைக்கப்பட்ட விஷயங்கள், மனிதர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்து பலரும் அறிந்திடவும், பல துறைகளில் சாதித்த மனிதர்களின் கதைகளைப் பதிவு செய்திடவும் இது போன்ற பயோபிக் திரைப்படங்கள் எடுக்கப்படுகின்றன.
ஹாலிவுட்டில்தான் முதன்முதலாக பயோபிக் திரைப்படங்கள் வெளியாகின. 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே பயோபிக் என்ற வகையிலான சினிமாவை எடுக்கத் தொடங்கியது ஹாலிவுட்.
அப்படி ஆப்ரகாம் லிங்கனுடைய பயோபிக் திரைப்படத்தை எடுத்து வெளியிட்டது ஹாலிவுட். நாளடைவில் பயோபிக் திரைப்படங்களின் வடிவங்களும் மாற்றத்தை எட்டியது.
இப்படி 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஹாலிவுட்டில் பரிசயமாகி இருந்த பயோபிக் திரைப்பட ஃபார்முலாவை மற்ற நாட்டு சினிமாக்களும் பின்பற்றத் தொடங்கின.

இந்தியாவில் 1950-களில் புராணக் கதைகளைத் தான் முதன்முதலில் எடுத்து வெளியிட்டார்கள். அதன் பிறகுதான் உண்மையான பயோபிக் திரைப்படங்கள் இந்திய சினிமாவில் வெளியாகத் தொடங்கின.
சரியாகச் சொல்லப்போனால், 1960-களில்தான் பயோபிக் திரைப்படங்கள் இந்திய சினிமாவில் அடுத்தடுத்து வெளியானது. இந்திய சினிமாவில் பயோபிக்குகள் எடுக்கத் தொடங்கிய காலகட்டத்தில் அரசர்களின் கதைகளையும், சுதந்திரப் போராட்ட வீரர்களின் கதைகளையும் சினிமாவாக எடுத்தார்கள்.
இப்படித்தான் 1965-ம் ஆண்டு பகத் சிங்கின் பயோபிக் திரைப்படமாக 'ஷாகீத்' திரைப்படம் வெளியானது. இதன் பிறகு பயோபிக்கின் வடிவம் சற்றே மாற்றத்தை எட்டியது.
2000-ம் ஆண்டிற்குப் பிறகு விளையாட்டு வீரர்களின் கதைகளையும், சினிமா நட்சத்திரங்களின் கதைகளையும் படமாக எடுத்து வெளியிட்டார்கள். 2010-ம் ஆண்டுக்குப் பிறகுதான் பயோபிக் திரைப்படங்கள் பெரியளவிலான வளர்ச்சியை இந்திய சினிமாவில் எட்டியது. அதற்குப் பிறகுதான் பாலிவுட்டில் அடுத்தடுத்து தொடர்ந்து பயோபிக்குகள் வெளியாகின.

பாலிவுட் பெரும்பாலும் இந்தியாவின் முக்கிய தலைவர்களின் கதைகளையும், இந்தியாவின் முக்கிய விளையாட்டு வீரர்களின் கதைகளையும் படமாக எடுத்தது. ஒட்டுமொத்த இந்தியாவின் முகமாக இருக்கும் பலரின் கதைகளை பாலிவுட் எடுக்கும்போது அத்திரைப்படம் இந்தியா முழுவதும் கவனத்தை எட்டியது.
இப்போதும் இதே நுட்பத்தைத் தான் பாலிவுட் பின்தொடர்ந்து வருகிறது. ஓ.டி.டி. தளங்களின் வளர்ச்சிக்குப் பிறகு வெப் சீரிஸ் ஃபார்மெட்டிலும் பயோபிக்குகளை எடுத்தார்கள். இப்படியான பயோபிக் திரைப்படங்களில் அதனுடைய பட்ஜெட்டும், அதனுடைய மார்க்கெட்டும் முக்கியமான பங்கு வகிக்கிறது.
பாலிவுட் பெரிய பட்ஜெட்களை முதலீடு செய்தும் பயோபிக் படங்களை எடுத்துத் தான் ஒரு கில்லாடி என்பதையும் நிரூபித்திருக்கிறது. 1960-ம் ஆண்டுக்குப் பிறகு தமிழ் சினிமாவிலும் வீரபாண்டிய கட்டபொம்மன், பாரதியார் உட்பட பலரின் பயோபிக் திரைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன. இதையும் தாண்டி இன்னும் சில பயோபிக் திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் வெளியாகி இருக்கின்றன. கோலிவுட், டோலிவுட், பாலிவுட்டைக் காட்டிலும் மல்லுவுட்டில் இதுவரை குறைவான பயோபிக் திரைப்படங்களே வெளியாகி இருக்கின்றன.

மல்லுவுட்டின் கதை சொல்லும் பாணி வேறுபட்டது. கதாபாத்திரங்களையும் அதன் உணர்வுகளையும் மையமாக வைத்து கதை சொல்வார்கள்.
ஏற்கெனவே மேல் குறிப்பிட்டபடி, பயோபிக் திரைப்படங்களில் பட்ஜெட், மார்க்கெட் முக்கியப் பங்கு வகிக்கும். இப்படியான காரணங்களால்தான் பெரிதளவில் மல்லுவுட்டில் பயோபிக் திரைப்படங்கள் வெளிவரவில்லை.
இந்திய சினிமாவில் இதுவரை வெளியாகி தாக்கத்தை ஏற்படுத்திய, பெரிதளவில் வரவேற்பைப் பெற்ற முக்கியமான பயோபிக் திரைப்படங்களை இங்கு பார்ப்போமா...
ஷாகீத்:
இந்திய சினிமாவில் பயோபிக்குகள் எடுக்கத் தொடங்கிய தொடக்கக் காலகட்டத்தில் வெளியான திரைப்படம்தான் இந்த 'ஷாகீத்'. பகத் சிங்கின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றியதுதான் இந்தத் திரைப்படம். நடிகர் மனோஜ் குமார் பகத் சிங்காக இப்படத்தில் நடித்திருப்பார்.
இந்தப் படம் இன்றும் முக்கியமான பயோபிக் திரைப்படங்களில் சிறப்பான இடத்தைப் பிடித்திருப்பதற்கு சில காரணங்களும் இருக்கின்றன. இப்படியான புரட்சியாளர்களின் கதையை முதன்முதலாக மெயின்ஸ்ட்ரீம் சினிமாவில் காட்சிப்படுத்தியது இத்திரைப்படம்.

காந்தி:
பயோபிக் திரைப்படங்கள் பட்டியலை எடுத்துக்கொண்டால், அதில் இந்த 'காந்தி' படத்தைத் தவிர்க்கவே முடியாது. இத்திரைப்படத்தை எடுத்தவர் ஒரு இந்திய இயக்குநர் கிடையாது. ஒரு ஆங்கில இயக்குநர்தான் இப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டு இங்கிலாந்தில் வசிக்கும் நடிகர் பென் கிங்ஸ்லிதான் இப்படத்தில் காந்தியாக நடித்திருப்பார்.
இந்திய நிறுவனமும், யுனைடெட் கிங்டமின் ஒரு தயாரிப்பு நிறுவனமும் இணைந்து இப்படத்தைத் தயாரித்திருந்தன. இப்படம் வெளியாகி அப்போதே சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றது. காந்தியுடைய வாழ்க்கையின் பல பக்கங்களையும் இந்தப் பயோபிக் பேசியது. இத்திரைப்படம் அப்போது 8 ஆஸ்கர் விருதுகளையும் வென்று சாதனை படைத்தது.
சர்தார்:
சர்தார் வல்லபாய் பட்டேலின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமாக இப்படத்தை எடுத்து 1993-ம் ஆண்டு வெளியிட்டார்கள். நடிகர் பரேஷ் ரவால் சர்தார் வல்லபாய் பட்டேலின் கதாபாத்திரத்திற்கு சரியாகப் பொருந்தி நடித்திருப்பார்.
சிறப்பான ஒப்பனைகளை மேற்கொண்டு நியாயம் செய்யும் நடிப்பை வழங்கியதற்காக அப்போது பாராட்டுகளை அள்ளினார் பரேஷ் ரவால். இத்திரைப்படம் அப்போது நல்ல வரவேற்பைப் பெற்றதோடு இரண்டு தேசிய விருதுகளையும் பெற்றது.

டாக்டர் பாபசாஹேப் அம்பேத்கர்:
அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றைப் பேசும் இத்திரைப்படம் இன்றும் முக்கியமான பயோபிக் திரைப்படங்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
அம்பேத்கரின் வாழ்க்கை குறித்து ஆழமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு இப்படத்தை எடுத்திருப்பார்கள். மம்மூட்டி அம்பேத்கர் கதாபாத்திரத்தில் நடித்து அப்போது தேசிய விருதையும் வென்றிருந்தார்.
ஷாகித்:
வரலாற்று கதைகளையும், சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றிய கதைகளும் அடுத்தடுத்து பயோபிக் திரைப்படங்களாக வெளிவந்துகொண்டிருந்த சமயத்தில் புதிய பென்ச் மார்க்கை இத்திரைப்படம் அமைத்தது.
மனித உரிமை செயற்பாட்டாளரான வழக்கறிஞர் ஷாகித் அஷ்மியின் வாழ்க்கையை மையப்படுத்தியதுதான் 2012-ல் வெளியான இந்தப் பயோபிக் திரைப்படம்.
பயோபிக் திரைப்படங்களில் அதன் காலத்தைப் பிரதிபலிக்க கலை இயக்கம், ஒப்பனை என அத்தனை விஷயங்களிலும் மெனகெட வேண்டியிருக்கும். அதற்குக் கொஞ்சம் அதிகமாக பட்ஜெட்டும் அவசியம். ஆனால், இந்தப் பயோபிக் திரைப்படத்தை குறைவான பட்ஜெட்டிலேயே எடுத்து பெரியளவிலான வரவேற்பைப் பெறச் செய்தார்கள்.

பாக் மில்கா பாக்:
2013-ல் வெளியான இத்திரைப்படம் வழக்கமாக பயோபிக் படங்கள் களமாடும் கதைகளத்திலிருந்து முழுமையாக வேறுபட்டது. மில்கா சிங் என்கிற விளையாட்டு வீரரின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்தப் பயோபிக் படத்தை எடுத்திருப்பார்கள்.
விளையாட்டு வீரர்களின் கதைகளையும் பயோபிக் படங்களாக எடுக்கலாம் என்ற புதியதொரு அலையையும் இத்திரைப்படம் அறிமுகப்படுத்தியது. இப்படியான விளையாட்டு வீரர்களின் கதைகள் பார்வையாளர்களை ஊக்கப்படுத்தி உத்வேகம் அளித்தது. இன்று விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி வெளியாகும் பயோபிக் படங்களுக்கு இத்திரைப்படம் முன்னோடி என்றே சொல்லலாம்.
எம்.எஸ்.தோனி:
கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கையை எமோஷனல் மாறாமல் அப்படியே இப்படத்தின் மூலம் திரையில் கொண்டு வந்தார்கள்.
சுஷாந்த் சிங் ராஜ்புட் தோனியின் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாகப் பொருந்தி நியாயம் செய்யும் நடிப்பைக் கொடுத்திருப்பார்.
அதனால்தான், அவர் மறைவுக்குப் பிறகும் இத்திரைப்படம் அவரின் அடையாளமாகப் பலரின் மனதில் நிற்கிறது. தோனியின் வாழ்க்கைப் பக்கங்களைக் காட்சிப்படுத்திய இத்திரைப்படம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு அப்படியொரு எமோஷனல் பிணைப்பையும் ஏற்படுத்தியிருக்கும்.

மகாநதி:
பழம்பெரும் நடிகை சாவித்ரியின் பயோபிக் திரைப்படமாக உருவாகி 2018-ம் ஆண்டு வெளியாகியிருந்தது. இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கியிருந்த இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் சாவித்ரியாக நடித்து பலரின் பாராட்டுகளைப் பெற்றார்.
அத்தோடு, அந்த ஆண்டுக்கான சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் தட்டிச் சென்றார். ஒரு பயோபிக் திரைப்படமாகப் பெரிதளவில் கவனம் ஈர்த்த இப்படம், அப்போதைய கோல்டன் சினிமாவையும் நம் கண் முன் நிறுத்தியது.
சினிமா தொடர்பான பயோபிக் திரைப்படங்களில் இத்திரைப்படம் மிக முக்கியமானது. இந்த வரிசையில், மலையாளத்தில் ப்ரித்விராஜ் நடிப்பில் வெளியான 'செல்லுலாய்டு' திரைப்படத்திற்கும் முக்கிய இடமுண்டு.
இதைத் தாண்டி, 'வீரபாண்டிய கட்டபொம்மன்', 'மேரி கோம்', 'ராக்கெட்ரி', 'சூப்பர் 30', 'யாத்ரா', 'என்.டி.ஆர். கதாநாயகுடு' உட்பட பல பயோபிக் திரைப்படங்களும் இந்திய சினிமா வரலாற்றில் முக்கியமானவையாகத் திகழ்கின்றன. இதைத் தாண்டி, உங்களுக்கு மிகவும் பிடித்த பயோபிக் படங்களை கமெண்ட்டில் பதிவிடுங்கள்.