பஞ்சாப் கிங்ஸ் அபார வெற்றி: இறுதி ஆட்டத்தில் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது!
சிரியாவின் கடலோர நகரங்களில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்!
சிரியாவின் டார்டூஸ் மற்றும் லடாகியா ஆகிய கடலோர மாகாணங்களின் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.
டார்டூஸ் மற்றும் லடாகியா ஆகிய மாகாணங்களின், மக்கள் குடியிருப்புகளின் அருகில் அமைந்துள்ள முன்னாள் சிறப்புப் படையின் தலைமையகம் மற்றும் ராணுவ தளங்களைக் குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டார்டூஸ் நகரத்தில் சிறப்புப் படைகள் பயன்படுத்திய ராணுவ தளங்கள் மற்றும் அல்-வுஹைப் தொழிற்பேட்டை ஆகிய பகுதிகளின் மீது இஸ்ரேலின் போர் விமானங்கள் நேற்று (மே 30) தாக்குதல் நடத்தியுள்ளன.
இதேபோல், லடாகியா மாகாணத்தின் ஸமா எனும் கிராமம் மற்றும் மினா அல்-பைடா துறைமுகப் பகுதியின் மீதும் நேற்று (மே 30) தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சிரியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், இந்தத் தாக்குதலில் உண்டான உயிர் மற்றும் பொருள் சேதங்கள் குறித்து எந்தவொரு தகவலும் வெளியிடப்படவில்லை. மேலும், சிரியாவின் பாதுகாப்புத் துறையும் இதுவரையில் எந்தவொரு அறிக்கையும் வெளியிடவில்லை.
இந்தத் தாக்குதல் குறித்து, இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிரியாவின் லடாகியா மாகாணத்திலிருந்த ஆயுதங்கள் சேகரிப்புக் கூடங்கள் தகர்க்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
மேலும், அங்கு சர்வதேச மற்றும் இஸ்ரேலிய கப்பல் போக்குவரத்துக்கு பாதிப்பை உள்ளாக்கக் கூடிய ஏவுகணைகள் இருந்ததாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த சில மாதங்களாகவே சிரியா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க:இந்தியா - பாகிஸ்தான் உடன்பாட்டுக்கு அமெரிக்கா காரணம்! 10-வது முறையாக டிரம்ப் பேச்சு!