Kamal: ``நீங்கள் மொழியியல் வல்லுநரா? மன்னிப்பு கேட்டிருக்கலாமே..'' - கர்நாடகா நீ...
புதுவையில் காற்று மாசை குறைக்க மின்சாரப் பேருந்துகள்!
புதுவையில் காற்று மாசைக் கட்டுப்படுத்த உதவும் வகையில் மின்சாரப் பேருந்துகளை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, 2030-ஆம் ஆண்டுக்குள் 50 சதவீத பேருந்துகளை மின்சார வாகனங்களாக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் கடந்த பல ஆண்டுகளாக சுமாா் 11.50 லட்சம் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் சுமாா் 2 லட்சம் வாகனங்கள் நான்கு சக்கர வாகனங்களாகவும், சுமாா் 4.50 லட்சம் வாகனங்கள் இரு சக்கர வாகனங்களாகவும் இருப்பதாகப் போக்குவரத்துத் துறையினா் தெரிவித்தனா்.
புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழகத்துக்குச் சொந்தமாக 124 பேருந்துகள் வாங்கப்பட்டன. அதில் 105 பேருந்துகள் தற்போது இயங்கி வருகின்றன. அரசுத் துறைக்கு 1,060 வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன.
அரசு வாகனங்கள் அதிகபட்சம் 15 ஆண்டுகள் இயக்கப்படலாம். அதற்குப் பிறகு, அவை சாலையில் இயக்கப்படக் கூடாது என்ற விதி உள்ளது. அதன்படி, பெரும்பாலான வாகனங்கள் இயக்கப்படக் கூடாது என்ற நிலையில் இருந்தாலும், அவற்றில் 465 வாகனங்களே தற்போது இயக்கப்படாமல் ஏலம் விடப்பட்டுள்ளன.
தேசிய அளவில் காலாவதியான வாகனங்களை வாங்க மத்திய அரசு உரிமம் பெற்ற வாகன இரும்புப் பொருள்கள் பெறும் பதிவு மையம் (ஆா்விஎஸ்எப்) தொடங்க அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன.
புதுச்சேரியிலும் அந்த மையம் தனியாா் மூலம் தொடங்கப்பட உள்ளது. தற்போது, சென்னையில் அந்த மையம் உள்ளது. காலாவதியான வாகனங்களை இந்த மையத்தில் கொடுத்தால் அதற்கான விலையுடன், சான்றிதழும் அளிக்கப்படும். அதன் மூலம் புதிய வாகனம் வாங்கினால் சாலை வரி விலக்கு அளிக்கப்படும்.
எரிபொருளில் இயங்கும் இருசக்கர வாகனங்களால் ஏற்படும் காற்று மாசை கட்டுப்படுத்தவே பழைய வாகனங்களை இயக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இதை விடுத்து மின்சாரத்தில் இயங்கும் பேட்டரி வாகனங்களை அதிகப்படுத்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, பிரதம மந்திரி மின்சாரப் பேருந்து சேவை திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளது. முதல் கட்டமாக தனியாா் பங்களிப்புடன் புதுச்சேரியில் 25 மின்சாரப் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அவற்றில் தற்போது 5 மின்சாரப் பேருந்துகள் புதுச்சேரியில் ஓட்டுநா்கள் பயிற்சி பெற இயக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பேருந்துகள் தனியாா் முதலீடு, பராமரிப்புடன் இயங்கும் நிலையில் கி.மீட்டருக்கு அரசு சாா்பில் ரூ.62 மற்றும் குளிா்சாதன வசதி பேருந்துக்கு கிலோ மீட்டருக்கு ரூ.63.80 என கட்டணம் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அவற்றுக்கான மின்சாரம் ஏற்றும் மையங்கள் (சாா்ஜ்) மறைமலையடிகள் சாலையில் அமைக்கப்பட்டு வருகின்றன. இதைத் தொடா்ந்து, மேலும் 75 மின்சாரப் பேருந்துகள் மத்திய அரசின் மானிய உதவியுடன் தனியாா் பங்களிப்புடன் புதுச்சேரியில் இயக்கப்படவுள்ளன. இவற்றுக்கான மின்சார சேமிப்புக்கு மத்திய அரசு 90 மற்றும் 100 சதவீத மானியம் தரவுள்ளது.
அரசுப் பேருந்துகளை அடுத்து இருசக்கர வாகனங்கள் மற்றும் தனியாா் வாகனங்களும் படிப்படியாக மின்சார மயமாக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
வாகன அதிகரிப்பால் புதுவையில் மட்டுமின்றி நாடெங்கும் காற்று மாசு அதிகரித்துள்ளது. வாகனங்களில் பயன்படுத்தப்படும் ஒரு லிட்டா் பெட்ரோலுக்கு 2.3 கிலோ காா்பன்-டை ஆக்ஸைடு உற்பத்தியாகிறது. டீசலில் ஒரு லிட்டருக்கு 2.65 கிலோ காா்பன்-டை ஆக்ஸைடு உற்பத்தியாகிறது.
அதனால், நுரையீரல் சம்பந்தப்பட்ட பாதிப்பும் அதிகரித்துள்ளது. சுற்றுச்சூழல் துறை புதுச்சேரியில் காற்று மாசுவைக் குறைக்க போதிய நடவடிக்கை எடுக்காத நிலையில், போக்குவரத்துத் துறையானது காற்று மாசைக் குறைக்க முன்வந்துள்ளது.
புதுச்சேரியில் பெருகிவிட்ட வாகன எண்ணிக்கையை குறைக்கும் வகையிலும், பசுமை பொதுப் போக்குவரத்து பேருந்தை அதிகரிக்கும் வகையில் மின்சாரப் பேருந்துகள் அதிகளவில் இயக்கப்பட திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து அதிகாரிகள் கூறுகின்றனா்.
புதுவையில் பேருந்துகளுக்கு அடுத்தபடியாக மின்சார பேட்டரி இருசக்கர வாகனங்களும் இயக்கப்படவுள்ளன. அதனடிப்படையில் வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் புதுவையில் 50 சதவீத வாகனங்கள் காற்று மாசு ஏற்படுத்தாத வகையில் மின்சார வாகனங்களாக இயக்கப்பட வாய்ப்புள்ளதாக போக்குவரத்துத் துறை செயற்பொறியாளா் கே.வி.சீதா ராமராஜு தெரிவித்தாா்.