ஊட்டி: ``அட்மிஷன் போட்டால் ரூ.5000 டெபாசிட்!'' - அரசுப் பள்ளியில் அடேங்கப்பா பிளான்!
கோடை விடுமுறை நிறைவடைந்திருக்கும் நிலையில், பள்ளிகள் திறக்கப்பட்டு நடப்பு கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் நேற்றிலிருந்து தொடங்கியிருக்கிறது. பள்ளிகளில் மாணவர் சேர்க்கையும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வரும் நிலையில், சேர்க்கையை அதிகரிக்கும் விதமாக அரசுப் பள்ளி ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ஊட்டி அருகில் உள்ள கீளூர் கோக்கலாடா அரசு உயர்நிலைப்பள்ளியில் சேரும் 1- ம் வகுப்பு மாணவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் தொகையை வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்ய இருப்பதாக கவர்ச்சி அறிவிப்பை வெளியிட்டு மாணவர் சேர்க்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த திட்டம் குறித்து தெரிவித்த கிராம மக்கள், "மாணவர் சேர்க்கைக் குறைவு காரணமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் பள்ளி மூடப்பட்டது. இந்த பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் மற்றும் ஊர் பொதுமக்களின் தொடர் முயற்சியால் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் இந்த பள்ளி திறக்கப்பட்டது. தற்போது இந்த பள்ளியில் 42 மாணவர்கள் கல்வி பயின்று வருகிறார்கள்.
மாணவர் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் விதமாக இந்த பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு அவர்களின் வங்கிக் கணக்கில் ரூ.5 ஆயிரத்தை டெப்பாசிட் செய்ய இருக்கிறோம். 10 - ம் வகுப்பை முடித்துச் செல்லும்போது முதிர்வுத் தொகையுடன் மொத்த பணத்தையும் பெற்றுக் கொண்டு உயர் கல்விக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

1 - ம் வகுப்பு மட்டுமின்றி 6 - ம் வகுப்பு வரை தற்போது புதிதாக சேரும் மாணவர்களின் வங்கிக் கணக்கில் 5 ஆயிரம் டெப்பாசிட் செய்யப்படும். 7,8,9,10 என ஒவ்வொரு வகுப்பில் சேரும் மாணவர்களுக்கும் குறிப்பிட்ட தொகை டெப்பாசிட் செய்யப்படும் " என்றனர்.