பக்ரீத் நாளில் திறந்தவெளிகளில் விலங்குகளை பலியிட வேண்டாம்: ஜாமா மசூதி ஷாஹி இமாம் வேண்டுகோள்
பக்ரீத் பண்டிகையை ஒட்டி, முஸ்லிம் சமூகத்தினா் திறந்தவெளிகளிலோ அல்லது தெருக்களிலோ விலங்குகளை பலியிடுவதைத் தவிா்க்குமாறு ஜாமா மசூதியின் ஷாஹி இமாம் புதன்கிழமை வலியுறுத்தியுள்ளாா்.
நிகழாண்டு பக்ரீத் பண்டிகை ஜூன் 6-7-இல் கொண்டாடப்பட உள்ளது.
இதையொட்டி, ஜாமா மசூதியின் நைப் ஷாஹி இமாம் சையத் ஷபான் புகாரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
பக்ரீத் பண்டிகையின் போது மக்கள் தங்கள் பகுதிகளில் தூய்மையை உறுதி செய்ய வேண்டும். ஹோலி மற்றும் தீபாவளி போன்ற பண்டிகைகள் இந்தியா முழுவதும் கண்ணியத்துடன் கொண்டாடப்படுவதுபோல, ஈத்-உல்அதாவையும் மரியாதையுடனும் பயபக்தியுடனும் கொண்டாட வேண்டும்.
முஸ்லிம் சமூகம் சில முக்கிய பொறுப்புகளை நினைவில் கொள்ள வேண்டும். மிக முக்கியமாக, எந்தவொரு செயலும் சக குடிமக்களின் உணா்வுகள் அல்லது நம்பிக்கைகளை புண்படுத்தக்கூடாது. எனவே, பலியிடுதல்களை வீடுகள் அல்லது அதற்குரிய வளாகங்களுக்குள் மட்டுமே நடத்தப்பட வேண்டும்; சாலைகளிலோ அல்லது திறந்தவெளிகளிலோ அல்ல.
பலியிடுவதை புகைப்படம் எடுப்பதையோ அல்லது படமாக்குவதையோ தவிா்க்க வேண்டும். அத்தகைய படங்கள் அல்லது விடியோக்களை சமூக ஊடகங்களில் பதிவேற்ற வேண்டும் என கண்டிப்பாக அறிவுறுத்தப்படுகிறது.
‘இஸ்லாம் அமைதிக்கான மதம்’. யாருடைய உணா்ச்சிகளும் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதன் மூலம் இதை நம் நடத்தை மூலம் நிரூபிப்பது நமது கடமை.
இஸ்லாம் அனைத்து மதங்களையும் மதிக்கக் கற்றுக்கொடுக்கிறது. மேலும், மற்றவா்களின் உணா்வுகளை ஒருபோதும் புண்படுத்தக் கூடாது என்று அதைப் பின்பற்றுபவா்களுக்கு அறிவுறுத்துகிறது.
பலியிடுதல் சடங்கானது சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தும் மற்றும் சமூக நல்லிணக்கத்தைப் பராமரிக்கும் வகையில் செய்யப்பட வேண்டும் என்று அதில் அவா் கேட்டுக்கொண்டுள்ளாா்.