ரெப்போ விகிதம் குறைப்பு எதிரொலி: பங்குச் சந்தை உயர்ந்து முடிவு!
மும்பை: ரிசர்வ் வங்கி எதிர்பார்த்ததை விட 50 அடிப்படை புள்ளிகள் வட்டி விகிதங்களைக் குறைத்து, பொருளாதாரத்தை ஆதரிக்கும் வகையில் பணப்புழக்கத்தை வழங்க வங்கிகளுக்கான ரொக்க இருப்பு விகிதத்தைக் குறைத்ததைத் தொடர்ந்து, சென்செக்ஸ் 746.95 புள்ளிகள் உயர்ந்ததும், நிஃப்டி 25,000 புள்ளிகள் என்ற நிலையை மீண்டும் அடைந்தது.
இன்றைய காலை நேர வர்த்தகத்தில் அனைத்து இழப்புகளை மீட்டெடுத்து, 30 பங்குகள் கொண்ட மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் காலை நேர வர்த்தகத்தில் 591.94 புள்ளிகள் உயர்ந்து 82,033.98 ஆக இருந்தது. 50 பங்குகள் கொண்ட நிஃப்டி 205.2 புள்ளிகள் உயர்ந்து 24,956.10 ஆக இருந்தது.
வர்த்தக முடிவில், 30-பங்கு கொண்ட மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 746.95 புள்ளிகள் உயர்ந்து 82,188.99 புள்ளிகளிலும், 50-பங்கு கொண்ட நிஃப்டி 25,000 என்ற நிலையை மீண்டும் அடைந்தும் 252.15 புள்ளிகள் உயர்ந்து 25,003.05 ஆக நிலைபெற்றது.
சமீபத்திய குறைப்புடன், ரிசர்வ் வங்கி 2025 ல் மொத்தம் 100 அடிப்படை புள்ளிகள் வட்டி விகிதங்களைக் குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. பிப்ரவரியில் கால் புள்ளி குறைப்பு மற்றும் ஏப்ரல் மாதத்தில் இதே போன்ற மற்றொரு அளவிலான குறைப்புடன் தொடங்கி, மத்திய வங்கி தனது பணவியல் கொள்கை நிலைப்பாட்டை இணக்கமான நிலையிலிருந்து நடுநிலைக்கு மாற்றியுள்ளது. இதனிடையில் வரும் தரவுகளைப் பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும் என்றார் மல்ஹோத்ரா.
இதையும் படிக்க: ரெப்போ வட்டி விகிதம் 0.5% குறைப்பு! வீடு, வாகன கடனுக்கான வட்டி குறைய வாய்ப்பு!
சென்செக்ஸில் பஜாஜ் ஃபைனான்ஸ் 4.93% மற்றும் ஆக்சிஸ் வங்கி 3.15% உயர்ந்த நிலையில் மாருதி, இண்டஸ்இண்ட் வங்கி, பஜாஜ் ஃபின்சர்வ், எடர்னல், மஹிந்திரா & மஹிந்திரா, டாடா ஸ்டீல், கோடக் மஹிந்திரா வங்கி, டைட்டன், எச்டிஎஃப்சி வங்கி மற்றும் என்டிபிசி ஆகியவை உயர்ந்தும் பாரதி ஏர்டெல் மற்றும் சன் பார்மா ஆகியவை சரிந்தும் முடிந்தன.
2025-26 ஆம் ஆண்டிற்கான பணவீக்க கணிப்பை ரிசர்வ் வங்கி முந்தைய 4 சதவிகிதத்திலிருந்து 3.7 சதவிகிதமாகக் குறைத்ததுள்ளது.
மீடியா 1% சரிவை தவிர மற்ற அனைத்து துறை குறியீடுகளும் உயர்ந்து முடிந்தன. ரியல் எஸ்டேட் 4% க்கும் அதிகமாகவும், மெட்டல், ஆட்டோ மற்றும் நுகர்வோர் சாதனங்கள் ஆகியவை தலா ஒவ்வொன்றும் 1% க்கும் அதிகமாகவும் உயர்ந்தன. வங்கிப் பங்குகளில் வலுவான செயல்திறனைப் பிரதிபலிக்கும் வகையில் நிஃப்டி வங்கி குறியீடு சாதனை உச்சத்தை எட்டியது.
எச்சரிக்கையான தொடக்கம் இருந்தபோதிலும், அமெரிக்க கட்டணக் கவலைகள் உள்பட கலவையான உலகளாவிய குறிப்புகளை சந்தை முறியடித்து, உச்சத்தை நெருங்கி முடிவடைந்தது.
டாடா இன்வெஸ்ட்மென்ட் பங்குகள் இன்றைய வர்த்தக அமர்வில் 8% உயர்ந்தன. அதன் துணை நிறுவனமான டாடா கேபிடல் ரூ.17,200 கோடி ஆரம்ப பொதுப் பங்கு வெளியீட்டிற்கு ஒழுங்குமுறை ஒப்புதலைப் பெற்றதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து உச்சத்தை பதிவு செய்தது.
ஆசிய சந்தைகளில் தென் கொரியா கோஸ்பி மற்றும் ஜப்பான் நிக்கேய் 225 குறியீடு உயர்ந்து வர்த்தகமான நிலையில் ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹாங் செங் ஆகியவை சரிந்தன.
அமெரிக்க சந்தைகள் நேற்று (வியாழக்கிழமை) சரிவுடன் முடிவடைந்தன.
அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (வியாழக்கிழமை) ரூ.208.47 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளனர்.
உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.28 சதவிகிதம் குறைந்து ஒரு பீப்பாய்க்கு 65.16 அமெரிக்க டாலராக உள்ளது.
இதையும் படிக்க: டிவிஎஸ் மோட்டாா் தலைவராகும் சுதா்ஷன் வேணு