செய்திகள் :

Retro நாயகிகள் 07 : 'சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசையா இருக்கு' - படாபட் ஜெயலட்சுமி நினைவுகள்

post image

மிழ் சினிமா எத்தனையோ பேரழகிகளை, நடிப்பில் உச்சம்தொட்ட திறமையான நடிகைகளைப் பார்த்திருக்கு. அதுல 70-கள்ல கண்களுக்கு இதமா ஓர் அழகான மூன்றாம் பிறை போல, சீக்கிரமே புகழ், வெகு சீக்கிரமே மரணம்னு ஜொலிச்சி மறைஞ்சவர் நடிகை படாபட் ஜெயலட்சுமி. தெலுங்குத் திரையுலகத்துல 1972-ல அறிமுகமான ஜெயலட்சுமி, தென்னிந்திய திரைப்படங்கள்ல மொத்தமா 8 வருடங்கள்தான் நடிச்சிருக்காங்க. ஆனா, அதுக்குள்ள அத்தனை நல்ல நல்ல கேரக்டர்கள்ல நடிச்சிருக்காங்க. இந்த `Retro நாயகிகள்’ சீரிஸ்ல, இன்னிக்கு 'படாபட் ஜெயலட்சுமி நடிச்சப்படங்கள், அதுல அவங்களோட கேரக்டர்கள்பத்தி மட்டுமல்லாம, அவங்களைப்பத்தி அவங்களே சொன்ன நிறைய விஷயங்களையும் தெரிஞ்சிக்கப் போறீங்க.

படாபட் ஜெயலட்சுமி
படாபட் ஜெயலட்சுமி

நிஜப்பெயர் நீரஜா. தாய்மொழி தெலுங்கு. அப்பா தசரத ராமா ரெட்டி சினிமாவுல துணை இயக்குநரா இருந்தவர். நடிகை ஜி.வரலட்சுமி இவங்களுக்கு அத்தை உறவு. சினிமா ஃபீல்டுக்குள்ள என்ட்ரி ஆகுறதுக்கான அத்தனை கதவுகளும் திறந்தேதான் இருந்திருக்கு நீரஜாவுக்கு. ஆனா, அவங்களுக்கோ படிப்புலதான் ஆர்வம்; நடிப்புல இல்ல. அப்பாவோட வேலை காரணமா ஆந்திராவுல இருந்து சென்னைக்கு வந்தவங்க, தி.நகர்ல இருக்கிற சாரதா வித்யாலயாவுலதான் படிச்சிருக்காங்க.

நீரஜா, படாபட் ஜெயலட்சுமியா சினிமாவை கலக்கிட்டு இருந்தப்போ ஒரு பேட்டியில, ''மாம்பலம் சாரதா வித்யாலயாவிலே தான் 1970 வரைக்கும் படிச்சேன். அந்தத் தெருவிலே நிறைய மரங்கள் இருக்கும். அந்த மரங்கள்ல கயிறு கட்டி ஊஞ்சல் ஆடணும்னு அப்போ ஓர் ஆசை மனசுல இருந்துச்சு. இப்போகூட அந்த ஆசை இருக்கு''ன்னு ஜாலியா சொல்லியிருப்பார். சின்னச்சின்ன சந்தோஷங்களுக்கும் ஏங்கின இந்த மனசுதான், அவங்களோட தற்கொலைக்குக் காரணமா இருந்திருக்குமோ என்னமோ...

''அவ்ளோ பிஸியா இருக்கிறவ நம்மளையெல்லாம் பார்க்க வந்திருக்காளேன்னு அன்னிக்கு நான் ரொம்ப ஆச்சரியப்பட்டேன். மறுநாள் அவள் தூக்க மாத்திரை சாப்பிட்டு இறந்துட்டான்னு தகவல் வந்தப்போ, என்னால தாங்கவே முடியல''

ஸ்கூல் படிப்பை முடிச்சிட்டு மேலே படிக்கணும்னு ஆசைப்பட்ட நீரஜா, குடும்பத்தோட பொருளாதார சூழ்நிலை காரணமா நடிக்க வந்திருக்காங்க. முதல் படம் 'இட்டாரு அம்மாயிலு'ங்கிற ஒரு தெலுங்குப்படம். நீரஜாங்கிற பேர்லேயே அறிமுகமாகுறாங்க. ஹீரோ நாகேஸ்வர ராவுக்கு தங்கை கேரக்டர். ரொம்ப சின்ன கேரக்டர்தான். ஆனா, கண்களை உறுத்தாத அவங்களோட அழகு, மலையாள இன்டஸ்ட்ரிக்கு பிடிச்சுப் போயிடுது. ரெண்டு வருஷம் தெலுங்கு, மலையாளம்னு பரபரன்னு நடிச்சிட்டிருந்தவங்களை தமிழ் சினிமாவுக்கு 'அவள் ஒரு தொடர்கதை'க்காகக் கூட்டிக்கிட்டு வர்றார் இயக்குநர் கே.பாலசந்தர்.

பெயரையும் 'ஜெயலட்சுமி'ன்னு மாத்தி வைக்கிறார். அந்தப் படத்துல நடிகை சுஜாதாவோட தோழியா, வாழ்க்கையை டேக் ஈஸியா எடுத்துக்கிற ஒரு கேரக்டர்ல நடிச்சிருப்பாங்க. அந்த கேரக்டரோட இயல்பை படம் பார்க்கிறவங்களுக்கு வெளிப்படுத்துறதுக்காக, ஜெயலட்சுமி பேசுற எல்லா டயலாக்ஸ் முடிவுலேயும் 'படாபட்'னு ஒரு வார்த்தையை சேர்த்திருப்பார் கே.பி. தோளை உயர்த்தி அலட்சியமான பாடி லாங்வேஜோட 'படாபட்'னு ஜெயலட்சுமி சொன்னது ரசிகர்களுக்கும் பிடிச்சுப்போச்சு; தமிழ் சினிமா இன்டஸ்ட்ரிக்கும் பிடிச்சுப்போச்சு. அப்புறம் என்ன நடந்துச்சுன்னு 2கே கிட்ஸுக்குக்கூட தெரியும்.

பர்சனலா, நட்புக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுக்கிறவங்க படாபட். முதல் படம் 'அவள் ஒரு தொடர்கதை'யில சுஜாதாவுக்கு தோழியா நடிச்சவங்க, அடுத்து மயங்குகிறாள் ஒரு மாது, அன்னக்கிளின்னு அடுத்தடுத்த படங்கள்லேயும் சுஜாதாவுக்கு தோழியா நடிச்சிருப்பாங்க. இவங்க ரெண்டு பேரும் நிஜத்துலேயும் குளோஸ் ஃப்ரெண்டா இருந்திருக்காங்க. அது எந்தளவுக்குன்னா, படாபட் தற்கொலை செஞ்சுக்கிட்டு இறக்கப்போறதை சுஜாதா முன்கூட்டியே கனவு கண்டு, அழுதுகிட்டே அவங்க வீட்டுக்குப் போற அளவுக்கு திக் ஃபிரெண்ட்ஸா இருந்திருக்காங்க.

முள்ளும் மலரும் படத்தில் படாபட் ஜெயலட்சுமி
முள்ளும் மலரும் படத்தில் படாபட் ஜெயலட்சுமி

நட்புன்னு சொல்றப்போ, படாபட் ஜெயலட்சுமியோட இன்னொரு நட்புப்பத்தியும் இங்கே சொல்லியே ஆகணும். படாபட் தற்கொலை செஞ்சுக்கிட்டு இறந்ததுக்கப்புறம், அவங்களோட சின்ன வயசு தோழி ஒருத்தங்க விகடன்ல பேசியிருக்காங்க. அதுல, ''எனக்கு அஞ்சு வயசிருக்கும்போது எங்க பக்கத்து வீட்டுக்கு நடிகை படாபட் ஃபேமிலி குடிவந்தாங்க. நாங்க ரெண்டு பேரும் ரொம்ப தோஸ்த் ஆயிட்டோம். காம்பௌண்ட் சுவர் ஏறிக் குதிச்சு, பக்கத்து வீட்டு மாமரத்துல மாங்காய், நெல்லிக்காய், புளியங்காய்னு அடிச்சித் தின்போம். லீவு நாள்ல ஏழாங்கல், ஐஸ் பாய் விளையாடுவோம். நடிகையான பிறகுகூட கர்வமில்லாம அடிக்கடி எங்க வீட்டுக்கு வருவா. பீச்சுக்குப்போய் நிறைய பேசுவோம். ஒருநாள் திடீர்னு வீட்டுக்கு வந்தா. ரொம்ப நேரம் எங்க எல்லார்கூடவும் பேசிட்டிருந்தா. அவ்ளோ பிஸியா இருக்கிறவ நம்மளையெல்லாம் பார்க்க வந்திருக்காளேன்னு அன்னிக்கு நான் ரொம்ப ஆச்சரியப்பட்டேன். மறுநாள் அவள் தூக்க மாத்திரை சாப்பிட்டு இறந்துட்டான்னு தகவல் வந்தப்போ, என்னால தாங்கவே முடியல''ன்னு அழுதிருக்காங்க.

தமிழ் சினிமாவுல கிட்டத்தட்ட 7 வருஷம்தான் நடிச்சிருக்காங்கன்னாலும், முதல் படம் 'அவள் ஒரு தொடர்கதை'யில வாழ்க்கையை ஜஸ்ட் லைக் தட்டா எடுத்துக்கிற இளம்பெண் கேரக்டர், 'மயங்குகிறாள் ஒரு மாது'வில் வழி மாறிப்போற தோழியை காப்பாத்துற கேரக்டர், 'கவிக்குயில்'ல தன் வீட்ல வேலைபார்க்கிற ஒரு நல்லவனை போராடி கல்யாணம் செஞ்சுக்கிற கேரக்டர், 'அன்னக்கிளி'யில நாயகனை ஒருதலையா காதலிச்சி கல்யாணம் செஞ்சுக்கிட்டு வருத்தப்படுற கேரக்டர், 'முள்ளும் மலரும்'ல கணவனை எதிர்த்து நாத்தனாரை அவ விரும்பினவனோட சேர்த்து வைக்கிற கேரக்டர், 'ஆறிலிருந்து அறுபது வரை'யில குடும்பத்துக்காக உயிரையே கொடுக்கிற கேரக்டர், 'நந்தா என் நிலா'வுல நண்பனோட காதலுக்காக உயிரைக் கொடுக்கிற கேரக்டர், 'நதியைத் தேடி வந்த கடல்'ல போதைக்கு அடிமையான கேரக்டர்னு நிறைய செலக்டிவான கேரக்டர்கள்ல நடிச்சிருக்காங்க படாபட். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்னு கிட்டத்தட்ட 60 படங்கள் வரைக்கும் நடிச்சிருக்காங்க இவங்க.

படாபட் ஜெயலட்சுமி
படாபட் ஜெயலட்சுமி

தாய்மொழி தெலுங்கா இருந்தாலும் தமிழை தெளிவா உச்சரிக்கக்கூடியவங்க படாபட். அதனால, டப்பிங்கும் பேசியிருக்காங்க. பிரபல டைரக்டர் மிருணாள் சென் 'ஒக ஊரி கதா ' என்ற தெலுங்குப் படத்தை டைரக்ட் செஞ்சார். அதுல நடிச்ச ஹீரோயினுக்கு தெலுங்கு சரியாக வரலையாம். படம் முடிஞ்ச பிறகு கதாநாயகிக்கு டப்பிங் செய்ய தீர்மானிச்சிருக்கார் மிருணாள் சென். டப்பிங் பேச படாபட் வந்திருக்கார். காலை 11 மணிக்கு டப்பிங் பேச ஆரம்பிச்சவர் மாலை 5 மணிக்குள்ள சுமார் ஐம்பது காட்சிகளுக்கான டயலாக்ஸை ஹீரோயினோட உதட்டசைவுக்கு ஏத்த மாதிரி சரியா பேசியிருக்கார். 'யார் இந்தப் பொண்ணு' அப்படின்னு ஆச்சரியப்பட்டுப்போன டைரக்டர் மிருணாள் சென், படாபட்டுக்கு சம்பளத்தோட 'நேம் கிரெடிட்'டும் கொடுக்க சொன்னாராம்.

அழகு, திறமை, அவற்றுக்காக அங்கீகாரம்னு எல்லாம் கிடைச்சும் படாபட் ஏன் 22 வயசுலேயே தற்கொலை செஞ்சுக்கிட்டாங்க..? அவங்க தற்கொலை செஞ்சுக்கிறதுக்கு சில காலம் முன்னாடி ஒரு பேட்டி கொடுத்திருக்காங்க. அதுல, ''கல்யாணம் செஞ்சுக்கிட்டு செட்டில் ஆகணும்னு ஆசையா இருக்கு. நான் லவ் பண்றவர் வீட்டு மனுஷங்களுக்கு நான் நடிக்கிறது புடிக்கல. ஆனா, இப்போதைக்கு நடிப்புக்கு முழுக்குப்போட முடியாதுங்கிறதுதான் என்னோட வீட்டு சூழ்நிலை. இன்னும் கொஞ்ச காலம் நடிச்சி என் வீட்டுக்கு தேவையானது எல்லாத்தையும் செஞ்சிட்டு சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கணும். அவ்ளோ தான்''னு மனசுவிட்டு அந்த பேட்டியில பேசியிருக்காங்க. ஆனா, அதுக்கு அப்புறமும் இவங்களோட காதலுக்கு ரெண்டு குடும்பத்துலேயும் தொடர்ந்து எதிர்ப்பு வந்திருக்கு. காதலை மறக்க முடியல. விளைவு, ஷூட்டிங் ஸ்பாட்ல தனிமையில இருக்க ஆரம்பிச்சிருக்காங்க. தாங்க முடியாத மனஅழுத்தத்துல சோர்வாகவே இருந்தவங்க ஒருநாள் கைநிறைய தூக்க மாத்திரைப்போட்டு மொத்த தூங்கப் போயிருக்காங்க.

அன்னக்கிளி படத்தில் படாபட் ஜெயலட்சுமி
அன்னக்கிளி படத்தில் படாபட் ஜெயலட்சுமி

படாபட் ஜெயலட்சுமி இறந்து கிட்டத்தட்ட 45 வருஷங்கள் ஆகிடுச்சு. ஆனா, இன்னமும் அவங்க நடிச்ச படங்கள் அவங்களோட திறமையை நமக்கெல்லாம் சொல்லிக்கிட்டே இருக்கு... உங்களை மறக்க முடியாது மேம்..!

(நாயகிகள் வருவார்கள்)

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Thug Life: டிரெண்டிங்கில் இருக்கும் ”முத்த மழை” பாடலை பாடிய மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜின் மகள்!

மணிரத்தினம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா, ஜோஜு ஜார்ஜ் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தக் லைஃப்’ திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது. ’நாயகன்’ படத்திற்கு பிறகு கிட்டதட்ட 38 ஆண்டுகள் கழித்து கமல்ஹா... மேலும் பார்க்க

Thug Life: கன்னட மொழி விவகாரம்; நேரடியாக மன்னிப்பு கேட்காத கமல் - படம் வெளியாவதில் சிக்கல்!

‘தக் லைஃப்’ படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கமல்ஹாசன் "தமிழ் மொழியிலிருந்து தான் கன்னடம் பிறந்ததாக” கருத்து தெரிவித்தது, பெரும் சர்ச்சையையும், விவாதத்தையும் ஏற்படுத்தியது. கர்நாடக முதல்வர் உள்பட ப... மேலும் பார்க்க

ஹேமா கமிட்டி அறிக்கை: `அவசரம் இல்லையா?' - கேரள அரசு குறித்து நடிகை பார்வதி விமர்சனம்!

ஹேமா கமிட்டி அறிக்கையை கேரள அரசு கையாளும் விதம் குறித்து நடிகை பார்வதி திருவோத்து தனது சமூக வலைதளத்தில் விமர்சித்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பதிவில் நடிகை பார்வதி குறிப்பிட்டதாவது "முதல்வர் பினராயி வ... மேலும் பார்க்க

Chinmayi: ``கர்மாவும் கடவுளும்.. பதிலடி கொடுக்கட்டும்'' - பாடகி சின்மயி முகநூல் பதிவு வைரல்

மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள தக் லைஃப் படத்தில் `முத்த மழை' பாடல் பட்டிதொட்டி எங்கும் ஹிட்அடித்திருக்கிறது. இந்தப் பாடலை தமிழில் பாடகி தீ (Dhee) பாடியுள்ளார். ஆனால், சமீபத்... மேலும் பார்க்க

Retro நாயகிகள் 06: `வீடு தான் சொர்க்கம்; எனக்கு உறவுகள் முக்கியம்!' - நடிகை லதா பர்சனல்ஸ்

தமிழ் சினிமா எத்தனையோ பேரழகிகளை, நடிப்பில் உச்சம்தொட்ட திறமையான நடிகைகளைப் பார்த்திருக்கு. அதுல 70-கள்ல அழகிலும் நடிப்பிலும் ஜொலித்த நாயகிகள் எப்படி சினிமாத்துறைக்கு வந்தாங்க; என்னென்ன சாதிச்சாங்க; அவ... மேலும் பார்க்க

`எங்க மனநிலையையும் புரிந்துக்கொள்ளுங்கள்!’ - குழந்தை குறித்த கேள்விகளுக்கு சாந்தனு - கிகி பதில்

இயக்குநர் பாக்கியராஜ், நடிகை பூர்ணிமா ஆகியோரின் மகன் சாந்தனு. இவர் தமிழ் சினிமாவில் சக்கரகட்டி என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதன் பின்னர் சித்து பிளஸ் 2, அம்மாவின் கைபேசி, இராவண கோட்டம் என... மேலும் பார்க்க