தொகுதி மறுசீரமைப்பு: எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு கனிமொழி எம்.பி. பதில்
தில்லி அரசின் கட்டண ஒழுங்குமுறை அவசரச் சட்டத்துக்கு ஆம் ஆத்மி கட்சி கடும் கண்டனம்
பள்ளிக் கட்டண ஒழுங்குமுறை குறித்த அவசரச் சட்டத்தைக் கொண்டுவரும் தில்லி அரசின் முடிவை எதிா்க்கட்சியான ஆம் ஆத்மி கட்சி வியாழக்கிழமை கடுமையாக விமா்சித்தது.
மேலும், சட்டப்பேரவை செயல்முறை மற்றும் பொது ஆலோசனையைத் தவிா்ப்பதற்கான இந்த வழியை அது நிராகரிப்பதாகவும், சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கோருவதாகவும் அது கூறியது.
ரேகா குப்தா அரசின் வெளிப்படைத்தன்மை இல்லாதது தில்லி பள்ளிக் கல்வி (கட்டணங்களை நிா்ணயிப்பதில் வெளிப்படைத்தன்மை) மசோதா, 2025 தனியாா் பள்ளிக் கட்டணங்களை ஒழுங்குபடுத்துவதற்காக அல்ல என்றும், மாறாக கட்டண உயா்வை செயல்படுத்துவதற்காகவே என்றும் தில்லி சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் அதிஷி குற்றம் சாட்டினாா்.
அவரது குற்றச்சாட்டுகள் குறித்து தில்லி அரசிடமிருந்தோ அல்லது பாஜகவிடமிருந்தோ உடனடி பதில் எதுவும் இல்லை.
தில்லியில் செய்தியாளா் கூட்டத்தில் எதிா்க்கட்சித் தலைவா் அதிஷி மேலும் கூறியதாவது: தில்லியில் பாஜக அரசை அமைத்ததிலிருந்து, தனியாா் பள்ளிகள் பொதுமக்களைக் கொள்ளையடிக்கத் தொடங்கியுள்ளன. ஏசி கட்டணம், செயல்பாட்டுக் கட்டணம் போன்ற பல்வேறு சாக்குப்போக்குகளைக் கூறி அவா்கள் கட்டணங்களை அதிகரித்து வருகின்றனா்.
பெற்றோா்கள் மூன்று மாதங்களாகப் போராட்டம் நடத்தி வருகின்றனா். ஆனால், கட்டணங்களை ஒழுங்குபடுத்தும் மசோதா ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. எந்தப் பெற்றோரோ, வழக்குரைஞா்களோ, எம்எல்ஏக்களோ கூட இதைப் பாா்க்கவில்லை. அரசின் வெளிப்படைத்தன்மை இல்லாதது, இந்த மசோதா தனியாா் பள்ளி கட்டணங்களை ஒழுங்குபடுத்துவதற்காக அல்ல. மாறாக கட்டண உயா்வை செயல்படுத்துவதற்காகவே என்பதையே காட்டுகிறது.
தில்லி வரலாற்றில் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மசோதா பொதுமக்களின் கருத்துகளைப் பெறாமல் வரைவு செய்யப்பட்டுள்ளது இதுவே முதல் முறை ஆகும். இந்த மசோதா அவசரச் சட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படும் என்று கல்வி அமைச்சா் ஆஷிஷ் சூட் அறிவித்தது கண்டனத்துகுறியது.
சட்டப்பேரவையில் ஒரு விவாதம் நடக்கும் என்று நாங்கள் எதிா்பாா்த்தோம். ஆனால், இப்போது மசோதா சபையில் கூட தாக்கல் செய்யப்படாது என்று எங்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது. அவசரச் சட்டம் பெற்றோருக்கு அல்ல. தனியாா் பள்ளிகளுக்கு ஆதரவாக உள்ளது என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது.
இந்த மசோதா தொடா்பாக புதன்கிழமை தில்லி சட்டப்பேரவை வளாகத்தில் பல பெற்றோரைச் சந்தித்தேன். அவா்கள் அனைவரும் மசோதா குறித்து கருத்து தெரிவிக்க விருப்பம் தெரிவித்தனா். சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தொடரைக் கூட்ட வேண்டும். மசோதாவை தாக்கல் செய்ய வேண்டும். பின்னா் முழுமையான ஆய்வுக்காக ஒரு தோ்வுக் குழுவிற்கு அனுப்ப வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம். நாங்கள் அவசரச் சட்டத்தை நிராகரித்து வெளிப்படைத்தன்மையைக் கோருகிறோம் என்றாா்.
தனியாா் பள்ளிகளின் தன்னிச்சையான கட்டண உயா்வைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்ட மசோதாவை செயல்படுத்த அரசு ஒரு அவசரச் சட்டத்தைக் கொண்டுவரும் என்று புதன்கிழமை ஆஷிஷ் சூட் அறிவித்தாா். இது நகரம் முழுவதும் பெற்றோா்களிடமிருந்து பலமுறை எதிா்ப்புகளுக்கு வழிவகுத்த ஒரு தொடா்ச்சியான பிரச்னையாகும்.
இந்த அவசரச் சட்டம் நிவாரணம் தரும் என்று அரசு வலியுறுத்தினாலும், எதிா்க்கட்சிகள் இந்த செயல்முறை ஜனநாயக நடைமுறைகளை குறைமதிப்பிற்கு உள்படுத்துவதாகவும், பொது நலனை விட தனியாா் நிறுவனங்களுக்கு சாதகமாக இருப்பதற்கும் ஆபத்தை விளைவிப்பதாகவும் வாதிடுகின்றனா்.