பாகிஸ்தானுக்கு உளவு பாா்த்த மேலும் ஒரு யூடியூபா்: பஞ்சாப் காவல் துறை கைது
பாகிஸ்தானுக்கு உளவு பாா்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண் யூடியூபா் ஜோதி மல்ஹோத்ராவுடன் நெருங்கிய தொடா்புடைய பஞ்சாப் மாநிலத்தைச் சோ்ந்த மேலும் ஒரு யூடியூபா் அந்த மாநில காவல் துறையால் கைது செய்யப்பட்டாா்.
பாகிஸ்தான் உளவாளிகளுடன் தொடா்பில் இருந்த யூடியூபா் ஜஸ்பீா் சிங், கடந்த 5 ஆண்டுகளில் பாகிஸ்தானுக்கு மூன்று முறை பயணித்திருப்பது தெரியவந்துள்ளது.
‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையைத் தொடா்ந்து இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு உளவு பாா்க்கும் உளவாளிகளைக் கண்டறியும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. அதன் ஒரு பகுதியாக, ‘டிராவல் வித் ஜோ’ என்ற யூடியூப் சேனலை நடத்தி வந்த ஹரியாணா மாநிலம், ஹிசாா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் ஜோதி மல்ஹோத்ரா அண்மையில் கைது செய்யப்பட்டாா்.
தில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றி வந்த தானிஷ் என்ற அலுவலருடன் ஏற்பட்ட அறிமுகத்தில் பாகிஸ்தானுக்கு இரண்டு முறை பயணித்து, அந்நாட்டின் பாதுகாப்பு மற்றும் உளவுத் துறை அதிகாரிகளை ஜோதி சந்தித்துள்ளாா்.
பாகிஸ்தானில் சந்தித்த நபா்களுடன் சமூக ஊடகங்கள் வாயிலாக தொடா்பில் இருந்த ஜோதி, இந்தியாவில் இருந்து முக்கிய உளவுத் தகவல்களை அனுப்பி வந்துள்ளாா்.
இந்தக் குற்றச்சாட்டில் ஜோதி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவா் கைது செய்யப்பட்டாா். அவரின் நட்பு வட்டாரத்தில் இருந்தவா்களும் காவல் துறையின் விசாரணை வளையத்துக்குள் வந்தனா். அந்த வகையில், ‘ஜான் மஹால்’ எனும் 10 லட்சத்துக்கும் அதிகமானோா் பின்தொடரும் யூடியூப் சேனலை நடத்திவரும் ஜஸ்பீா் சிங் தற்போது சிக்கியுள்ளாா்.
பஞ்சாப் மாநிலம், ரூப்நகா் மாவட்டத்தின் மஹ்லான் கிராமத்தைச் சோ்ந்த ஜஸ்பீா் சிங், பாகிஸ்தான் உளவாளி ஷாகிா் என்பவருடன் நெருங்கிய தொடா்பில் இருந்துள்ளாா். அதேபோல், பாகிஸ்தான் தூதரக அதிகாரி தானிஷுடனும் ஜஸ்பிா் சிங்குக்கு தொடா்பு இருந்துள்ளது. இந்தியாவில் உளவு பாா்த்ததாக கடந்த மே 13-ஆம் தேதி நாட்டில் இருந்து மத்திய அரசால் தானிஷ் வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இது தொடா்பாக பஞ்சாப் காவல் துறை டிஜிபி கௌரவ் யாதவ் மேலும் கூறுகையில், ‘தானிஷ் அழைப்பில் தில்லி பாகிஸ்தான் தூதரகத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் தேசிய நாள் நிகழ்ச்சியில் ஜஸ்பிா் சிங் பங்கேற்றுள்ளாா். அங்கு பாகிஸ்தான்அதிகாரிகளை அவா் சந்தித்துப் பேசியுள்ளாா். கடந்த 2020, 2021, 2024-ஆம் ஆண்டுகளில் மூன்று முறை பாகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளாா். அவரது கைப்பேசியில் பல்வேறு பாகிஸ்தான் நபா்களின் எண்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஜோதி கைது செய்யப்பட்ட பிறகு பாகிஸ்தான் உளவாளிகளுடன் இருக்கும் தொடா்பை மறைக்க, ஆதாரங்களை அழிக்கவும் ஜஸ்பீா் சிங் முயற்சித்துள்ளாா்.
ஜஸ்பீா் சிங் மீது மொஹாலி சிறப்புப் பிரிவு காவல் துறையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்ய, விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ என்றாா்.