ரயில்வே வளர்ச்சியில் புதிய சாதனை: பிரதமர் மோடியின் கனவு நனவாகியது!
ஜம்மு-காஷ்மீருக்கு ரயில் இணைப்பு மூலம் நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் ரயில் பாலம் என்ற கனவு பிரதமர் நரேந்திர மோடியால் நனவாகியுள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு முதல்முறையாக ஜம்மு - காஷ்மீருக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, ரயில்வே கட்டுமானங்கள் உள்பட பல்வேறு நலத்திட்டப் பணிகளை இன்று தொடங்கிவைத்தார்.
கத்ரா ரயில் நிலையத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற மோடி, ஜம்முவையும் ஸ்ரீநகரையும் இணைக்கும் உலகின் உயரமான செனாப் ரயில் பாலத்தைத் திறந்துவைத்தார். தொடர்ந்து, நாட்டின் முதலாவது கம்பி வட அன்ஜி ரயில் பாலத்தையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
இதுதொடர்பாக ரயில்வே அமைச்சர் கூறுகையில்,
ஜம்மு-ஸ்ரீகர்-பாரமுல்லா ரயில் பாதை என்ற கனவு பல ஆண்டுகளாக இருந்து வந்தது. ரயில்வே வளர்ச்சியில் புதிய சாதனையை எட்டியுள்ளது. பிரதமர் மோடியின் கனவு நனவாகியுள்ளது.
உயரமான மலைகள், ஆழமான பள்ளத்தாக்குகள் போன்ற பல சிரமங்களை கடந்து வந்தோம். இனி நாம் இயற்கையை எதிர்த்துப் போராட வேண்டியதில்லை.
பாலங்கள், சுரங்கப்பாதைகளின் வலைப்பின்னல் மூலம், இந்த ரயில் பாதை ஒரு யதார்த்தமாக மாறியுள்ளது. பிரதமரின் விருப்பம், உறுதியான முயற்சி, கூர்மையான கவனம் காரணமாகவே சாத்தியமானது. இது ஒரு வரலாற்று சிறப்பு வாய்ந்த நாள் என்று அவர் கூறினார்.
காஷ்மீா் பகுதிக்கு நேரடி ரயில் போக்குவரத்தை அளிக்கும் 272 கி.மீ. தொலைவு கொண்ட உதம்பூா்-ஸ்ரீநகா்-பாரமுல்லா ரயில் வழித்தட திட்டம் கடந்த 1997-இல் தொடங்கப்பட்டது. இதில் 209 கி.மீ. தொலைவு வழித்தடம் பல்வேறு கட்டங்களாகத் திறக்கப்பட்டது. இறுதியாக, சங்கல்தன்-ரியாசி இடையிலான 46 கி.மீ. வழித்தடம் கடந்தாண்டு ஜூனிலும், ரியாசி-கத்ரா இடையிலான 17 கி.மீ. வழித்தடம் கடந்த ஆண்டு டிசம்பரிலும் நிறைவடைந்தது. ரூ.43,780 கோடி செலவில் கட்டமைக்கப்பட்ட இந்த வழித்தடத்தில் 36 சுரங்கங்களும் (119 கி.மீ. தொலைவு), 943 பாலங்களும் அமைந்துள்ளன. இதில் 12.77 கி.மீ. தொலைவுள்ள டி-50 சுரங்கம், நாட்டிலேயே மிகப் பெரிய ரயில் சுரங்கம் என்ற சிறப்புக்குரியதாகும்.