போரூர் - பூந்தமல்லி இடையே ஓட்டுநரில்லா மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்!
சென்னை: போரூர் - பூந்தமல்லி இடையே சுமார் 9.5 கிலோ மீட்டர் தொலைவுள்ள வழித்தடத்தில் ஓட்டுநரில்லா மெட்ரோ ரயிலை இயக்கி சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் அமைக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் நான்காவது வழித்தடத்தில் முதற்கட்டமாக, பூந்தமல்லி - போரூர் (அப் லைன்) வழித்தடத்தில் 30 முதல் 35 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில்கள் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
தற்போது மறுமார்க்கத்தில் அதாவது போரூரில் இருந்து பூந்தமல்லி (லோ லைன்) வரையிலான பாதையில் ஓட்டுநரில்லா ரயிலை இயக்கி முதற்கட்ட சோதனை நடத்தப்பட்டது. முதல் சோதனை ஓட்டம் என்பதால் 20 முதல் 25 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில் வெற்றிகரமாக இயக்கப்பட்டுள்ளது.
பூந்தமல்லி பணிமனை முதல் போரூர் வரை 9.5 கிலோ மீட்டர் தொலைவுக்கு அமைக்கப்பட்டிருக்கும் மெட்ரோ ரயில் வழித்தடத்தில் ஓட்டுநரில்லா மெட்ரோ ரயிலை இயக்கி சோதிக்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே பூந்தமல்லி - போரூர் வழித்தடத்தில் சோதனை நடந்த நிலையில் இம்முறை மறுமார்க்கத்தில் சோதனை ஓட்டம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில் திட்டம்
சென்னையில் 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116 கி.மீ. தூரத்துக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இதில் முக்கிய வழித்தடமான கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி நெடுஞ்சாலை இடையேயான வழித்தடத்தில், கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப் பாதையாகவும், கோடம்பாக்கம் பவா் ஹவுஸ் முதல் பூந்தமல்லி நெடுஞ்சாலை வரை மேம்பாலப் பாதையாகவும் அமைக்கப்பட்டு வருகிறது.
இப்பாதையில், பூந்தமல்லி - போரூா் இடையே பல இடங்களில் ரயில் பாதை அமைக்கும் பணி, பொறியியல் கட்டுமானப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. பூந்தமல்லி - போரூா் இடையே வரும் டிசம்பரில் ரயில் சேவை தொடங்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. எனவே இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இந்த வழித்தடத்தில் கடந்த ஒரு சில மாதங்களாக சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.
இந்த வழித்தடத்தில் ஒரு பகுதியாக பூந்தமல்லி - முல்லைத்தோட்டம் இடையே 3 கி.மீ. தூரத்தில் அமைக்கப்பட்டுள்ள மேம்பாலப் பாதையில் ஓட்டுநா் இல்லாத மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. தற்போது மறுமார்க்கத்தில் முதல்கட்ட சோதனை ஓட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து பூந்தமல்லி - போரூா் மெட்ரோ ரயில் சேவை மக்கள் பயன்பாட்டுக்கு டிசம்பா் மாத இறுதிக்குள் கொண்டுவர வாய்ப்புள்ளதாகவும் மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.