அயோத்தி ராமர் கோயில் பிரசாதம்! கோடிக்கணக்கில் மோசடி
அயோத்தி ராமர் கோயில் பிரசாதம் எனக் கூறி, கோடிக்கணக்கில் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.
உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் அயோத்தியில் கடந்தாண்டு ஜனவரி மாதம் 22 ஆம் தேதியில், பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் ஸ்ரீ பாலராமரின் பிராணப் பிரதிஷ்டை கோலாகலமாக நடைபெற்றது. இந்தக் கோயிலுக்கு, நாடு முழுவதிலும் இருந்து நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் மேற்கொள்ள வருகை தருகின்றனர்.
இந்த நிலையில், கோயிலில் இருந்து பிரசாதம் வழங்குவதாகக் கூறி, மோசடி செய்யப்பட்டதாக அயோத்தி காவல் நிலையங்களில் புகார்கள் பெறப்பட்டன. இதனைத் தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், கோயில் நிர்வாகத்தின் பெயரில், உத்தரப் பிரதேசத்தின் காஸியாபாதைச் சேர்ந்த ஆஷிஷ் சிங் என்பவர்தான் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.
ராமர் கோயில் குடமுழுக்கு முன்னதாகவே, ஓர் இணையதளத்தை உருவாக்கி, 2023 டிசம்பர் 19 முதல் 2024 ஜனவரி 12 ஆம் தேதிவரையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் என 6,30,695 பேரிடம் பிரசாதம் வழங்குவதாக உறுதியளித்திருக்கிறார்.
இந்தியாவில் உள்ள பக்தர்களுக்கு பிரசாதம் ரூ. 51 ஆகவும், வெளிநாட்டில் உள்ள பக்தர்களுக்கு 11 டாலராகவும் நிர்ணயித்து, ரூ. 3 கோடியே 85 லட்சம் வசூலித்துள்ளார். இந்த நிலையில்தான், தங்களுக்கு பிரசாதம் கிடைக்கப் பெறவில்லை என்று மோசடியில் சிக்கிய பக்தர்கள் புகார் அளித்தனர்.
தற்போது, அமெரிக்காவில் வசித்து வந்த ஆஷிஷ் சிங்கை கைது செய்த காவல்துறையினர், அவரிடமிருந்த பாஸ்போர்ட் உள்பட மடிக்கணினிகள், மொபைல், அடையாள அட்டைகள், ஓட்டுநர் உரிமம், அமெரிக்காவில் பயன்படுத்தும் டெபிட் கார்டு உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்தனர்.