சமூக வலைத்தளங்கள்.. காவல்துறைக்கு டிஜிபி சங்கர் ஜிவால் அறிவுறுத்தல்!
சென்னை: காவல்துறைதான், இதுவரை மக்களுக்கு சமூக வலைத்தளங்கள் குறித்த அறிவுறுத்தல்களை வழங்கும், தற்போது காவல்துறையினருக்கே, சமூக வலைத்தளங்கள் குறித்து டிஜிபி சங்கர் ஜிவால் பல முக்கிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் காவல்துறையினர் பேசுவது, முக்கிய தகவல்களை பகிர்ந்து கொள்வது போன்றவற்றில் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்குமாறு டிஜிபி அறிவுறுத்தியிருக்கிறார்.
அதன்படி, அவர் வெளியிட்டிருக்கும் அறிவுறுத்தலில், சமூக வலைதளங்களில் சீருடையுடன் புகைப்படங்களை பதிவு செய்ய வேண்டாம் என காவல் துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், காவல்துறையில் இருப்பவர்கள், தனிப்பட்ட முறையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி, யூடியூப் நிகழ்ச்சிகளில் பங்கேற்க முன் அனுமதி பெற வேண்டும்.
அவ்வாறு அனுமதி பெற்றாலும்கூட, வழக்குகள் பற்றிய ரகசியம் காக்க வேண்டிய தகவல்களை யூடியூப் நேர்காணலின்போது காவல்துறை அதிகாரிகள் பகிர வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தேவைப்பட்டால் நிகழ்ச்சிகளில் பேசக்கூடிய தகவல்களை உயர் அதிகாரிகளிடம் காட்டி அனுமதி பெற்ற பிறகே பேச வேண்டும் என போலீஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.