முதலில் சாதிவாரி கணக்கெடுப்பு நடைபெறட்டும்: திருமாவளவன் பேட்டி
முதலில் சாதிவாரி கணக்கெடுப்பு நடைபெறட்டும், பின்னர் தொகுதி மறுவரையறை தொடர்பாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்போம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
மாநிலங்களவைத் தேர்தலில் திமுக வேட்பாளர்களாக பி. வில்சன், எஸ்.ஆர். சிவலிங்கம், கவிஞர் சல்மா ஆகியோர் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர். கூட்டணியில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கமல் ஹாசனும் வேட்புமனு தாக்கல் செய்தார்.
இந்த நிகழ்வில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய திருமாவளவன்,
"ஜூன் 14 ஆம் தேதி திருச்சியில் விசிக சார்பில் 'மதச்சார்பின்மை காப்போம்' பேரணி நடைபெற உள்ளது. மதச்சார்பின்மைக்கு மத்திய பாஜக அரசால் பெரும் தீங்கு சூழ்ந்துள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாப்பதன் மூலம் குறிப்பாக மதச்சார்பின்மை கோட்பாட்டைப் பாதுகாப்பதன் மூலம்தான் ஒரு புதிய பாகுபாடற்ற இந்தியாவை உருவாக்கிட இயலும். ஆகவே அனைத்து ஜனநாயக சக்திகளும் தேசிய அளவில் ஒருங்கிணைக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது.
திருச்சிராப்பள்ளியில் விசிக ஒருங்கிணைக்கும் இந்த பேரணியில் ஜனநாயக சக்திகள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுக்கிறேன்.
விரைவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று சுற்றறிக்கை வெளியாகி உள்ளது. அது சாதிவாரி கணக்கெடுப்பு என்பதன் அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறும் என்ற அறிவிப்பும் வெளியாகி இருக்கிறது. அது முடிந்தபின்புதான் தொகுதி மறுவரையறை செய்வது தொடர்பாக குழுவை மத்திய அரசு அமைக்கும்.
அப்போது தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்கள் பாதிக்கக் கூடாது என்கிற கோரிக்கையை கட்டாயமாக தமிழ்நாட்டில் இருந்து முன்வைக்கப்படும், அழுத்தம் கொடுக்கப்படும்.
முதலில் மக்கள் தொகை கணக்கெடுப்பு சாதிவாரி அடிப்படையில் வெற்றிகரமாக நடைபெற வேண்டும்" என்று பேசினார்.
இதையும் படிக்க | கரோனா: கர்ப்பிணிகள் முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்!